என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 21 மார்ச், 2014

VGK 10 ] மறக்க மனம் கூடுதில்லையே !




இது ’சிறுகதை விமர்சனப்போட்டி’க்கான கதை

விமர்சனங்கள் வந்து சேர வேண்டிய 

கடைசி நாள்: 27.03.2014 
வியாழக்கிழமை

இந்திய நேரம் இரவு எட்டு மணி வரை மட்டும்.

விமர்சனம் அனுப்ப வேண்டிய 
மின்னஞ்சல் முகவரி: 
valambal@gmail.com 
[ V A L A M B A L @ G M A I L . C O M ]


REFERENCE NUMBER:  VGK 10

போட்டி பற்றிய மற்ற விபரங்களுக்கான இணைப்பு:




மறக்க மனம் 

கூடுதில்லையே ..... !


சிறுகதை

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-

மெரினா கடற்கரை. நானும் என் மனைவியும் கடற்கரையில் காத்திருக்கிறோம். கடல் அலைகள் மிகுந்த ஆரவாரத்துடன் பாய்ந்து வந்து எங்கள் பாதங்களை ஜில்லென முத்தமிட்டு வெண்மையான நுரைகளுடன் திரும்புகின்றன. 

இன்பம் ஒருபுறமும், பயம் ஒருபுறமுமாக இருவரும் ஒருவரை ஒருவர் கெட்டியாக பிடித்துக்கொள்கிறோம், அலை எங்களை அடித்துச் செல்லாது என்ற எண்ணத்திலோ, ஒருவேளை அடித்துச்சென்றாலும் ஒருவரை விட்டு ஒருவர் பிரியக்கூடாது என்ற எண்ணத்திலோ.

தூரத்தில் மிகப்பெரிய கார் ஒன்று பார்க் செய்யப்பட்டு, ஒரு பெண்ணும் அவளின் தந்தையும் இறங்கி வருவது தெரிகிறது. அந்தக்காரைத்தொடர்ந்து எங்கள் காரிலிருந்து எங்கள் மகன் இறங்கி வருவதும் தெரிகிறது. காத்திருந்த நாங்கள் அவர்களை நோக்கிப் புறப்படுகிறோம். 

நெருக்கத்தில் அந்தப்பெண்ணைப்பார்த்ததும் நான் ஸ்தம்பித்துப்போய் நின்று விட்டேன். கடல் அலைகளை விட என் எண்ண அலைகள் ஆகாய விமான வேகத்தில் என்னை என் சொந்த ஊரான திருச்சிக்கு அழைத்துப்போகிறது. 

40 ஆண்டுகளுக்கு முந்திய சொந்தக்கதை; இன்று நினைத்தாலும் உடலும் உள்ளமும் உவகை கொள்கிறது.



 



[2]

அப்போது எனக்கு அலைபாயும் 21 வயது. மணி, ராம்கி, மாது, ரத்தினம், சேகர், பாபு, வெங்கிட்டு என பல நண்பர்கள். தெரு விளக்கடியில் இரவு 10 மணிக்குமேல் கூடி பல்வேறு விஷயங்களை விவாதித்துவிட்டு பிறகே படுக்கச்செல்வோம். 

டி.வி., கம்ப்யூட்டர், செல்போன் என்ற எந்த விதமான குறுக்கீடுகளும் இல்லாத காலம். வாசக சாலையில் வாங்கி வரும் புத்தகங்கள், மைதானம் சென்று விளையாட்டு, ரேடியோ, சினிமா, சிலசமயம் சீட்டுக்கச்சேரி தவிர, இது போன்ற ஆருயிர் நண்பர்களின் நேருக்கு நேர் சந்திப்பு தான் மிகச்சிறந்த பொழுதுபோக்கு. 

அவரவர் வீட்டின் ஆயிரம் சமூக, பொருளாதார பிரச்சனைகள் பற்றி அலசுதல், நடிகர்திலகம் சிவாஜி, மக்கள்திலகம் எம்.ஜி.ஆர்., படங்கள் பற்றிய விமர்சனங்கள், இடையிடையே கட்டிளம் காளை வயதில் தானே வந்துபோகும் எங்களின் ஏக்கங்களும், ஒரு சிலரின் காதல் அனுபவங்களும் எனப்பேசப்பேச நள்ளிரவு வெகு நேரம் ஆகி பிரிய மனமில்லாமல் பிரிந்து சென்று அவரவர் கூட்டை அடைவோம். 
.
எல்லோருமே படித்து, ஏதோ ஒரு கிடைத்த வேலையில் இருந்துகொண்டு, நிரந்தர வருவாய்க்கான வேலை வாய்ப்பைத்தேடி அலைந்த நேரம் அது. எல்லோருமே வறுமைக்கோட்டுக்கு கீழேயுமில்லாமல், மேலேயும் இல்லாமல் கோட்டை ஒட்டியேயுள்ள, ஓட்டு வீடுகளில் ஒண்டிக்குடித்தனமாக இருந்த நேரம் அது. 

எங்கள் குடியிருப்பில் மிகச்சிறியதாக சுமார் ஐம்பது ஓட்டு வீடுகள். அவ்வாறான குடியிருப்புப் பகுதிகள் ஸ்டோர் என்று அழைக்கப்படும். எங்கள் வீட்டின் உட்புறத்தை விட அதிகமான புழங்கும் இடங்கள் எங்கள் வீடுகளைச்சுற்றி இருக்கும்.

நிம்மதியாகப் படிக்கவும், படுக்கவும், குளிக்கவும் பிரைவசி இல்லாத அந்தக்குடியிருப்பில் காதலில் கசிந்துருக வாய்ப்புகள் மிகவும் குறைவு. பள்ளிக்கூடம், கடைத்தெரு, கோயில்கள், பொதுக்குழாயடி, பொதுக்கிணற்றடி, பொதுக்கழிப்பிடம் செல்லும் பாதை என பொதுவான இடங்களிலே தான், ஒருவரை ஒருவர் மின்னல் போல் பார்த்து மறைவோம்.

அதற்குள் பல பொதுமக்களின் கழுகுப்பார்வைகள் எங்களை நோட்டமிடும். இருப்பினும் அதில் ஒரு நொடிப்பொழுது, மின் அதிர்வுபோல ஒருவித சுகானுபவமும் ஏற்படுவது உண்டு. 

பலர் வீடுகளில் மின் விளக்கே கிடையாது. கேஸ் அடுப்பும் வராத காலம் அது. சிம்னி, அரிக்கேன் லைட், திரி ஸ்டவ்,  பம்ப் ஸ்டவ், குமுட்டி, கரி அடுப்பு, விறகு அடுப்பு, ரம்பத்தூள் அடுப்பு என்று அவரவர் ஏதேதோ உபயோகிப்பார்கள்.

ஒரு பழைய பாடாவதி சைக்கிளோ, ஒரு கயிற்றுக்கட்டிலோ, ஒரு மர பீரோவோ இவற்றில் ஏதாவது ஒன்று வைத்திருப்பவர் அந்தக்குடியிருப்பில் சற்று வசதியானவர் என்பதை வெளிப்படுத்தும் அளவுகோலாக இருந்தது.

அந்த ஸ்டோரில் இறைக்க இறைக்க நீர் ஊறக்கூடிய, என்றுமே வற்றாத ஒரு பெரிய பொதுக்கிணறு உண்டு. அந்தக்கிணற்றைசுற்றி பாறாங்கற்கள் பதிக்கப்பட்ட ஜில்லென்ற சமதரை. இரவுப்பொழிதில் கிணற்றடியிலும், கிணற்றைச்சுற்றியுள்ள சிமெண்ட் தரையிலுமாக, நிறைய ஆண்கள் கையில் ஒரு விசிறியுடன், துண்டை விரித்துப்படுத்திருப்பார்கள். 

இவ்வாறு படுத்திருப்பவர் பலரின் இருமல், தும்மல், ஏப்பம், கொட்டாவி, குறட்டை முதலியவற்றால், அந்தக்குடியிருப்பில் திருட்டு பயமே கிடையாது. திருடிச்செல்லும் அளவுக்கு விலை உயர்ந்த பொருட்கள் என்று எதுவும் யாரிடமும் கிடையாது. நிம்மதியான வாழ்க்கை. 

இரவு நேரத்தில் கடும் குளிரோ, மழையோ வந்தால் மட்டுமே வீட்டுலுள்ள பெண்களுடன் ஆண்களும் கோழிக்குஞ்சுகள் போல அட்ஜஸ்ட் செய்து தங்கும்படியாக நேரிடும்.

இவ்வாறு கிணற்றடி போன்ற பொது இடங்களில் படுப்பவர்கள், விடிவதற்கு முன்பாக அனைவரும் வாரிச்சுருட்டிக்கொண்டு எழுந்து விடுவார்கள். அவர்களில் பலரும், அதிகாலையில் கிணற்று நீரில் குளித்துவிட்டு அவரவர்கள் பிழைப்புக்குச் செல்ல வேண்டும்.

பால்காரர்கள் வருகையும், கீரை, காய்கறிகள், மண் சட்டிகளில் தயிர் என விற்பவர்கள் வருகையும், வாசல் தெளித்துக்கோலம் போடும் பெண்களுமாக அந்த மிகப்பெரிய குடியிருப்பே குதூகலமாகத் துவங்கும்.

மலைக்கோட்டையைச் சுற்றியுள்ள வீதியாகையால் கோயில் மணி சப்தங்களும், தேவாரம், திருவாசகம் என ஒலிபரப்பப்படும் மங்கல ஒலிகளும் அனைவர் உள்ளத்தையுமே உற்சாகப்படுத்தும். 

இன்று அந்தக்கலகலப்பான, நாட்டு ஓடுகள் வேய்ந்த, ஏழைகளின் குடியிருப்பையே அங்கு காணோம். அந்த மிகப்பெரிய கிணற்றையும் காணோம். அடுக்குமாடிக் குடியிருப்பாக மாறிவிட்டது. யார் யாரோ புதுமுகங்கள் பயத்துடன் கதவைச் சாத்திக்கொண்டு, இன்று அங்கு வாழ்ந்து வருகின்றனர். 

ஓட்டு வீடுகளில் அன்று ஒண்டிக்குடுத்தனம் செய்தவர்கள் இன்று எந்த எந்த வெளியூர்களிலும், வெளி நாடுகளிலும் இருக்கிறார்களோ, எப்படி எப்படி வாழ்கிறார்களோ? அந்த உச்சிப்பிள்ளையாருக்கே வெளிச்சம். சரி என் கதைக்கு வருவோம்.

பள்ளிப்படிப்பை முடித்த என் நண்பர்களில் எனக்கே வெறும் ஐந்தாண்டுகளுக்குள் ஒரு நிரந்தர வேலை உள்ளூரிலேயே கிடைத்தது. மாதச்சம்பளம் வெறும் முன்னூறு ரூபாய்க்குள் தான். இன்றைய முப்பதாயிரம் ரூபாய்க்குச்சமம். ஒரு பவுன் [8 கிராம்] தங்கம் விலை ரூபாய் 200க்குள் விற்ற காலம் அது.

நான் உண்டு என் வேலையுண்டு என்று மிகவும் சங்கோஜியான என் வாழ்க்கையில் குறுக்கிட்டவர்கள் இரண்டு பெண்கள். 

ஒருத்தி ஒருமுகமாக தனக்குத்தானே என்னை மிகவும் விரும்பியவள். மற்றொருத்தி என்னால் மட்டுமே ஒருமுகமாக விரும்பப்பட்டவள்.


  


[3]


என்னை விரும்பியவள் சராசரி அழகென்றோ, சுமாரான நிறமென்றோ கூட சொல்லமுடியாதவள். இருப்பினும் பருவ வயதிற்கேற்ற பதமான பக்குவத்தில் பளபளப்பாகவே தோற்றம் அளித்தவள்.  

எப்போதும் சிரித்த முகம் அவளுக்கு.  அவள் சிரிக்கும் போது மேல் வரிசைப்பற்கள் அனைத்தும் சற்று தூக்கலாகத் தெரியும். எல்லோரிடமும் மிகவும் கலகலப்பாகப்பழகும் பெண் அவள்.  

சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம், வலுவில் வந்து பேசிப்பழகி, என் கூச்ச சுபாவத்தை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி, எப்படிப்பழக வேண்டும், எப்படி உடை உடுத்த வேண்டும், எப்படி மிடுக்காக இருக்க வேண்டும் என எனக்கு நாகரீகம் சொல்லிக் கொடுத்தவளும் கூட.. 

என் வாலிப வயதில், முதன்முதலாக என்னுடன் மிகவும் உரிமையுடன் பழக ஆரம்பித்தவள் என்பதால், அவளுடன் கடைசிவரை நல்லதொரு நட்புடன் பழகவே, நானும் ஆசைப்பட்டேன் என்பதையும் மறுப்பதற்கில்லை. 

அன்று ஒரு நாள் எங்கள் வீட்டுக்கு விருந்தினராக வந்தவர்களுடன் ஆறு மாத குழந்தையொன்று கொழுகொழுவென்று வந்திருந்தது. நான் என் மடியில் வைத்து அதைக்கொஞ்சிக் கொண்டிருந்த போது, அவள் அதை என்னிடமிருந்து வெடுக்கென்று தூக்கிச்சென்று கொஞ்சுவதும், அதை என் எதிரிலேயே பலவிதமாக முத்தம் கொடுப்பதும், பிறகு அந்தக்குழந்தையை என்னிடம் திரும்பத்தருவது போல என்னையே உரசுவதுமாக ஏதேதோ கிளுகிளுப்பை ஏற்படுத்தி வந்தாள். 




நான் என் உணர்ச்சிகளை மிகவும் கட்டுப்படுத்திக்கொண்டு, அவளிடம் மிகவும் உஷாராகவே பழகி வந்தேன். அவள் ஒரு வெகுளிப்பெண் என்று நினைத்து அவள் செயல்களை கண்டுகொள்ளாமலும், கண்டிக்காமலும் விட்டு வரலானேன்.


   

[4]

நான் என் கற்பனையில் விரும்பிய பெண் பக்கத்துத் தெருவிலிருந்து, என் பக்கத்து வீட்டுக்கு ஏதோ உறவென்று சொல்லி அவ்வப்போது வந்து செல்பவள். 

கால்களில் கொலுசுகளும், காதுகளில் ஜிமிக்கிகளுமாக வயது 16 அல்லது 17 இருக்கும் தேவதை. அழகோ அழகு. பளிச்சென்று வசீகரத் தோற்றம். பலாச்சுளை நிறம்.


  


அவளைப் பார்க்கும் யாருக்குமே பார்த்துக் கொண்டே இருக்கணும் போலத்தோன்றும். ஆனால் அவள் யாரையும் லட்சியம் செய்து பார்க்கவோ, பேசவோ நேரமற்றவள் போல அலட்சியமாகத்தோன்றி கொடிமின்னல் போல மறைந்து விடுவாள். அவள் நன்றாக சைக்கிள் ஓட்டுவாள்.

ஒரு நாள் அவள் ஸ்கூட்டர் ஓட்டியும் பார்க்கும் வாய்ப்பு எனக்குக்கிட்டியது. மற்றொரு நாள் ‘L' போர்டு போட்ட ஹெரால்ட் காரை ரோட்டில் மிகவும் மெதுவாக ஓட்டிச்சென்று கொண்டிருந்தாள். பாரதி கண்ட புதுமைப் பெண்ணாகவே அவள் எனக்குக் காட்சி அளித்து வந்தாள். 

தினமும் ஒரு கார் வீதம் ஓட்டிப்பழகிய அவள், கார் புரோக்கர் ஒருவரின் மகள் என்று, பிறகு தான் நான் தெரிந்து கொண்டேன்.

இத்தகைய அழகான, அறிவாளியான, துணிச்சலான பெண் மனைவியாக அமைந்தால் எப்படி இருக்கும் என அடிக்கடி கற்பனை செய்து பார்ப்பேன். 

இந்தக்காலம் போல அவளிடம் நேரிடையாகவே பேசவோ அல்லது நண்பர்கள் உறவினர்கள் மூலம் முயற்சிசெய்து பார்க்கவோ, அன்று எனக்கு ஏதோ ஒருவிதத்தயக்கம்.  

எனக்கு மட்டுமல்ல, அந்தக்காலக்கட்டத்தில் வாழ்ந்த இளம் வயதினர் எல்லோருக்குமே அநேகமாக இப்படித்தான். சமூகக் கட்டுப்பாடுகள் அதிகம். நம் இஷ்டப்படியெல்லாம் சுதந்திரமாக செயல்பட்டு விட முடியாது. 

பெரும்பாலும் பெரியோர்களாகப் பார்த்து செய்து வைக்கும் ARRANGED MARRIAGES மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்தது. நம் விருப்பத்தைக் கேட்கவும் மாட்டார்கள். சொல்லவும் நமக்கு மிகவும் கூச்சமாக இருக்கும். 

ஒரு ஆணும் பெண்ணும் தனியாக சந்திப்பது, பேசுவது, நட்புடன் பழகுவது என்பதெல்லாம் நடக்காத காரியங்கள். அவை ஏதோ கொலைக்குற்றம் போல கருதப்பட்ட காலம் அது.


 
  

[5]

ஒரு நாள் தீபாவளிப் பண்டிகையன்று, கோயிலுக்குச்சென்று நான் திரும்பி வரும்போது, தெருவில் சிறுவர்கள், தொடர்ச்சியாக நிறைய பட்டாசுச்சரத்தை கொளுத்தியிருந்ததால், அங்கு அருகிலேயே கதவு திறந்திருந்த ஒரு வீட்டு வாசலில் சற்றே ஒதுங்கி நின்றேன்.  அந்த வீட்டின் உள்ளிருந்து, என்னை உள்ளே வரச்சொல்லி அழைப்பு வந்தது. 

உள்ளே போன பிறகு தான் தெரிந்தது, அது அந்த அழகுப்பதுமையின் [கொலுசு + ஜிமிக்கியின்] வீடு என்பது. என்னை உள்ளே அழைத்தது அவளின் அப்பாவும், அம்மாவும் தான். 

என் வீட்டுக்கு பக்கத்து வீட்டின் உறவினர் என்பதால் எனக்கு அவர்களையும், அவர்களுக்கு என்னையும் ஒருவரையொருவர் ஏற்கனவே பார்த்துள்ள அனுபவம் உண்டு. ஆனால் அதிகம் பேசிக்கொண்டது மட்டும் இல்லை.

உள்ளிருந்து எட்டிப்பார்த்த அழகுப் பதுமையிடம், அவள் அம்மா தன் கையை உருட்டி ஏதோ ஜாடை காட்ட, அந்த அழகுப்பதுமை காலில் கொலுசு ஒலிக்க, காதில் எனக்கு மிகவும் பிடித்த ஜிமிக்கி தொங்க, என்னிடம் நெருங்கி வந்து, ரவாலாடு ஒன்றை என் கையில் கொடுத்துப்போனது. 

இருகரங்களையும் ஒன்றாகக்குவித்து நீட்டி மிகவும் பெளவ்யமாக கோவில் பிரஸாதம் போல வாங்கிக்கொண்டேன்.

எப்போதும் அவளை பாவாடை, சட்டை, தாவணியில் மட்டுமே பார்த்திருந்த நான், இன்று தீபாவளிக்காக அணிந்திருக்கும் புத்தம் புதிய புடவையில் பார்க்க நேர்ந்தது.  

கிளிப்பச்சைக்கலரில், உடலெங்கும் மின்னும் ஏதொவொரு புது டிசைனில், 'டிவிங்கிள் நைலான்' என்ற பெயரில் அந்தக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புடவையில் ஜொலிக்கக்கண்டேன்.  




பைங்கிளி ஒன்றை அதன் கூட்டுக்குள் நானும்  புகுந்து பார்த்தப் பரவசம் எனக்குள் ஏற்பட்டது. 

சுடச்சுட உருக்கிய நல்ல நெய்யில் அப்போதுதான் உருண்டை பிடித்திருக்கிறார்கள் என்பது, அதன் மிதமான சூடு, நெய் மணம், வெளியே சற்றே எட்டிப்பார்க்கும் முந்திரிப்பருப்பின் மூக்கு முதலியவற்றால் என்னால் உணர முடிந்தது. 

அவள் கைப்பட்ட அந்த ரவாலாடை, அவளின் பெற்றோர்களுக்கு எதிரில், அப்படியே முழுவதுமாக வாயில் போட்டு, அசைபோடுவது அநாகரீகமாக இருக்கும் என்று எனக்குப்பட்டது. எதையும் கையில் வைத்துக்கொண்டு, வாயால் கடித்து எச்சில் செய்து சாப்பிடும் பழக்கமும் எனக்குக் கிடையாது.  

துளித்துளியாகப்புட்டு, ரஸித்து, ருசித்து கீழே சிந்தாமல் சிதறாமல் டேஸ்ட் செய்ய வேண்டும் என்று நான் நினைத்துக்கொண்டிருக்கும் போதே, அந்த அழகுச்சிலை மீண்டும் என்னருகில் வந்து ஒரு எவர்சில்வர் தட்டில் மிக்ஸரும், அருகேயிருந்த ஸ்டூலில் குடிக்கத் தண்ணீரும், வைத்து விட்டு நகர்ந்த போது, நான் “ரொம்ப தாங்க்ஸ்” என்று கூட்டிமுழுங்கி வார்த்தைகளை வெளிக்கொணர்ந்து, மென்மையாகச் சொன்னேன். 

நான் அவளுடன் முதன் முதலாகப்பேசிய “ரொம்ப தாங்க்ஸ்” என்ற இரண்டே இரண்டு வார்த்தைகள் அவள் காதில் விழுந்ததோ விழவில்லையோ என சந்தேகம் ஏற்படும்படி, வாசலில் தொடர்ந்து பட்டாசுகள் வெடித்ததால் ஏற்பட்ட பயங்கர சப்தம் என்னை மிகவும் வெறுப்பேற்றியது. 

தின்ன ரவாலாடும், மிக்ஸரும், குடிக்கத்தண்ணீர் ஒரு மாம்பழச்சொம்பில் கொடுத்ததுடன், தன் கடமை முடிந்து விட்டதாக நினைத்த, அந்த தங்கப்பதுமை எங்கோ உள்ளே போய் மறைந்து விட்டது. 

என்னுடைய உத்யோகம், சம்பள விபரங்கள், ஆபீஸ் வேலைகள், வேலை நேரங்கள், கேண்டீன் வசதிகள், போக்குவரத்து பஸ் வசதிகள் முதலியனவற்றை பற்றிய பல கேள்விகளை எழுப்பி, அந்த அவளின் தாய் தந்தையர்கள் என்னிடம் ஏதேதோ கேட்டுக்கொண்டிருந்தனர். எதற்காக இதெல்லாம் என்னிடம் இவர்கள் கேட்டுத்தெரிந்து கொள்கிறார்கள் என்று எனக்குத் தோன்றியது. 

ஒரு வேளை என் வீட்டுக்கு சம்பந்தம் பேச வரலாம் என்று நினைக்கிறார்களோ என்ற சபலமும் ஏற்பட்டது. என் மனதில் தோன்றும் இந்தச் சபலத்தையும், ஆவலையும், இனிய கனவுகளையும் தூள் தூளாக உடைப்பது போல வாசலில் பட்டாசுகள் தொடர்ந்து வெடித்துக் கொண்டிருந்தன.  

அன்று தீபாவளிப் பண்டிகையாகவும், நான் அணிந்திருப்பது புது பேண்ட், சட்டை என்பதாலும், வயதில் பெரியவர்களான அவர்களை நமஸ்கரித்தேன். (தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் இதுபோல பெரியோர்கள் காலில் விழுந்து கும்பிட்டு நமஸ்கரிப்பது அப்போதெல்லாம் மிகச்சாதாரண வழக்கம் தான்) 

“அதி சீக்ரமேவ விவாஹப் ப்ராப்திரஸ்து” 

(கூடிய சீக்கரத்தில் உனக்கு கல்யாணம் ஆகும்படியான சந்தர்ப்பம் அமையட்டும்) என்று அவரும், 

“அடுத்த தீபாவளி தலைதீபாவளியாக இருக்கட்டும்” 

என்று அந்த அம்மாவும் என்னை ஆசீர்வதித்தனர். 

இதைக்கேட்ட என் மனதில் மீண்டும் ஒரு ஜிலுஜிலுப்பும், பரவசமும் ஏற்பட்டது.  

பதிலுக்கு நீயும் அவர்களிடம் “அதி சீக்கரமேவ நீங்களே எனக்கு மாமனார் மாமியாராகப் பிராப்திரஸ்து” என்று சொல்லச்சொல்லி என் உள்மனம் என்னை நச்சரித்தது.

அவர்களிடம் விடைபெற்று, ஒரு வழியாக  என் வீட்டுக்குப் புறப்படலானேன்.  நான் அவர்கள் வீட்டை விட்டுப் புறப்படும் வரை அந்த என் கற்பனைக் கதாநாயகி, கொஞ்சமும் காட்சி தரவே இல்லை.

அதன் பிறகும், பல மாதங்களுக்கு, அந்த தங்கச்சிலையை நான் அதிகமாகப் பார்க்கும் வாய்ப்பே எனக்குக் கிடைக்கவில்லை. 

அவள் கையால் அன்று என் கையில் கொடுத்த ரவாலாடு மட்டும், என் நினைவுகளில் எப்போதும் இருந்து வந்து, மனதுக்கு இதமான இனிமையைக் கொடுத்து வந்தது.




 
  

[6]

இதற்கிடையில், தூரத்துச் சொந்தம் என்று சொல்லி, எனக்குப் பெண் கொடுக்க பலரும் என் தந்தையை முற்றுகையிட்டு வந்தனர். எனக்கும் என் குடும்பத்திற்கும் ஏற்ற பெண்ணாகப் பார்த்து, எனக்கு 21 முடிந்து 22 வயதாகும் போதே அவசரமாக மணம் முடித்து வைத்தனர் என் பெற்றோர்கள். 

நாம் என்ன அழகில் பெரிய மன்மதனா! அல்லது செல்வச்செழுப்பில் தான் பெரிய குபேரனா! நம் இஷ்டம் போல பெண் தேட! என்று என் மனதை நானே சமாதானம் செய்து கொள்ள மட்டுமே முடிந்தது அன்று.  

”இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று” என்ற பாடல் ஒலிக்கும் போதெல்லாம் என்னை அந்த வரிகள் என்னென்னவோ சிந்திக்க வைக்கும்.

எனக்கு மனைவியாக அமைந்தவள் என்னை விட சற்று கூடுதல் நிறம் என்றும், குடும்பத்துக்கு ஏற்ற குத்துவிளக்கு என்றும், கை நிறைய காரியம், வாய் நிறையப் பாட்டு, தலை நிறைய நீண்ட முடி, கிராமத்தில் வளர்ந்த பெண், தூரத்து சொந்தம் வேறு என, என் வீட்டார் பாராட்டி மகிழ்ந்ததில் எனக்கும் மகிழ்ச்சியாகவே இருந்தது. 




இன்று வரை எந்தக்குறையுமின்றி, எங்கள் இல்வாழ்க்கையும் இன்பமாகவே ஓடி வருகிறது.

ஓரிரு வருடங்கள் முன்பு திருச்சி மலைவாசல் கடைவீதியில், அந்த நாட்களில் ஓயாமல் என்னைச் சுற்றிச்சுற்றி வந்தவளை, நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்தது. 

  

   

[7]


முதுமையால் தலையில் ஆங்காங்கே சற்றே வெள்ளி முடிகளுடன் காணப்பட்டாள். வறுமைத் தோற்றம் உடுத்தியிருந்த ஆடைகளில் பிரதிபலித்தது. சற்றே உடம்பு குண்டாகவும் ஆகியிருந்தாள்.

என்னைக்கண்டதும் முக மலர்ச்சியுடன் ஒரு சிரிப்பு. அதே சிரிப்பு. முத்துப்பற்களின் மேல் வரிசை வெளியே வந்து, "நான் தான், நானே தான், அன்று இளமையில் உன்னைச் சுற்றிச்சுற்றி வந்தவள்" என்று நினைவூட்டியது, அந்த அவளின் சிரிப்பு. 

என்னை உச்சந்தலை முதல் உள்ளங்கால்கள் வரை மிகவும் அதிசயமாக நோட்டமிட்டாள். ”பெரிய ஆபீஸர் ஆகி, கார், பங்களா எல்லாம் வாங்கியிருப்பாயே!” என்றாள்.

நடு ரோட்டில் நாங்கள் நின்று கொண்டிருந்ததாலும், போக்குவரத்து நெருக்கடிகள் அதிகம் உள்ள சாலை என்பதாலும் ”அருகில் இருந்த உணவு விடுதிக்குள் சென்று உட்கார்ந்து பேசலாமா” என்றேன் .

“ஆஹா...... நீயே அதிசயமாகவும், ஆசையாகவும், இவ்வளவு வருஷம் கழித்தாவது கூப்பிடுகிறாய்; வருவதற்கு என்ன, எனக்கு வலிக்குமா” என்று சொல்லி என்னுடன் உள்ளே வந்தாள். 

குளிரூட்டப்பட்ட தனிமைப் பிரிவுக்குச்சென்று, அமைதியான சூழலில் வசதியாக அமர்ந்து கொண்டோம்.

என்னிடமிருந்து உரிமையுடன் என் மணிபர்ஸ் மற்றும் பேனா இரண்டையும் என் சட்டைப்பையிலிருந்து அவளாகவே எடுத்து நோட்டமிட்டாள்.  அதில் கத்தை கத்தையாக இருந்த ஆயிரம் ரூபாய், ஐநூறு ரூபாய் நோட்டுக்களை ஆசையுடன் வெளியில் எடுத்து எண்ணிப்பார்க்க ஆரம்பித்தாள்.

 “இவற்றை எண்ணி முடிப்பதற்குள் என் விரல்களுக்கு வலி எடுத்துவிடும் போலிருக்கு” என்று சொல்லி என்னைப்பார்த்து சிரித்தபடியே, திரும்ப அவற்றை எண்ணி முடிக்காமலேயே என் பர்ஸுக்குள் திணித்தாள்.

அதிலிருந்த ஒரு புதுப்பத்து ரூபாய் சலவை நோட்டை மட்டும் எடுத்து பேனாவால் என் பெயரை அழகாக எழுதி, அன்றைய தேதியையும் குறிப்பிட்டு அதை முத்தமிட்டு தன் கண்களில் ஒத்திக்கொண்டு பர்ஸின் தனி அறையில் வைத்தாள். 

“இந்த ஒரே ஒரு நோட்டை மட்டும் செலவு செய்யாமல் என் ஞாபகார்த்தமாக பத்திரமாக வைத்துக்கொள்” என்றாள்.  

பர்ஸிலிருந்த என் விஸிட்டிங் கார்டுகளில், இரண்டே இரண்டு மட்டும் எடுத்துக்கொண்டு, அதைப்படித்துப்பார்த்து, வியப்பில் தன் புருவங்களை சற்றே உயர்த்தி, என்னைப்பார்த்து சிரித்துக்கொண்டே, அவற்றை அவள் தன் முன்கழுத்துக்கு கீழ்ப்பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் பத்திரப்படுத்திக் கொண்டாள். 

“அந்த என் விஸிடிங் கார்டுகளை, பத்திரமாக வைத்துக்கொள்ள வேறு இடமே உனக்கு கிடைக்கவில்லையா? என்றேன்.

“எல்லாம் வைக்க வேண்டிய இடத்தில் தான், நான் உன்னை பத்திரமாக வைத்திருக்கிறேன்; உனக்குத்தான் எப்போதுமே ஒரு எழவும் புரிய மாட்டேங்குது; சரி அதை விடு; இப்போ என்ன சாப்பிடலாம்?" என்று சிரித்துக்கொண்டே பேச்சை மாற்றினாள்.



   

   

[8]

”நீ பார்த்து எது ஆர்டர் கொடுத்தாலும், எனக்கு ஓ.கே” என்றேன். 

ஸ்வீட் முதல் கூல்ட்ரிங்க்ஸ் ஐஸ்கிரீம் வரை அவளே அனைத்தையும் அழகாக ஆர்டர் செய்தாள். அந்த 40 நிமிடங்களுக்குள் கடந்த 40 வருட சமாசாரங்களையும் சரமாரியாக எடுத்துரைத்தாள்.   

ஏதேதோ தனது வருத்தங்களையும் பகிர்ந்து கொண்டாள். அவற்றை உன்னிப்பாகக் கேட்டு வந்த நான், அவ்வப்போது அவளுக்கு சற்றே ஆறுதல் வார்த்தைகளும் கூறி வந்தேன்.     

பல ஊர்கள் சுற்றி தற்சமயம் ஈரோட்டில் வசிப்பதாகவும், தனக்கு இரண்டே இரண்டு பெண்கள் மட்டுமே என்றும், இருவரும் காலேஜ் படிப்பதாகவும், தன்னைப்போல் இல்லாமல் நல்ல கலராகவும் அழகாகவும் இருப்பதாகவும் கூறியவாறே, மீண்டும் சிரித்தாள். 

இவளுடன் பேசிக்கொண்டே இருந்தால், நாமும் எல்லாக் கவலைகளையும் மறந்து, எப்போதுமே சிரித்துக்கொண்டே இருக்கலாம் போல உள்ளதே, என்று நினைத்துக்கொண்டேன்.

“நிறைய அடர்த்தியான தலைமுடியுடன், அழகாக கர்லிங் ஹேர் நெற்றியில் விழும்படி ஜோராக இருப்பாயே! ஏன் இப்படி உன் பின்மண்டையில் கொஞ்சூண்டு ரெளண்டாக வழுக்கை விழுந்துள்ளது?” என்று கேட்டுச் சிரித்தாள்.

“வயதுக்கேற்ற வழுக்கை; என்ன செய்வது” என்றேன். 

“விக் வைத்துக்கொண்டு எப்போதும் இளமைத் தோற்றத்துடன் இரு” என்றாள்.

என்னைப்பற்றி அடிக்கடி நினைத்துக் கொள்வாளாம். தனக்கு ஒரு பிள்ளைக்குழந்தை பிறந்தால் என் பெயரையே சூட்ட வேண்டும் என்று நினைத்திருந்தாளாம்.

நல்ல வேளையாக நான் அவளைக் கல்யாணம் செய்து கொள்ளாததும் நல்லது தானாம். அவளின் துரதிஷ்டம் என்னையும் சுகப்பட வைக்காமல் மிகவும் கஷ்டப்படுத்தியிருக்குமாம். ஏதேதோ கற்பனைகள் செய்து பார்த்திருக்கிறாள்...பாவம்.

உருவத்தில் அவள் முழுப் பலாப்பழம் போலத்தோன்றினாலும், உள்ளத்தில் நல்ல இனிய பலாச்சுளை தான் என்று நினைத்துக் கொண்டேன். 

ஒருவருக்கொருவர் விடைபெறும் முன், என் பர்ஸிலிருந்து பணம் எடுத்து ஒரு முழம் மல்லிகைப்பூ வாங்கித் தன் தலையில் சூடிக்கொண்டாள். எதிர்புற ரோட்டுக்கடையில் ஒரு ஜோடி லேடீஸ் செருப்பு வாங்கி அணிந்து பார்த்தாள். 

“நல்ல பெரிய செருப்புக்கடைக்குப்போய் நல்ல தரமானதாக, லேடீஸ் சப்பலாக வாங்கிக்கொள்ளலாமே” என்றேன்.

“இது போதும்; ஒரு ஆறு மாதம் உழைத்தால் போதும்; விலையும் மலிவு; அடிக்கடி அறுந்து போகும்; அல்லது தொலைந்து போகும்; பெரிய கடைக்கெல்லாம் போய் வாங்கினால் எனக்குக் கட்டுப்படியாகாது” என்று சொல்லி செருப்புக்கும் என் பர்ஸிலிருந்து பணம் எடுத்துக்கொடுத்தாள்.

என்னுடன் ஒரு மணி நேரம் இன்று மனம் விட்டுப்பேசி, உச்சி முதல் உள்ளங்கால் வரை [தலைக்கு மல்லிகைப்பூ, வயிற்றுக்கு ஆகாரம், கால்களுக்கு செருப்பு என ] திருப்தியாக அனைத்தையும் அனுபவத்ததில், தான் ஜன்ம சாபல்யம் அடைந்து விட்டதாகச்சொல்லி சிரித்தாள். 

அன்று முதல் இன்று வரை அவள் என் மீது பிரேமபக்தி கொண்டிருப்பதை என்னால் நன்கு உணர்ந்து கொள்ள முடிந்தது.

“உன் பர்ஸ் மிகவும் கனமாக உள்ளது. பத்திரமாக வைத்துக்கொள்” என்று சொல்லி, என்னிடம் திரும்ப ஒப்படைக்கப் பார்த்தாள். 

“நீயே அந்தப்பர்ஸில் உள்ள முழுப்பணத்தையும் எடுத்துக்கொள்; உன் அவசர அவசிய செலவுகளுக்கு வைத்துக்கொள்; கடவுள் புண்ணியத்தில் எனக்குப்பணத்துக்கு இப்போதெல்லாம் பஞ்சமே இருப்பதில்லை” என்று மிகவும் வற்புருத்திக்கூறினேன்.

ஒரே ஒரு நிமிடம் தயங்கினாள். ஏதோ பலமாக யோசித்தாள். ஆனாலும் பிறகு வாங்கிக்கொள்ள மறுத்து விட்டாள். பர்ஸை என்னிடம் ஒப்படைத்தபடியே, கண்ணில் ஏதோ தூசி விழுந்து விட்டதாகக்கூறி, தன் புடவைத்தலைப்பால் துடைத்துக்கொண்டாள். 

மீண்டும் தன் முத்துப்பற்களைக்காட்டி ஒரு சிரிப்பு சிரித்தபடியே என்னிடம் விடைபெற்றுச் சென்றாள்.  அவள் என் கண்பார்வையிலிருந்து மறையும் வரை அவள் நடந்து சென்ற பாதையையே நோக்கிக்கொண்டிருந்தேன்.

என்னை ஜன்ம ஜன்மமாக, ஆத்மார்த்த அன்புடன் தொடர்ந்து வந்துள்ள, ஏதோவொரு மிக நெருங்கிய உண்மையான உன்னதமான உறவு, என்னை விட்டு இப்போது, எங்கோ, வெகுதூரம் விலகிச் செல்வதுபோல உணர்ந்தேன்.

அதன் பிறகு இன்று வரை நான் அவளை சந்திக்கவே இல்லை.


   

    



[9]

என் கற்பனைக்காதலியான அந்த பாரதி கண்ட புதுமைப்பெண்ணின் அசல் அச்சில் இருந்த இந்தப்பெண்ணை கடற்கரையில் கண்டு சிலையாகிப்போன என்னை, என் மகன் “என்னப்பா...ஏதோ யோசனையில் இருக்கிறீர்கள்! “மீட் மிஸ்டர் கோபிநாத், மிகப்பெரிய தொழிலதிபர், அவரின் ஒரே பெண் இவள்” என்றான்.

தொழிலதிபருடன் கை குலுக்கினேன். அந்த அழகு தேவதையைக் கைகூப்பி வணங்கினேன். அந்தப்பெண்ணைப் பார்த்த மாத்திரத்தில் என் மனைவிக்குப் பிடித்துப்போய் விட்டது. 

சம்ப்ரதாயத்திற்காகவும், மேற்கொண்டு பேசி முடிவெடுக்க நாங்கள் காரில் ஏறி பெண் வீட்டுக்குப்போனோம். ஏற்கனவே என் பையனும் அந்தப்பெண்ணும் ஒருவருக்கொருவர் பேசி முடிவெடுத்துவிட்ட விஷயம் தான்.

அந்தப்பெண்ணின் வீட்டை அடைந்த நாங்கள், அவர்களின் செல்வச்செழிப்பைக்கண்டு வியந்து போனோம். பெண்ணின் தாயாரைப்பார்க்க வேண்டும் என்ற எங்கள் விருப்பத்தைத் தெரிவித்தோம்.

சற்றே தயங்கியவாறு அழைத்துச்சென்றனர். பெண்ணின் தாயாரைப்பார்த்த நானும் என் மனைவியும் மிகவும் அதிர்ச்சி அடைந்தோம்.

ஒரு தனி அறையில் சங்கிலியால் கட்டிப்போட்டிருந்தனர். தலை முழுவதும் ஆங்காங்கே புண்ணுடன் கூடிய வீக்கங்கள். சம்மர் க்ராப் அடித்த தலைபோல முடிகள் ஆங்காங்கே வெட்டப்பட்டிருந்தன. 

எங்களைக்கண்டதும் ஒரு புன்சிரிப்பு, ஒரு சில நிமிடங்களுக்கு மட்டும். பிறகு கேவிக்கேவி அழுகை. எங்கேயோ வெறித்த ஓர் பார்வை. சற்று நேரத்தில் நைட்டியில் சுருண்டு படுத்துக்கொண்டாள். 

சிவந்த முகம் வெளிறிப்போய் இருந்தது. கைகளிலும் ஆங்காங்கே காயங்கள். ஒருசில வருடங்களாக ஏதோ ஒருவித மனோவியாதியாம். உடுத்தும் உடைகளையே உருவி விட்டெறிந்து விடுகிறாளாம்.

பணக்காரக்கணவர், எடுபிடியாக எக்கச்சக்க வேலையாட்கள், விலையுயர்ந்த கார்கள், அழகிய தோட்டங்களுடன் மிகப்பெரிய பங்களா வீடு, அழகு தேவதையாக ஒரே மகள். அனைத்து சுகங்கள் இருந்தும் அனுபவிக்கக்கொடுத்து வைக்காத ஜன்மம். என்ன கொடுமை இது. என் மனது மிகவும் நடுங்கியது.

எப்படி அழகாகவும், மிடுக்காகவும் இருந்த என் அன்றைய கற்பனைக் கதாநாயகி, அழகு தேவதை, தங்கப்பதுமை, தங்கச்சிலை, பைங்கிளி என்றெல்லாம் என்னால் வர்ணிக்கப்பட்டவள் இன்று இப்படி அலங்கோலமாக ஆகிவிட்டாளே! என நினைத்து என் மனம் கண்ணீர் வடித்தது. அங்கு நிற்கவோ அவளைத்தொடர்ந்து பார்க்கவோ என் மனம் சகிக்காமல், வேறு பக்கமாக என் பார்வையைத் திருப்பிக்கொண்டேன்.

இளமையும் அழகும் ஆரோக்கியமும் என்றும் நிரந்தரமல்ல என்பதை இந்த என் அனுபவத்தில் புரிந்து கொண்டேன். 

என் எண்ணங்களையும், உணர்வுகளையும், அந்த நாள் ஞாபகங்களையும் அங்கு யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாத பரிதாப நிலையில் நான் இருந்தேன்.



 
 
   
    

[10]

ஈ என்று எப்போதும் என்னிடம் இளித்துப் பேசிவந்த அந்த ஈரோட்டுக்காரியையும், மனநலம் குன்றிய நிலையில் உள்ள இந்த மதராஸ்காரியையும் மாறிமாறி நினைத்துக்கொண்டே, என் மனைவியைத் திரும்பிப்பார்த்தேன். 

இந்த வயதிலும் அவள் மிகவும் அழகாக, லட்சணமாக, ஆரோக்கியமாக இருப்பதாகத் தோன்றியது. என் தாய் தந்தையர் பார்த்து, எனக்குப் பொருத்தமானவளாகத் தேர்ந்தெடுத்து, கட்டிவைத்து ஆசீர்வதிக்கப்பட்டவள் அல்லவா என் மனைவி என்று, என் பெற்றோர்களை நன்றியுடன் நினைத்துக்கொண்டேன்.

“எது எப்படியிருந்தாலும் நம் மகன் அந்தப்பெண்ணையும், அந்தப்பெண் நம் மகனையும் மனதாரக் காதலிப்பதாக வெளிப்படையாகவே சொல்லிவிட்டார்கள். பிறகு என்ன! கல்யாண ஏற்பாடுகளைச் செய்துவிடுவோம்” என்று ரகசியமாக என் மனைவியிடம் தெரிவித்தேன்.

என் மகன் என்னை நெருங்கி “அவளின் அம்மாவை மட்டும் மறந்து விட்டுப்பார்த்தால், இந்த சம்பந்தம் எல்லாவிதத்திலும் ஓ.கே. தானே அப்பா” என்றான்.

“அவளின் அம்மாவை ஏன் மறக்கணும்? அவர்களும் நன்றாக அழகாக இருந்தவர்கள் தானே ஒரு காலத்தில்! 

நடுவில் வந்துள்ள ஏதோ ஒரு சோதனை - கண் திருஷ்டிபோல இப்படி ஆகியுள்ளது - தகுந்த சிகிச்சை அளித்து வருவதால் கூடிய சீக்கரம் குணமாகி விடுவார்கள்” என்று அவனுக்கு சமாதானம் சொல்வதுபோல எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொண்டேன்.

oooooOooooo



”VGK-08 அமுதைப் பொழியும் நிலவே”

என்ற சிறுகதைக்கு, கணிசமாக எண்ணிக்கையில் பலரும் 
விமர்சனம் என்ற அமுதை
நிலவெனப் பொழிந்து அனுப்பி
சிறப்பித்துள்ளனர்.

அவர்கள் அனைவருக்கும் 
என் மனம் நிறைந்த 
னிய அன்பு நன்றிகள்.



மேற்படி போட்டிக்கான முடிவுகள் 
’தொடர் பேருந்தில்’ ஏறி 
வந்துகொண்டே உள்ளன.

ரும் சனி, ஞாயிறு, திங்களுக்குள்
போட்டிக்கான பரிசு அறிவிப்புகள்
முற்றிலுமாக வெளியிடப்படும்.

oooooOooooo

இந்த சிறுகதை 
விமர்சனப்போட்டிகளில்
அனைவரும் உற்சாகத்துடன்
தொடர்ந்து கலந்துகொண்டு
சிறப்பிக்க வேண்டுமாய்
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

oooooOooooo









54 கருத்துகள்:

  1. சுவாரஸ்யமான கதை... முடிவில் சுபமாக முடிந்தது... வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  2. இளமையும்,அழகும், ஆரோக்கியமும் நிரந்தரமல்ல என்பதை அழகாக உணர்த்தியுள்ளீர்கள் ஐயா. அருமை.நன்றி

    பதிலளிநீக்கு
  3. ஒருத்தி ஒருமுகமாக தனக்குத்தானே என்னை மிகவும் விரும்பியவள்.
    மற்றொருத்தி என்னால் மட்டுமே ஒருமுகமாக விரும்பப்பட்டவள்.//

    என இருவரையுமே
    மறக்க மனம் கூடாமல் கதையாகி சுவாரஸ்யம் கூட்டுகிறது..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  4. நாற்பது வருட நினைவுகள்.

    பசுமை நிறைந்த நினைவுகள்.

    கவியரசுவின் வரிகள் எண்று நினைக்கிரேன்..

    " எந்த ஊரில், எந்த நாட்டில் என்று காண்போமோ "

    மிகவும் உயிரூட்டமான வரிகள்.

    இது படைக்கப்பட்டவனின் கதையா இல்லை உண்மையா தெரியாது.



    ஆனால், இந்த நினைவுகளின் சந்தோஷத்தை

    அனுபவித்திருக்கிறேன்.



    நாற்பது வருடங்களுக்கு முன் ( 1974 )

    ஒரு கல்லூரியில் படித்து பட்டதாரிகளாக வெளியேறிய

    120 மாணவர்களில் சுமார் 100 பேர் இன்றும் ஒருவருக்கு ஒருவர்

    தொடர்புள்ளவர்களாய், சிநேகமாய், வருடத்திற்கு ஒருமுறை

    சந்தித்து குலாவி மகிழ்கிறோம்.



    மீண்டும் நினைவுகளை மலர்ச் செய்ததற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. நல்ல கதை.
    மிக நல்ல கதை.
    கதையாக இருந்தால் மட்டுமே.
    உண்மை சம்பவம் என்றால்.............
    அழகும் இளமையும் இறுக்கும்போது தேவதையாய தெரிந்தவள்,
    பைத்தியமாய் ஆனபோது
    அப்பாடா நல்லகாலம் என் மனைவி நன்றாக இருக்கிறாள் என்ற நிம்மதி.
    இதுதான் ஆண் மனமோ?
    ஜிமிக்கியும் கொலுசும் அணிந்த தேவதையைப் பார்க்காமல் இருந்தால்,
    மேலே வந்து விழுந்து விரும்பிய பெண் ஒசத்தியாக இருந்து இருக்குமோ?
    எது எப்படியோ பெற்றோர் உறுதுணையாக, சொந்தங்கள் காவலாக நிற்க, சமூகத்தில் அங்கீகாரம் கிடைக்க, arranged marriage தான் பாதுகாவல்......நிம்மதி..........காதல் என்பது ஒரு நீர குமிழி மாதிரி.
    பாவம் ஜிமிக்கி பெண்.
    காணல் நீரால் உடைந்து விட்டாள்.
    .


    பதிலளிநீக்கு
  6. "புரியாது புரியாது
    வாழ்வின் ரகசியம் புரியாது "
    என்று ஒரு பாடல் ஆடிப்பெருக்கு
    திரைப்படத்தில் வரும்
    அந்தச் சூழலையும் உணர்வையும்
    கிளறச் செய்து போகும் அற்புதமான கதை
    மீண்டும் படித்து மகிழ்ந்தேன்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. மெல்லிய இழையோடும் காதல் உணர்வுகள், அவற்றைத் தாண்டி வேறுபட்டு நிற்கும் யதார்த்தம் - இரண்டையும் உரிய விகிதத்தில் கலந்து நெய்திருக்கிறார் கதாசிரியர். போட்டியில் கலந்து கொண்டுள்ளதால் விரிவான விமர்சனத்தை மின்னஞ்சலில் அனுப்பியிருக்கிறேன். உணர்வு, சிருங்காரம், மனிதம் கலந்த சிறப்பான கதை. பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  8. கதை மிக நன்றாக இருக்கிறது. இளமை காதல், இளமையில் குடி இருந்த இடங்கள் இப்போது இருக்கும் நிலை. முன் காலத்தில் உள்ள சேலையின் பெயர், இளமையும், அழகும் உள்ள பெண்ணிடம் அப்போது ஏற்பட்ட ஈர்ப்பும் , அந்த பெண் இப்போது உலகை மறந்த நிலையில் இருப்பதும் என்று கதையில் எத்தனை எத்தனை செய்திகள்!
    மறக்க முடியாத நிலைதான் கதை நாயகன் நிலை.

    பதிலளிநீக்கு
  9. வெள்ளிப்புற அழகு என்றும் நிரந்தரமல்ல என்று வெகு அழகாக கதை வடிவில் கூறிவிட்டீர்கள். மலைக்கோட்டைச் சுற்றி எங்கள் கற்பனையும் உங்களுடன் சுற்றி வந்தன. பாராட்டுகள் சார்.

    போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  10. Mail message from Mrs. Vijayalakshmi Krishnan 14:03 (1 hour ago) to me

    Respected Sir,

    உங்கள் மறக்க மனம் கூடுதில்லையே...

    ஒரு பத்து தடவையாவது படித்திருப்பேன்.

    கம்ப்யூட்டர் சரி இல்லாததால் எனக்கு தட்டச்சு விரைவாக வராததால் விமரிசனம் எழுத இயலவில்லை.

    பார்க்கலாம், என் மனதில் உள்ளதை யாராவது எழுதுகிறார்களா என்று.

    இது உங்களுக்கு வெற்றி.....
    ஒரு கதையை பலமுறை படிக்க வைத்தது ....
    மனதில் எண்ண அலைகளைத் தருவித்தது .....
    என நிஜமாகவே உங்களுக்குத்தான் வெற்றி....
    பரிசு உங்களுக்குத் தான் கொடுக்க வேண்டும்.

    -oOo-

    அன்புள்ள விஜி, வாங்கோ, வணக்கம்.

    தாங்கள் மனம் திறந்து என்னைப் பாராட்டி, இந்தக்கதையை பத்து தடவை திரும்பத்திரும்பப் படித்ததாகச் சொல்லியுள்ள இந்தப் பின்னூட்டமே எனக்குக்கிடைத்த, என் எழுத்துக்களுக்குக் கிடைத்த மாபெரும் ”ஆஸ்கார் விருது” போல எண்ணி மகிழ்கிறேன்.

    தங்களின் வெளிப்படையான இந்தக்கருத்தினை விட மிகச்சிறந்த பொக்கிஷமோ, விருதுகளோ வேறு எதுவும் கிடையாதும்மா. ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்குது விஜி.

    வாழ்க ! வாழ்க !! வாழ்க !!!

    பிரியமுள்ள கோபு.

    பதிலளிநீக்கு
  11. வெகு அழகாக விவரிக்கப் பட்ட காதல். பதின்ம இளைய வயதில் எப்படியெல்லாம் பைத்தியமாக்குகிறது என்பதை எல்லோருமே ஒவ்வொரு விதத்தில் பார்த்திருப்போம்.ஆண்மனம் நோக்கும் விதமும் பெண்மனம் பார்க்கும் விதமும் வெவ்வேறு. ......நல்ல கதை. திருச்சியை மீண்டும் பார்த்த கதையாகிவிட்டது. நன்றி.

    பதிலளிநீக்கு
  12. "மறக்க மனம்
    கூடுதில்லையே" :)

    சுவாரஸ்யமான காதல் கதை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. //மனநலம் குன்றிய நிலையில் உள்ள இந்த மதராஸ்காரியையும் மாறிமாறி நினைத்துக்கொண்டே, என் மனைவியைத் திரும்பிப்பார்த்தேன்.

    இந்த வயதிலும் அவள் மிகவும் அழகாக, லட்சணமாக, ஆரோக்கியமாக இருப்பதாகத் தோன்றியது. என் தாய் தந்தையர் பார்த்து, எனக்குப் பொருத்தமானவளாகத் தேர்ந்தெடுத்து, கட்டிவைத்து ஆசீர்வதிக்கப்பட்டவள் அல்லவா என் மனைவி என்று.... //


    :))

    உள்மனத்தை உரசிப்பார்த்து உள்ளார்ந்து உண்மையை கண்டுபிடித்து விமரிசனம் செய்வோரின் பார்வையில் கதையின் இந்த வரிகள் தப்பாது என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  14. இந்த சிறுகதைக்கான விமர்சனப்போட்டியில் கலந்துகொண்ட திருமதி. தமிழ்முகில் பிரகாசம் அவர்கள் [அவர்களின் விமர்சனம் போட்டியின் நடுவர் அவர்களால் பரிசுக்குத்தேர்வாகாமல் இருந்தும்கூட] அவர்கள் எழுதி அனுப்பியிருந்த விமர்சனத்தைத் தனது வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டுச் சிறப்பித்துள்ளார்கள்.

    இணைப்பு: http://muhilneel.blogspot.com/2014/04/blog-post_6.html

    அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

    இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  15. 'VGK's சிறுகதை விமர்சனப்போட்டி - 2014'

    ’VGK-10 மறக்க மனம் கூடுதில்லையெ’

    இந்த சிறுகதைக்கு திருமதி. ஞா. கலையரசி அவர்கள் வெகு நாட்களுக்கு முன்பே எழுதி அனுப்பியிருந்த, பரிசுக்குத் தேர்வான விமர்சனம், இன்று அவர்களால், அவர்களின் வலைத்தளப் பதிவினில் தனிப்பதிவாக வெளியிடப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு இதோ:

    http://unjal.blogspot.in/2014/11/4.html

    இது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.

    தன் வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ள திருமதி ஞா. கலையரசி அவர்களின் பெருந்தன்மைக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    அன்புடன் கோபு [VGK]
    ooooooooooooooooooooooooooo

    பதிலளிநீக்கு
  16. 'VGK's சிறுகதை விமர்சனப்போட்டி - 2014'

    இந்த சிறுகதைக்கு பெரியவர் முனைவர் பழனி கந்தசாமி ஐயா அவர்கள் வெகு நாட்களுக்கு முன்பே எழுதி அனுப்பியிருந்த விமர்சனம், இன்று அவர்களால், அவர்களின் பதிவினில் வெளியிடப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு இதோ:

    http://swamysmusings.blogspot.com/2014/11/vgk-10.html

    இது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.

    நடைபெற்ற சிறுகதை விமர்சனப் போட்டியில் தன் விமர்சனம் பரிசுக்குத் தேர்வாகாவிட்டாலும்கூட அதனைத் தன் பதிவினில் வெளியிட்டு சிறப்பித்துள்ள முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்களின் பெருந்தன்மைக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

    அன்புடன் கோபு [VGK]

    ooooooooooooooooooooooooooo

    பதிலளிநீக்கு
  17. நினைவுகள் எப்போதும் நிஜத்தைவிட ஆனந்தமானவைதான்.

    பதிலளிநீக்கு
  18. வெளிப்புர அழகு என்றுமே நிரந்தரமில்லைதான் திருச்சி மலைககோட்டையும் சுற்றி பார்த்தாச்சு

    பதிலளிநீக்கு
  19. ஏற்கனவே நான் படித்த அருமையான சிறுகதை.

    பரிசை வெல்லப்போகும் விமர்சகர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya September 28, 2015 at 8:46 AM

      //ஏற்கனவே நான் படித்த அருமையான சிறுகதை. பரிசை வெல்லப்போகும் விமர்சகர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

      மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)

      நீக்கு
  20. நல்ல கந வரிக்கு வரி வார்த்தக்கு வார்த்த படிச்சு ரசிச்சு விமரிசனம் எளுத அல்லாரும் காத்துகிட்டு இருக்காக.

    பதிலளிநீக்கு
  21. இளமைகால மனதில் தோன்றும் சபலங்கள் சஞ்சலங்களை அழகாக சொன்னகதை. அவ்ம்மா மனநிலை சரி இல்லைனா என்ன ஒருகாலத்தில் அவங்களும் நல்லா இருந்தவங்கதானே மகனுக்கு சொல்வது போல தனக்கே சமாதானம் சொல்லிக்கொண்ட நிலை.

    பதிலளிநீக்கு
  22. ஒருத்தி ஒருமுகமாக தனக்குத்தானே என்னை மிகவும் விரும்பியவள். மற்றொருத்தி என்னால் மட்டுமே ஒருமுகமாக விரும்பப்பட்டவள்.//இது ஒண்ணு போதாதா பின்னலான ஒரு கதையை கொடுக்க?
    //
    ஒரே ஒரு நிமிடம் தயங்கினாள். ஏதோ பலமாக யோசித்தாள். ஆனாலும் பிறகு வாங்கிக்கொள்ள மறுத்து விட்டாள். பர்ஸை என்னிடம் ஒப்படைத்தபடியே, கண்ணில் ஏதோ தூசி விழுந்து விட்டதாகக்கூறி, தன் புடவைத்தலைப்பால் துடைத்துக்கொண்டாள்.

    மீண்டும் தன் முத்துப்பற்களைக்காட்டி ஒரு சிரிப்பு சிரித்தபடியே என்னிடம் விடைபெற்றுச் சென்றாள். அவள் என் கண்பார்வையிலிருந்து மறையும் வரை அவள் நடந்து சென்ற பாதையையே நோக்கிக்கொண்டிருந்தேன்.

    என்னை ஜன்ம ஜன்மமாக, ஆத்மார்த்த அன்புடன் தொடர்ந்து வந்துள்ள, ஏதோவொரு மிக நெருங்கிய உண்மையான உன்னதமான உறவு, என்னை விட்டு இப்போது, எங்கோ, வெகுதூரம் விலகிச் செல்வதுபோல உணர்ந்தேன்.

    அதன் பிறகு இன்று வரை நான் அவளை சந்திக்கவே இல்லை.// பலரையும் நெகிழ்த்திவிடும் இந்த கிளைமாக்ஸ். என்னையும்தான்.

    பதிலளிநீக்கு
  23. //தனது மகனின் தேர்வான மருமகளைப் பார்த்தபோது மனதில் விரிந்த காட்சிப் பிரதிபலிப்பு அற்புதம். அவர்கள் வீட்டிற்குச் சென்றதும், பெண்ணுடைய அம்மாவைப் பார்க்க நேர்கையில் அவள் தன்னால் விரும்பப் பட்டவள் என்று அறிந்தபோது, தன்னை விரும்பியவள் தன்னையே மறந்த நிலையில் இருப்பதைப் பார்த்து

    மனம் வருந்தி தாங்கொணாத் துயருற்றதையும், தலை திருப்பி நின்றதையும் தத்ரூபமாய் விளக்கியது தரமானதொரு நடை.


    இளைஞனாய் இருந்தபோது தன்னம்பிக்கையுடனும், விரும்பியது கிடைக்காதபோது, கிடைத்ததை விரும்பி ஏற்று இனிய முறையில் இல்லறம் நடத்தியதிலும், தன்னை விரும்பியவளைச் சந்திக்க நேர்ந்தபோது, கண்ணியமாய் நடந்து கொண்ட விதத்திலும், தான் விரும்பியவள் தன்னிலை மறந்த நிலையில் இருப்பினும் அவள் பெண்ணை விரும்பிய தன் பிள்ளையின் காதலை ஏற்று அதற்குச் சம்மதம் சொல்லும் தந்தையாய் விளங்கும் இடத்திலும் கதாநாயகன் நம் நெஞ்சங்களில் நீங்காத ஓர் இடத்தைப் பிடித்துவிடுகிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. My Dear Mr. Seshadri Sir,

      வாங்கோ, வணக்கம்.

      கதையைப்பற்றிய தங்களின் சிறப்புப்பார்வையும், விரிவான + ஆதரவான + உற்சாகம் அளித்திடும் கருத்துக்களும் என் மனதுக்கு மிகவும் திருப்தியாக உள்ளன. தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      அன்புடன் VGK

      நீக்கு
  24. இந்தப் போட்டிக்கான கதையினை முன்பு நான் என் வலைத்தளத்தினில், 2011-இல் என் வலையுலக ஆரம்ப நாட்களில், வெளியிட்டிருந்தபோது அதிலுள்ள பின்னூட்ட எண்ணிக்கைகள்:

    66 + 61 + 57 + 79 = 263

    அதற்கான இணைப்புகள் (பகுதி-1 முதல் பகுதி-4 வரை):

    https://gopu1949.blogspot.in/2011/06/1-of-4_19.html

    https://gopu1949.blogspot.in/2011/06/2-of-4_20.html

    https://gopu1949.blogspot.in/2011/06/3-of-4_22.html

    https://gopu1949.blogspot.in/2011/06/4-of-4_26.html

    பதிலளிநீக்கு
  25. இந்த லிங்க் இன்னிக்குதான் கிடைச்சுது.. இங்கயே பகுதி பகுதியா முழு கதையுமே படிக்கும்படி கிடைச்சுது. இது கற்பனைகதையா உண்மையும்கலந்திருக்கா. ரசிச்சு ரசிச்சு எழுதி இருக்கேள் பெரிப்பா படிக்கவே ரொம்ப நன்னா இருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. happy November 1, 2016 at 2:01 PM

      வாம்மா ..... ஹாப்பி, வணக்கம்.

      //இந்த லிங்க் இன்னிக்குதான் கிடைச்சுது.. இங்கயே பகுதி பகுதியா முழு கதையுமே படிக்கும்படி கிடைச்சுது.//

      ஆஹா, மிக்க மகிழ்ச்சி.

      //இது கற்பனைகதையா உண்மையும் கலந்திருக்கா.//

      60-70 உண்மைகளும் 30-40% கற்பனைகளும் என வைத்துக்கொள்ளலாம். :)

      //ரசிச்சு ரசிச்சு எழுதி இருக்கேள் பெரிப்பா. படிக்கவே ரொம்ப நன்னா இருக்கு//

      அப்படியா! மிகவும் சந்தோஷம்.

      இதோ மேலும் ஒரு ஜோரான கதைக்கான இணைப்பு:

      ‘மனசுக்குள் மத்தாப்பூ’ (நான் வரைந்துள்ள படத்துடன்)

      http://gopu1949.blogspot.in/2014/10/vgk-40-1-of-4.html

      http://gopu1949.blogspot.in/2014/10/vgk-40-2-of-4.html

      http://gopu1949.blogspot.in/2014/10/vgk-40-3-of-4.html

      http://gopu1949.blogspot.in/2014/10/vgk-40-4-of-4.html

      நீக்கு
  26. Muthuswamy MN சிறு கதை அருமை. ஸ்டோரில் கிட்டத்தட்ட அநேக இளைஞர்களின் மனதை படம் எடுத்து காட்டுகிறது.👍👃✌

    - Facebook Comments from one Mr. Mohan on 26.11.2016 (He was my neighbour in that Store Life during 1965 to 1980)

    Ref: https://www.facebook.com/photo.php?fbid=10210062265747199&set=a.10203295333658126.1073741826.1653561109&type=3&comment_id=10210080820611059&reply_comment_id=10210122228686235&force_theater=true

    பதிலளிநீக்கு
  27. மேற்படி என் சிறுகதைக்கான விமர்சனப்போட்டிக்கு, ஏராளமாக வந்து குவிந்திருந்த விமர்சனங்களில், உயர்திரு நடுவர் அவர்களால், பரிசுக்குத் தேர்வான விமர்சனங்களை மட்டும் படிக்க இதோ இணைப்புகள்:

    முதல் பரிசுக்குத் தேர்வானவை:
    http://gopu1949.blogspot.in/2014/04/vgk-10-01-04-first-prize-winners.html

    இரண்டாம் பரிசுக்குத் தேர்வானவை:
    http://gopu1949.blogspot.in/2014/04/vgk-10-02-04-second-prize-winners.html

    மூன்றாம் பரிசுக்குத் தேர்வானது:
    http://gopu1949.blogspot.in/2014/04/vgk-10-03-04-third-prize-winner.html

    சிறுகதை விமர்சனப் போட்டிகளின் நிறைவினில், பரிசு பெற்ற ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பற்றிய முழு விபரங்கள் அறிய, இதோ ஒருசில சுவாரஸ்யமான இணைப்புகள்:

    http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html

    http://gopu1949.blogspot.in/2014/11/vgk-01-to-vgk-40-total-list-of-hat.html

    http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_6.html

    http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_7.html

    பதிலளிநீக்கு
  28. Mail message received today 31.03.2017 at 15.46 Hrs.
    =====================================================

    அன்பின் கோபு ஸார்,

    சில கதைகள் படிக்கும் போதே மறந்து போகும். சில கதைகள் படித்ததும் மறந்து போகும்.... சில கதைகள் மணிக்கணக்கில் மனத்துள் நிற்கும். சிலவை நாட்கள் ... வாரங்கள்.... மாதங்கள்... ஆண்டுகள்... என்று நீளும்.

    சில கதைகள் "மறக்க மனம் கூடுதில்லையே..."

    கூடவே பிரயாணம் செய்யும் மனத்துள் ஒரு ஓரத்தில்... ஒரு உண்மையை சொல்லிக் கொண்டே கற்றுத் தரும். இதோ..... மனம் மறக்காத பல கதைகளில் இதுவும் ஒன்றாகி..... என்ன சொல்வது.... எழுத்துக்கள் ஒன்றாகக் கூடி..... ஏதோ சத்திய பிரமாணம் செய்து கொண்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. அருமையான சிந்தனை.... சூடான கும்பகோணம் டிகிரி காப்பி மாதிரி பிரமாதம்.....! அன்புடன்

    இப்படிக்குத் தங்கள் எழுத்துக்களின்
    பரம ரஸிகை

    பதிலளிநீக்கு
  29. இந்தக் கதையை எப்படி படிக்கத் தவறினேன் தெரியவில்லையே?!

    உங்களுக்கே உரித்தான நகைச்சுவை இழையூட மனதை வருடும் கதை. கொஞ்சம் மெலோடிராமா போல் தோன்றினாலும் யதார்த்தமும் மேலோங்கி இதயத்தைச் சற்றே கனமாக்கும் நடையும் எழுத்தும் கதையை மறக்க முடியாது செய்கின்றன. மிகவும் ரசித்துப் படிக்க வைத்ததுடன் நிற்காமல் என் வாழ்வில் இப்படி வந்து போன்வர்கள் பட்றி நினைக்க வைத்துவிட்டது.

    அருமை சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Durai A June 8, 2017 at 3:11 PM

      வாங்கோ ஸார், வணக்கம் ஸார்.

      //இந்தக் கதையை எப்படி படிக்கத் தவறினேன் தெரியவில்லையே?!//

      இதுபோன்ற என் எவ்வளவோ ‘மிஸ்’களை (கதையின் கதாநாயகிகளை) நீங்க மிஸ் பண்ணி இருக்கீங்கோ, ஸார். :) அதில் இதுவும் ஒன்றாகும் ஸார்.

      //உங்களுக்கே உரித்தான நகைச்சுவை இழையூட மனதை வருடும் கதை. கொஞ்சம் மெலோடிராமா போல் தோன்றினாலும் யதார்த்தமும் மேலோங்கி இதயத்தைச் சற்றே கனமாக்கும் நடையும் எழுத்தும் கதையை மறக்க முடியாது செய்கின்றன.//

      மிகவும் மகிழ்ச்சி ஸார்.

      ’வஸிஷ்டர் வாயால் பிரும்மரிஷி’ .... போல நினைத்து மகிழ்ந்தேன்.

      //மிகவும் ரசித்துப் படிக்க வைத்ததுடன் நிற்காமல் என் வாழ்வில் இப்படி வந்து போனவர்கள் பட்றி நினைக்க வைத்துவிட்டது. அருமை சார்.//

      மிகவும் சந்தோஷம் ஸார். ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இதுபோல எவ்வளவோ விஷயங்களும், இனிய மறக்க முடியாத தருணங்களும் நடைபெற்றிருக்கலாம்தான். சிலவற்றை மட்டும் நாம் கொஞ்சம் வெளியே சொல்லிக்கொள்ள முடியும். பலவற்றை ‘ஊமை கண்ட கனவு’போல நமக்குள்ளே மட்டுமே நம் மனதில் புதைத்து வைத்துக்கொள்ள மட்டும்தான் முடியும்.

      தங்களின் அன்பான, அதிசயமான, ஆச்சர்யமான வருகைக்கும், அழகான ஆழமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

      நீக்கு
  30. பாதி படித்துக்கொண்டிருக்கேன்.

    "அதி சீக்கரமேவ நீங்களே எனக்கு மாமனார் மாமியாராகப் பிராப்திரஸ்து” "

    அடக்கமுடியாத சிரிப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லைத் தமிழன் February 6, 2018 at 12:24 PM

      வாங்கோ ஸ்வாமீ, வணக்கம்.

      //பாதி படித்துக்கொண்டிருக்கேன்.//

      ஆஹா, சந்தோஷம். :)

      //"அதி சீக்கரமேவ நீங்களே எனக்கு மாமனார் மாமியாராகப் பிராப்திரஸ்து” "

      அடக்கமுடியாத சிரிப்பு.//

      :)))))))))))))))))))))))))))

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

      ஆமாம். ஸ்வாமீ. இது உண்மையிலேயே என் வாழ்க்கையில் அன்று நடந்தது. நான் என் மனதில் நிஜமாலும் சொல்ல நினைத்ததை மட்டுமே அப்படியே எழுத்துக்களில் இங்கு கொண்டு வந்துள்ளேன்.

      அதனால் மட்டுமே இந்தக்கதையில் அத்தனை உயிரோட்டம் உள்ளது. :)

      நீக்கு
  31. "மறக்க மனம் கூடுதில்லையே" - நிஜத்துக்குப் பக்கத்தில் கடைசிப் பகுதி மட்டும் வரவில்லையே தவிர, முழுக் கதையும் ஒருவர் வாழ்வில் நடந்த சொந்தக் கதையோ என்று நினைக்கும்படி இயல்பான நடை, இயல்பான வர்ணிப்புகள். மிகவும் ரசித்துப் படித்த கதை.

    நீங்கள் குறிப்பிடும் ஸ்டோர் எப்படி இருந்திருக்கும் என என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. நான் என் 10 வயதில், இதைப் போன்ற (ஆனால் மிகப் பெரிய கிரௌண்ட், அதைச் சுற்றி தொடர் வீடுகள், ஆனால் ஒவ்வொன்றும் பெரியவை, ஹால், கிச்சன், உள் ரூம், பெரிய திறந்தவெளி அறை, அதற்குப்பக்கத்தில் குளிக்கும் அறை கொண்டவை, ஒவ்வொரு வீட்டுக்கும் பொதுவான சுவர் அமைப்பு. அப்படிப்பட்ட வளாகத்தில் வசித்திருக்கிறேன். நடுவில் பெரிய கிணறு. அப்புறம் வளாகத்தில் ஒரு புறத்தில் பொது கழிவறை. ஆனால் நீங்கள் குறிப்பிட்டுள்ளது மிக சிறிய சைஸ் என்று புரிந்துகொள்ள முடிகிறது). அங்கு மின்னல் கீற்றாக பெண்களைப் பார்ப்பதைத் தவிர வேறு பேசுவதற்கு சந்தர்ப்பமே இருக்காதே.

    இரவு வெகு நேரம் நண்பர்களோடு பேசிக்கொண்டு அகாலத்தில் வீடு திரும்பினான் என்று சொல்லியிருக்கிறீர்கள் (அது உங்கள் ஆசையா, அல்லது அப்படிப்பட்ட சந்தர்ப்பங்கள் உங்களுக்கு வாய்த்துள்ளதா? எனக்கு அந்தமாதிரி வாய்ப்பே கிடையாது)

    தன்னை விரும்பிய பெண் - மனதில் சஞ்சலத்தை உருவாக்கிய கேரக்டர். அவளை நினைத்தால் மனதில் 'பாவம்' என்ற எண்ணம் தோன்றுவதைத் தவிர்க்க இயலவில்லை.

    'தான் விரும்பிய பெண்'- கிளர்ச்சி, அவர்கள் வீட்டில் ரவா லட்டு வாங்கி சாப்பிட்டதையே காலா காலத்துக்கும் மனதில் நினைத்துக்கொண்டிருப்பது, இடையில் சந்தர்ப்பம் தராத வெடிச்சத்தத்தின்மேல் வெறுப்பு என்று மிக அருமையாக வர்ணனை செய்திருக்கிறீர்கள். பொதுவாக இளமையில் நாம் விரும்பிய பெண் என்றால், நாம், கொஞ்சம் கூடுதலாகவே அவளின் அழகை மனக்கண்ணில் கொண்டுவருவோம், ஸ்டோர் செய்துவைத்துக்கொள்வோம். அந்த அனுபவங்கள் ரசனையுடன் எழுதப்பட்டுள்ளன.

    கடைசியில், அப்பா பார்த்த பெண்ணைத் திருமணம் செய்துகொள்வது, 'நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை' என்ற பாட்டை நினைவுபடுத்தியது. பிற்காலத்தில் அதனை எண்ணி மகிழ்வதும் (அதாவது தந்தை தனக்கு சரியான துணையைத்தான் தேடித்தந்துள்ளார் என்பதை), 'எது நடந்தாலும் நன்மைக்கே' என்பதையும் மனதில் தோன்றச்செய்தது.

    'தன்னை விரும்பிய பெண்' மீண்டும் சந்திக்க நேர்ந்ததும், அவள் நடந்துகொண்ட இயல்பான விதமும் மிகவும் ரசிக்கச் செய்தது. அந்தப் பகுதிதான் இந்தக் கதையின் ஹைலைட் என்று எனக்குப் படுகிறது. அவள் மீது பரிதாபமும், நன்றாக இருக்கட்டும் என்ற உணர்வும் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. 'கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே' என்றும் தோன்றியது. எப்போதும் எளிதாகக் கிடைக்கும் பொருளின் அருமை தெரிவதில்லை.

    கடைசிப் பகுதியில், 'தான் விரும்பிய பெண்'ணின் நிலையும், அவள் மகளையே தன் மகனுக்குப் பெண் பார்ப்பதும், நன்றாக இருந்தாலும், கொஞ்சம் 'அதீத'மாகவும் என் மனசுக்குத் தோன்றியது. அப்படி நடக்கவும் வாய்ப்பு இருக்கே (அபூர்வமா). அப்படி அந்தப் பெண்ணை வீட்டுக்கு மருமகளாகக் கொண்டுவந்தாலும், எப்போதும் மனசு அவள் அம்மாவை நினைவுக்குக் கொண்டுவருமே (அதை வெளியிலும் சொல்லமுடியாதே).

    கதையை மிகவும் ரசித்துப் படித்தேன். நல்லா எழுதியிருக்கீங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லைத் தமிழன் February 6, 2018 at 12:46 PM

      //"மறக்க மனம் கூடுதில்லையே" - நிஜத்துக்குப் பக்கத்தில் கடைசிப் பகுதி மட்டும் வரவில்லையே தவிர, முழுக் கதையும் ஒருவர் வாழ்வில் நடந்த சொந்தக் கதையோ என்று நினைக்கும்படி இயல்பான நடை, இயல்பான வர்ணிப்புகள். மிகவும் ரசித்துப் படித்த கதை.//

      தாங்கள் சொல்வது மிகச்சரியே. உண்மையோ, கற்பனையோ .. ஒருசில சம்பவங்களைக் கதையாகச் சொல்ல ஆரம்பித்து விட்ட பிறகு, அதற்கு ஏதேனும் ஒரு முடிவு கொடுத்து முடிக்கத்தானே வேண்டியுள்ளது. அதனால் இறுதிப் பகுதியையும், அதில் சம்பந்தப்பட்டுள்ள முதல் பகுதியின், நான்காம் பத்தியையும் நான் என் கற்பனையைப் புகுத்திக் கொண்டு வரும்படி ஆகிவிட்டது.

      >>>>>

      நீக்கு
    2. கோபு >>>>> நெல்லைத் தமிழன் (2)

      //நீங்கள் குறிப்பிடும் ஸ்டோர் எப்படி இருந்திருக்கும் என என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. நான் என் 10 வயதில், இதைப் போன்ற (ஆனால் மிகப் பெரிய கிரௌண்ட், அதைச் சுற்றி தொடர் வீடுகள், ஆனால் ஒவ்வொன்றும் பெரியவை, ஹால், கிச்சன், உள் ரூம், பெரிய திறந்தவெளி அறை, அதற்குப்பக்கத்தில் குளிக்கும் அறை கொண்டவை, ஒவ்வொரு வீட்டுக்கும் பொதுவான சுவர் அமைப்பு. அப்படிப்பட்ட வளாகத்தில் வசித்திருக்கிறேன். நடுவில் பெரிய கிணறு. அப்புறம் வளாகத்தில் ஒரு புறத்தில் பொது கழிவறை. ஆனால் நீங்கள் குறிப்பிட்டுள்ளது மிக சிறிய சைஸ் என்று புரிந்துகொள்ள முடிகிறது).//

      ஆம். எங்கள் வீடுகள் ஒவ்வொன்றும் சிறியவை மட்டுமே. ஆனால் பொதுவாகப் புழங்கும் இடங்கள் வீட்டைவிட நன்கு விஸ்தாரமானவைகளாகும்.

      சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்பு திரு. நாராயண ஐயர் என்பவரால் மிகவும் திட்டமிட்டு கட்டப்பட்டவை.

      1900 முதல் 1940 வரை அவரே ஓனராக இருந்துள்ளார்.

      அதில் ஒரு வீடு [வீட்டு எண்: 5/15] காலியாகவே விடப்பட்டு, பெண்களில் மாதாந்திர தீட்டு நாட்களில் தங்கிக்கொள்ளவே விடப்பட்டிருந்தது என்பது மேலும் சிறப்பானது.

      பெண்களுக்கான மிகப்பெரிய கழிப்பறை வழியாக, ஸ்டோரில் குடியிருக்கும் பிறர் கண்களில் படாமல் இந்த 5/15 என்ற வீட்டினை உள்பக்கமாக அடைந்து விடலாம். மேலும் அவர்களில் யாரேனும் வெளியே செல்ல வேண்டும் அல்லது அலுவலகம் செல்ல வேண்டும் அல்லது சினிமாக் கொட்டகைக்குச் செல்ல வேண்டும் என்றாலும், ஸ்டோரில் உள்ள பிறர் கண்களில் படாமல் சுலபமாக வெளியேறி விடலாம். அதுபோன்ற ஒரு மிகச் சிறப்பான திட்டமிட்ட அமைப்பாக இருந்தது அந்த மிகப்பெரிய ஸ்டோர்.

      எச்சில், தீண்டல், விழுப்பு, மடி, ஆச்சாரம் பார்த்து வந்த பிராமணக் குடும்பங்கள் மட்டுமே அங்கு, கடைசிவரை வசிக்க அனுமதிக்கப்பட்டன.

      அதாவது இந்த 5/15 என்ற தீட்டு ரூமுக்கு மட்டும் மூன்று வாசல்கள்.

      ஒன்று: வீட்டின் வெளிப்பக்கமுள்ள வாசல். அந்தப் பெண்ணின் வீட்டினர் சாப்பாடு, குடிநீர் போன்றவற்றை அளிக்கவும், நான்காம் நாள் விடியற்காலம் அவர்கள் தலையில் தண்ணீர்/வெந்நீர் ஊற்றி குளிக்கச் செய்யவும் அமைந்த, பிரதான வாசல் இது. சாப்பிட்ட பாத்திரங்களைத் தேய்த்து, அலம்பி, கவிழ்த்து வைக்கச் சொல்வார்கள். அதனை தண்ணீர் தெளித்து மட்டுமே எடுத்துக்கொண்டு வருவார்கள்.

      >>>>>

      நீக்கு
    3. கோபு >>>>> நெல்லைத் தமிழன் (3)

      இந்த டோர் நம்பர்: 5/15 இன் உள்பக்கமுள்ள இரு வாசல்களில் ஒன்று கழிவறைக்குச் செல்லும்படியும், மற்றொன்று பிரதான சாலைக்குச் செல்லும் படியும், மிக அழகாகத் திட்டமிட்டு அமைந்திருந்தார் அந்த திரு. நாராயண ஐயர் என்பவர்.

      அதுபோல ஒவ்வொரு வீட்டுச் சாக்கடைக் கழிவு நீர் வெளியேறவும், அவை ஆங்காங்கே அடைத்துக்கொள்ளாமல் இருக்கவும், திட்டமிட்டு DRAINAGE வசதிகள் செய்திருந்தார்.

      அதன்பின் 1940 க்கு மேல் 1990 வரை, ஓரிரு அண்ணன்-தம்பி முஸ்லீம் சாயபுக்களிடம் இந்த ஸ்டோரின் ஓனர்ஷிப் மாறி விட்டது. அப்போதும் அந்த நல்ல முஸ்லீம் சாயபுக்கள் பிராமணர்களை மட்டுமே, இந்த ஸ்டோர் வீடுகளில் குடி அமர்த்தி வந்தார். வாடகைப் பணம் வசூல் செய்து கொடுக்கவும்கூட ஒரு ஐயர் ஏஜண்ட்டை நியமித்திருந்தார்கள் அந்த முஸ்லீம் சகோதரர்கள்.

      1990 க்கு மேல் அனைவரையும் காலி பண்ணச் சொல்லி, நோட்டீஸ் கொடுத்து விட்டார்கள். 1995-க்குள் அனைவரும் காலி செய்து எங்கெங்கோ புறப்பட்டுப் போய் விட்டனர்.

      அதன்பின் 1/3 போர்ஷன் அடுக்குமாடி வீடுகளாகவும், 1/3 போர்ஷன் கமர்ஸியல் காம்ப்ளெஸ் ஆகவும் மாறிப்போய் உள்ளன. இன்னும் 1/3 போர்ஷன் (சுமார் 125'x80' = 10000 சதுர அடி) இன்றும் வெறும் பொட்டலாகவே உள்ளது. அதன் இன்றைய விலை பல கோடிகள் இருக்கும்.

      >>>>>

      நீக்கு
    4. கோபு >>>>> நெல்லைத் தமிழன் (4)

      //அங்கு மின்னல் கீற்றாக பெண்களைப் பார்ப்பதைத் தவிர வேறு பேசுவதற்கு சந்தர்ப்பமே இருக்காதே.//

      ஆமாம். ஆமாம். மிகப்பெரிய தொல்லை. பலரின் கழுகுக்கண்கள் எப்போதும் இவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டே வேறு இருக்கும்.

      //இரவு வெகு நேரம் நண்பர்களோடு பேசிக்கொண்டு அகாலத்தில் வீடு திரும்பினான் என்று சொல்லியிருக்கிறீர்கள் (அது உங்கள் ஆசையா, அல்லது அப்படிப்பட்ட சந்தர்ப்பங்கள் உங்களுக்கு வாய்த்துள்ளதா? எனக்கு அந்தமாதிரி வாய்ப்பே கிடையாது)//

      நானும் இவ்வாறு, தெரு வாசலில், என் நண்பர்களுடன், பெரும்பாலும் நள்ளிரவு வரை பேசிக்கொண்டே இருந்தது உண்டு. அதைத்தான் இந்தக்கதையில் அப்படியே சொல்லியுள்ளேன். எனக்கு அப்போதெல்லாம் இதில் விருப்பமும் இருந்தது என்பதே உண்மை.

      >>>>>

      நீக்கு
    5. கோபு >>>>> நெல்லைத் தமிழன் (5)

      //தன்னை விரும்பிய பெண் - மனதில் சஞ்சலத்தை உருவாக்கிய கேரக்டர். அவளை நினைத்தால் மனதில் 'பாவம்' என்ற எண்ணம் தோன்றுவதைத் தவிர்க்க இயலவில்லை.//

      ஆனால் அவள் மிகவும் நல்ல பொண்ணு. மிகவும் ஜாலி டைப் ஆசாமி. எதைப்பற்றியும் அலட்டிக்கொள்ளவே மாட்டாள். எல்லோரிடமும் மிகவும் கலகலப்பாகப் பேசுவாள்.

      //'தான் விரும்பிய பெண்'- கிளர்ச்சி, அவர்கள் வீட்டில் ரவா லட்டு வாங்கி சாப்பிட்டதையே காலா காலத்துக்கும் மனதில் நினைத்துக்கொண்டிருப்பது, இடையில் சந்தர்ப்பம் தராத வெடிச்சத்தத்தின்மேல் வெறுப்பு என்று மிக அருமையாக வர்ணனை செய்திருக்கிறீர்கள்.//

      இவையெல்லாம் அன்று உண்மையில் நடந்தவைகள் மட்டுமே. அதனால் அந்த என் வர்ணனைகளில் நல்ல உயிரோட்டமும் உள்ளது.

      //பொதுவாக இளமையில் நாம் விரும்பிய பெண் என்றால், நாம், கொஞ்சம் கூடுதலாகவே அவளின் அழகை மனக்கண்ணில் கொண்டுவருவோம், ஸ்டோர் செய்துவைத்துக்கொள்வோம். அந்த அனுபவங்கள் ரசனையுடன் எழுதப்பட்டுள்ளன.//

      இதில் எதையும் நான் மிகைப்படுத்தவில்லை என்பதே உண்மை. தங்களின் ரஸனை எனக்கும் இப்போது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.

      >>>>>

      நீக்கு
    6. கோபு >>>>> நெல்லைத் தமிழன் (6)

      //கடைசியில், அப்பா பார்த்த பெண்ணைத் திருமணம் செய்துகொள்வது, 'நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை' என்ற பாட்டை நினைவுபடுத்தியது. பிற்காலத்தில் அதனை எண்ணி மகிழ்வதும் (அதாவது தந்தை தனக்கு சரியான துணையைத்தான் தேடித்தந்துள்ளார் என்பதை), 'எது நடந்தாலும் நன்மைக்கே' என்பதையும் மனதில் தோன்றச்செய்தது.//

      ’நடப்பதெல்லாம் நாராயணன் செயலே’ என்பார்கள். அதுபோலவே என் விஷயத்திலும் அன்று நடந்திருக்கலாம். நாம் நினைத்தது கிடைக்காமல் போனாலும், நமக்குக் கிடைத்ததில் திருப்தி பட்டுக்கொள்ளத்தானே வேண்டும். அதையேதான் நானும் செய்துள்ளேன்.

      >>>>>

      நீக்கு
    7. கோபு >>>>> நெல்லைத் தமிழன் (7)

      //'தன்னை விரும்பிய பெண்' மீண்டும் சந்திக்க நேர்ந்ததும், அவள் நடந்துகொண்ட இயல்பான விதமும் மிகவும் ரசிக்கச் செய்தது. அந்தப் பகுதிதான் இந்தக் கதையின் ஹைலைட் என்று எனக்குப் படுகிறது. அவள் மீது பரிதாபமும், நன்றாக இருக்கட்டும் என்ற உணர்வும் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. 'கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே' என்றும் தோன்றியது. எப்போதும் எளிதாகக் கிடைக்கும் பொருளின் அருமை தெரிவதில்லை.//

      அது அவளின் பிறவி குணம். விசித்திரமான தனித்தன்மைகள் வாய்ந்தவள். நல்லவள். யாருக்கும் கெடுதல் நினைக்காத மனது அவளுக்கு. அவள் ஒரு PECULIAR TYPE.

      ஒரு நாள் அவள் தன் கல்லூரி படிக்கும் சொந்த மகளிடம் என்னை அறிமுகம் செய்யும் போது “இவர் அந்தக்காலத்தில் என்னுடைய ’BOY FRIEND’ ஆக்கும் என்று துணிந்து சொன்னாள்.

      >>>>>

      நீக்கு
    8. கோபு >>>>> நெல்லைத் தமிழன் (8)

      //கடைசிப் பகுதியில், 'தான் விரும்பிய பெண்'ணின் நிலையும், அவள் மகளையே தன் மகனுக்குப் பெண் பார்ப்பதும், நன்றாக இருந்தாலும், கொஞ்சம் 'அதீத'மாகவும் என் மனசுக்குத் தோன்றியது. அப்படி நடக்கவும் வாய்ப்பு இருக்கே (அபூர்வமா). அப்படி அந்தப் பெண்ணை வீட்டுக்கு மருமகளாகக் கொண்டுவந்தாலும், எப்போதும் மனசு அவள் அம்மாவை நினைவுக்குக் கொண்டுவருமே (அதை வெளியிலும் சொல்லமுடியாதே).//

      அவை அனைத்தும், கதையை எப்படியாவது முடிக்க வேண்டும் என்பதற்காக நான் மேற்கொண்ட, கற்பனைகள் மட்டுமே ..... ஸ்வாமீ. அதில் எதுவும் உண்மை அல்ல.

      //கதையை மிகவும் ரசித்துப் படித்தேன். நல்லா எழுதியிருக்கீங்க.//

      தங்களின் அன்பான வருகைக்கும், ஆழமான வாசிப்புக்கும், அருமையான + அழகான + இதமான கருத்துக்களுக்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸ்வாமீ.

      அன்புடன் கோபு

      நீக்கு
  32. இந்தக் கதையைப் படிக்கும்போது, என் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களையும் மனதில் கொண்டுவந்துவிட்டது. எதுவுமே 'அவன்' போட்டுவைத்த திட்டப்படிதான் நடக்கிறது.

    என்னை என் இளமைக்காலம், திருமண காலம் வரையிலான பகுதியை மீண்டும் நினைக்குமாறு வைத்துவிட்டீர்கள். அதுவே ஒரு கதாசிரியராக உங்களது வெற்றி. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லைத் தமிழன் February 6, 2018 at 12:48 PM

      //இந்தக் கதையைப் படிக்கும்போது, என் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களையும் மனதில் கொண்டுவந்துவிட்டது.//

      இந்த என் கதையைப் படித்துள்ள அனைவருக்குமே, அவரவர்களின் வாழ்வினில் நிகழ்ந்த சம்பவங்களை மனதில் அசை போட வைத்திருக்கும் என்பதே உண்மை. சிலரால் மட்டுமே அதனைத் துணிந்து வெளிப்படுத்த முடியும். பலராலும் அதுபோலச் செய்ய இயலாது.

      // எதுவுமே 'அவன்' போட்டுவைத்த திட்டப்படிதான் நடக்கிறது.//

      ஆம். ‘அவன்’ இன்றி ஓர் அணுவும் அசையாது. அவனுக்கு விருப்பமில்லாமல், யார் தாலியையும் யாரும் கட்டிவிட முடியாது.

      //என்னை என் இளமைக்காலம், திருமண காலம் வரையிலான பகுதியை மீண்டும் நினைக்குமாறு வைத்துவிட்டீர்கள்.//

      இங்கு வருகை தந்து கருத்தளித்துள்ள அனைவருக்குள்ளும், இதுபோன்றதோர் இனிமையான காதல் கதை (நிஜமாகவோ அல்லது உள் மனதில் மட்டுமோ) நிச்சயமாக இருக்கக்கூடும்.

      //அதுவே ஒரு கதாசிரியராக உங்களது வெற்றி. வாழ்த்துகள்.//

      நானே எழுதி, நானே என்னை வெகுவாகப் பாராட்டிக்கொண்டுள்ள, வெற்றிக்கதைகளில் இதுவும் ஒன்று.

      தங்களின் அன்பான வாழ்த்துகளுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      அன்புடன் கோபு

      நீக்கு
    2. உங்கள் முழுமையான பின்னூட்டங்கள் மிகவும் திருப்தி தருவதாக இருந்தது. என்னால் இப்போது கதையை relate செய்ய முடிகிறது.

      எனக்கு இதில் ஒரு விஷயம் மட்டும் புரியவில்லை. உங்க தகப்பனார் ரொம்ப ஸ்டிரிக்ட் என்றுதான் என் மனதில் உங்கள் பதிவுகளைப் படித்ததன் பிம்பம். எப்படி நள்ளிரவு வரை அரட்டைக் கச்சேரியை அனுமதித்தார் என்று புரியல. (எங்க வீட்டுல இரவு 9 மணிக்கு லைட் ஆஃப். நான் தி நகரில் வேலை பார்த்துவிட்டு இரவு 9.20 ரயிலில்தான் வருவேன். வீட்டை 10 மணிக்கு அடைவேன். மற்றபடி எங்க அப்பா நிச்சயம் எங்கள் நடவடிக்கைகளை எப்படியோ கண்காணித்துக்கொண்டிருப்பார். 2 மாதத்துக்கு ஒருமுறை, நான் வேலை பார்த்துக்கொண்டிருந்த கம்பெனியின் ஓனரைப் பார்த்துப் பேசிட்டுவருவார்.. பையன் ஒழுங்கா இருக்கானா என்ன என்று தெரிஞ்சுக்க). ஒருவேளை அந்த சமயம் உங்கள் தகப்பனார் இல்லையோ? (முதல் பேரனைப் பார்த்துவிட்டுத்தானே மறைந்தார்?)

      நீக்கு
    3. நெல்லைத் தமிழன் February 6, 2018 at 6:08 PM

      வாங்கோ ஸ்வாமீ, தங்களின் மீண்டும் வருகை மீண்டும் எனக்கு மகிழ்வளிக்கிறது.

      //உங்கள் முழுமையான பின்னூட்டங்கள் மிகவும் திருப்தி தருவதாக இருந்தது.//

      முழுமையான பின்னூட்டங்கள் உங்களுடையதாகும். அவற்றிற்கான முழுமையான மறுமொழிகள் (பதில்கள்) மட்டுமே என்னுடையதாகும். :)))))

      எனக்கும் இதில் திருப்தியோ திருப்தி மட்டுமே.

      //என்னால் இப்போது கதையை relate செய்ய முடிகிறது.//

      நீங்களாகவே ஏதேனும் கற்பனையாக கதையை relate செய்து கொண்டு விடாதீர்கள்.

      //எனக்கு இதில் ஒரு விஷயம் மட்டும் புரியவில்லை.//

      கேளுங்கோ ..... எனக்கும் கூட என்னைப்பற்றிய சில விஷயங்கள் இன்னும் புரியாமலேயேதான் உள்ளன. :)

      >>>>>

      நீக்கு
    4. கோபு >>>>> நெல்லைத் தமிழன் [2]

      //உங்க தகப்பனார் ரொம்ப ஸ்டிரிக்ட் என்றுதான் என் மனதில் உங்கள் பதிவுகளைப் படித்ததன் பிம்பம்.//

      அவர் மிகவும் கோபக்காரர்; எங்களுக்கெல்லாம் அவரிடம் அதிக பயம் உண்டு என்பதை மட்டுமே என் பதிவு ஒன்றினில் நான் சொல்லியுள்ளேன். http://gopu1949.blogspot.in/2013/04/7.html

      நான் என் தந்தையுடன் சேர்ந்து வாழ கொடுப்பினை இருந்த காலம் என் முதல் 25 வயது வரை மட்டுமே. அதிலும் முதல் 10-15 வருஷங்கள் நான் குழந்தையாகவும், பள்ளி மாணவனாகவும் இருந்திருப்பேன். எனக்கு 25 வயதாகும்போது அவர் காலமாகிவிட்டார்.

      ஒருவர் ஸ்டிரிக்ட் ஆக இருப்பது என்பது வேறு ..... தன் கோபதாபங்களைக் காட்டுவது என்பது வேறு அல்லவா!

      >>>>>

      நீக்கு
    5. கோபு >>>>> நெல்லைத் தமிழன் [3]

      //எப்படி நள்ளிரவு வரை அரட்டைக் கச்சேரியை அனுமதித்தார் என்று புரியல. (எங்க வீட்டுல இரவு 9 மணிக்கு லைட் ஆஃப். நான் தி நகரில் வேலை பார்த்துவிட்டு இரவு 9.20 ரயிலில்தான் வருவேன். வீட்டை 10 மணிக்கு அடைவேன். மற்றபடி எங்க அப்பா நிச்சயம் எங்கள் நடவடிக்கைகளை எப்படியோ கண்காணித்துக்கொண்டிருப்பார். 2 மாதத்துக்கு ஒருமுறை, நான் வேலை பார்த்துக்கொண்டிருந்த கம்பெனியின் ஓனரைப் பார்த்துப் பேசிட்டுவருவார்.. பையன் ஒழுங்கா இருக்கானா என்ன என்று தெரிஞ்சுக்க).//

      நான் S.S.L.C., [அந்தக்கால 11th Standard] படித்து முடிக்கும் வரை அதாவது 04-04-1966 வரை என் வீட்டில் மின் விளக்குகளுக்கான இணைப்புகளே கிடையாது.

      இதனால் எங்கள் வீட்டில் அவர்கள் நினைத்தாலும், உங்கள் வீடு போல லைட் ஆஃப் செய்ய முடியாது அல்லவா!

      நான் படித்தது முழுவதும் தெரு விளக்கின் மிகவும் மங்கலான வெளிச்சத்தில் மட்டுமே. அங்கேயே நான் படிக்கப்போவதாக நடிப்பேனே தவிர, கையில் பாடப்புத்தகங்களில் ஏதேனும் ஒன்றை சும்மா பெயருக்கு வைத்துக்கொண்டு, நண்பர்களுடன் அரட்டை அடித்துக்கொண்டுதான் இருப்பேன்.

      பாட படிப்பெல்லாம் வகுப்பறையில் வாத்யார்கள் சொல்லித் தரும்போதே என் மண்டையில் அவற்றை ஏற்றிக்கொண்டு விடுவதோடு சரி. தனியாக வீட்டுக்கு வந்து படிப்பதெல்லாம் கிடையவே கிடையாது.

      ஹோம் ஒர்க் கொடுப்பதை மட்டும், சாயங்காலமாக பள்ளி வகுப்பறையிலேயோ அல்லது வீட்டுக்கு வந்ததும், வீட்டில் சூர்ய ஒளி இருக்கும் போதோ செய்து முடித்துக்கொள்வேன்.

      >>>>>

      நீக்கு
    6. கோபு >>>>> நெல்லைத் தமிழன் [4]

      //ஒருவேளை அந்த சமயம் உங்கள் தகப்பனார் இல்லையோ? (முதல் பேரனைப் பார்த்துவிட்டுத்தானே மறைந்தார்?)//

      நான் அவருக்கு மிகவும் பயந்து நடுங்கியதெல்லாம் என் 16 வயது வரை மட்டுமே.

      அதன்பின் நான் 05.04.1966 முதல் சம்பாதிக்கச் சென்று விட்டேன். கஷ்டமான வேலைகள் + மிகக் குறைந்த சம்பளம் மட்டுமே. அதில் பாதி என் டைப்ரைட்டிங் படிப்புச் செலவுகளுக்கும், மீதியை வீட்டுக்கும் கொடுத்து வர ஆரம்பித்தேன். இவ்வாறு ஒரு ஐந்து ஆண்டுகள் போனது.

      இதனால் என் வீட்டில், குறிப்பாக என் தந்தையிடம் என் மதிப்பு கொஞ்சம் உயர்ந்தது.

      அதன் பின் BHEL இல் நிரந்தர உத்யோகத்தில், 04.11.1970 அன்று நான் சேர நேர்ந்தது.

      அப்போது முதல் என் அப்பா, தனது வயதான முடியாத்தனம் + ஓவர் வெயிட் பிரச்சனைகளால், அதிக நடமாட்டம் ஏதும் இல்லாமல், கட்டிலில் உட்காருவது + படுப்பது என்று ஆகி விட்டார்.

      குடும்பத்தின் முழு வரவு செலவுப் பொறுப்புக்களையும் நானே ஏற்றுக்கொண்டு விட்டேன்.

      அதே பெரிய நாராயண ஐயர் ஸ்டோரில், ஒரேயொரு 25 வாட் குண்டு பல்ப் கனெக்‌ஷன் + எலெக்ட்ரிக் சப்-மீட்டர் மட்டும் இருந்த, வேறொரு வீட்டுக்கு நாங்கள் குடி மாறிப் போய் விட்டோம்.

      நான் நிரந்தரப் பணியில் சேர்ந்து, முழுசாக இரண்டு ஆண்டுகள் முடிவதற்குள் 03.07.1972 அன்று எனக்குக் கல்யாணமும் செய்து பார்த்து விட்டனர் ..... என் பெற்றோர்கள்.

      கல்யாணம் ஆகி என்னை நம்பி ஒருத்தி வந்த பின் தெருப் பக்கம் போய் நண்பர்களுடன் விடிய விடிய அரட்டை அடிப்பதையெல்லாம் சுத்தமாக நிறுத்திக்கொண்டு, என் வேலைகளை நான் பொறுப்பாகப் பார்க்க ஆரம்பித்து விட்டேன் :)))))

      18.03.1974 எனக்கு முதல் பிள்ளை பிறந்தான். அவன் தன் ஒரு வயதுக்குள் தத்தித்தத்தி நடப்பதைக்கூட என் அப்பா தன் கண்களால் பார்த்து விட்டார்.

      என்னுடன் ஏழு தலைமுறை முடிவதாகவும், என் பிள்ளையான அவன் புதிய தலைமுறை என்றும் சொல்லி, அவனுக்கு எங்கள் ஏழு தலைமுறையின் முதல் தாத்தாவான ‘கோதண்டராமன்’ என்று பெயர் சூட்டச் சொன்னார் என் தந்தை.

      என் மகனுக்கு அவனின் பூணல் கல்யாணத்தின் போது ‘கோதண்டராம ஸர்மா’ என என் அப்பா சொன்ன பெயரையே சூட்டியுள்ளேன்.

      என் மூத்த பிள்ளைக்கு ஓராண்டு நிறைவு ஆயுஷ்ஹோமம் செய்ய முடியாமல், என் தந்தை காலமாகி விட்டார்.

      எனக்கே இன்னும் அப்தபூர்த்தி ஆயுஷ்ஹோமம் ஏதும் என் பெற்றோர்களால் செய்யப்பட வில்லை என்று, என் கூடப்பிறந்துள்ள அக்காக்கள் + அண்ணாக்கள் மூலம் கேள்விப் பட்டுள்ளேன் .... ஆனால் எனக்கு இப்போது சஷ்டியப்த பூர்த்தியே முடிந்து விட்டது என்பது தனிக்கதையாகும்.

      இந்த விளக்கங்கள் உங்களுக்குப் போதுமா, ஸ்வாமீ !

      அன்புடன் கோபு

      நீக்கு
  33. இந்த மேற்படி கதைக்காக அறிவிக்கப்பட்டிருந்த ’சிறுகதை விமர்சனப்போட்டி’க்காகத் தான் 26.03.2014 அன்று அனுப்பிவைத்த விமர்சனத்தை, சரியாக 4 ஆண்டுகளும் 48 மணி நேரங்களும் கழித்து இன்று (28.03.2018) தன் வலைத்தளத்தினில் ஓர் தனிப்பதிவாக வெளியிட்டு மகிழ்ந்துள்ளார் ’எனது எண்ணங்கள்’ வலைப்பதிவர் திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள்.

    அவரின் விமர்சனத்தைப்படிக்க இதோ இணைப்பு:
    http://tthamizhelango.blogspot.com/2018/03/vgk10.html

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு
  34. WHATS APP COMMENTS RECEIVED ON 29.08.2018 FROM Mrs. VIJI KRISHNAN, RAIL NAGAR, TIRUCHI

    -=-=-=-

    Neengal onion rava sappida ennai tempt panniyadai marakka manam kududillaye.

    (நீங்கள், ஆனியன் ரவா சாப்பிட எனக்கு ஆவலூட்டியதை, என்னால் மறக்க மனம் கூடுதில்லையே!)

    -=-=-=-

    Thanks a Lot விஜி !

    ”ஆயுஷு பூராவும், ஆசைதீர, நல்ல மிகப்பெரிய சைஸில், முறுகலான ஆனியன் ரவா சாப்பிட்டு மகிழக்கடவது” என ஆசீர்வதித்து மகிழ்கிறேன். :)))))

    அன்புடன் வீ..ஜீ !!

    பதிலளிநீக்கு
  35. WHATS-APP COMMENT RECEIVED ON 08.05.2019 FOR VGK-10

    *எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா?*
    *உன்னை விட்டு என் நினைவை பிரிக்கமுடியுமா?*
    *சொல்லாமலா சொன்னான்.*
    *உங்கள் அருவி போன்ற நடை அழகு.*
    *வாழ்த்துக்கள்.*

    இப்படிக்கு,
    மணக்கால் மணி

    பதிலளிநீக்கு