என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

செவ்வாய், 27 டிசம்பர், 2011

முன்னெச்சரிக்கை முகுந்தன்



முன்னெச்சரிக்கை முகுந்தன்

நகைச்சுவைச் சிறுகதை

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-

ஐம்பது வயதைத் தாண்டிய முகுந்தனுக்கு சற்று பெருத்த சரீரம்.  நடந்தாலே பெருமூச்சு வாங்கும். சுகர் பிரஷருடன் சமீபகாலமாக சற்று ஞாபக மறதியும் சேர்ந்து கொண்டுள்ளது. எப்போதுமே எதிலுமே ஒருவித படபடப்பு. எதையாவது மறந்து விட்டு விடுவோமோ என்று முன்னெச்சரிக்கையாகவே இருப்பார்.

ஆபீஸுக்குப் புறப்படும் முன் தனது அலுவலக அடையாள அட்டை, வீட்டு விலாசம், தொலைபேசி எண்களுடன் கூடிய விசிடிங் கார்டு, பஸ் சார்ஜுக்கு வேண்டிய சரியான சில்லரைகளுடன் கூடிய மணிபர்ஸ், அதில் ஒரு தனி அறையில் ரிஸர்வ் கேஷ் ஆக ஒரு ஐநூறு ரூபாய் நோட்டு, மூக்குக்கண்ணாடி, அதற்கான கூடு, மூன்று வேளைகளுக்கான மருந்து மாத்திரைகள், டிபன் பாக்ஸ், வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு, பல் குத்தும் குச்சிகள், காது குடையும் பஞ்சுக்குச்சிகள், கைக்கடிகாரம், பேனா, ஆபீஸ் ஃபைல்கள், செல்போன், சார்ஜர், ஆபீஸ் டிராயர் சாவி, குடை, பஸ்ஸில் படித்துக்கொண்டே போக ஏதாவது வார இதழ்கள், செய்தித்தாள், பேண்ட், பெல்ட், பனியன், ஜட்டி, ஷர்ட், கர்சீப், ஆபீஸ் முடிந்து திரும்புகையில் காய்கறி ஏதாவது கண்ணில் பட்டால் வாங்கி வர ஒரு துணிப்பை, இடுப்பிலிருந்து அடிக்கடி நழுவிப்போகும் அரணாக்கயிறு, வேஷ்டி, துண்டு, செருப்புகள் என்று சகல சாமான்களையும் லிஸ்ட் போட்டு, வீட்டினுள் ஒரு பெரிய கரும்பலகையில் எழுதி, கண்ணில் படும்படியாக தொங்க விட்டிருப்பார். ஏழு மணிக்கு பஸ் பிடிக்க ஆறரை மணிக்கே ரெடியாகி லிஸ்டில் உள்ளபடி சாமான்களையும் ஒரு முறை சரிபார்த்துக்கொள்வார். பேண்ட், ஷர்ட், பனியன், ஜட்டி அணிந்து கொண்டுள்ளோமா, என்பது உள்பட.

ஆபீஸில் அவருக்கு முன்னெச்சரிக்கை முகுந்தன் என்று ஒரு பட்டப்பெயரே கொடுத்திருந்தனர்.

பேண்ட் ஷர்ட் போட்டுக்கொண்டு ஆபீஸ் போகும் இவருக்கு வேஷ்டி-துண்டு எதற்கு என்று நீங்கள் யோசிப்பதும் நியாயமே. அது ஒரு பெரிய கதை. 

ஓடும் பஸ்ஸில் அவசரமாக ஏறிய அவருக்கு, அன்றொரு நாள் போதாத காலம். இவர் போட்டிருந்த டைட் பேண்ட், ஜிப்பு முதல் கணுக்கால் வரை, டாராகக் கிழிந்து (தையல் பிரிந்து) தொடை தெரிய பயணித்ததில் (தொடை நடுங்கி) மனிதன் கூசிக்குறுகிப் போய் விட்டார். அன்று முதல் இன்று வரை, வேஷ்டியும் துண்டும், இவர் போகுமிடமெல்லாம் கூடவே தொற்றிக்கொள்ள ஆரம்பித்தன. 

திருச்சி சிந்தாமணி அண்ணாசிலையிலிருந்து காவிரிக்குப்போகும் வழியில் தான் அவர் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு அமைந்துள்ளது.

அன்று சனிக்கிழமை. அரை நாள் மட்டுமே ஆபீஸுக்குத் தலையைக் காட்டிவிட்டு, சீக்கிரமாகவே வீடு திரும்பி விட்டார், முகுந்தன்.

மறுநாள் காலை ஆறரை மணிக்கு திருச்சி ஜங்ஷனிலிருந்து புறப்படும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயிலைப்பிடித்து சென்னை செல்ல வேண்டிய நிர்பந்தம் அவருக்கு.

ஞாயிறு மாலை அவர் பிள்ளைக்கு சென்னை மேற்கு மாம்பலத்தில் பெண் பார்த்து விட்டு வர ஏற்பாடு. அவரின் மனைவியும் மகனும் ஏற்கனவே சென்னை பெரம்பூரிலுள்ள இவரின் மைத்துனர் வீட்டுக்குப்போய் இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. 

முகுந்தனுக்கு வேண்டிய துணிமணிகள், மருந்து மாத்திரைகள், முன்பதிவு செய்த ரெயில் டிக்கெட் முதலியன அனைத்தும் ஒன்று விடாமல், அவர் மனைவி ஏற்கனவே ஒரு பெட்டியில் ரெடி செய்து வைத்திருந்தாள்.

அவற்றையெல்லாம் ஒரு செக்-லிஸ்டு போட்டுவிட்டு, ஒருமுறை சரி பார்த்துவிட்டு,  ஹோட்டலிலிருந்து வரவழைத்த ஸ்பெஷல் சாப்பாட்டை ஒரு வெட்டு வெட்டிவிட்டு ஜன்னல் ஓரக் கட்டிலில் படுத்தவர், நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்கிப்போனார்.

ஜன்னல் வழியே மழைச்சாரல் பட்டு, திடீரென்று கண் விழித்த முகுந்தனுக்கு ஒரே அதிர்ச்சி. மணி 5.30 ஆகிவிட்டது. வெளியே மழை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. மேக மூட்டமாக எங்கும் ஒரே இருட்டு. மின்னலுடன் கூடிய பலத்த இடிகள் வேறு பயமுறுத்தி வருகிறது. மின்வெட்டுக்கூட ஏற்படக்கூடிய சூழ்நிலை.     

அவசர அவசரமாக பாத்ரூம் போய்விட்டு , பல் தேய்த்து முகம் கழுவி, துண்டு ஒன்றால் துடைத்துக்கொண்டு, மெயின் ஸ்விட்சை ஞாபகமாக ஆஃப் செய்துவிட்டு, வீட்டைப்பூட்டிக்கொண்டு, பூட்டை நன்கு இழுத்துப்பார்த்து விட்டு, காலில் செருப்பு, ஒரு கையில் பெட்டி, மறு கையில் குடை+டார்ச் லைட்டுடன், லிஃப்ட் வேலை செய்யாத எரிச்சலில் படியிறங்கி ரோட்டுக்கு வந்தார்.

“சரியான மழை ... இன்னும் 48 மணிநேரம் தொடருமாம்” யாரோ இருவர் குடை பிடித்த வண்ணம் பேசிச்சென்றது இவர் காதிலும் விழுந்தது.







கனத்த மழையினால் சாலை முழுவதும் சாக்கடை நீரும் கலந்து ஓடிக்கொண்டிருந்ததால் சேறும் சகதியுமாகக் காலை வைக்கவே மிகவும் அருவருப்பாக இருந்தது. 


அதிகமாக ஜனங்கள் நடமாட்டமோ, வாகங்கள் தொல்லையோ இல்லை. ஏற்கனவே ஒருமுறை இதே போன்ற நல்ல மழையில், நடுரோட்டில் குண்டும் குழியுமாகத் தேங்கியிருந்த, மழை நீருக்கு அடியில் இருந்த மாட்டுச்சாணத்தில் காலை வைத்து, அது அப்படியே இவரை வழிக்கி விட்டு, சறுக்கி விழச்செய்ததில், உடம்பெல்லாம் சேறும் சகதியுமாகி, வலது தோள்பட்டை எலும்பு நழுவி. பலநாட்கள் அவஸ்தைப்பட்ட அனுபவத்தில், தற்போது மெதுவாக ஊன்றி, அடிமேல் அடிவைத்து, வாஜ்பாய் ஸ்டைலில் நடக்கும் போது, இவர் அருகில் ஒரு ஆட்டோ வந்து நிற்க, அதில் உடனே ஏறிக்கொண்டார்.

மணி இப்போதே 6.10 ஆகிவிட்டது. பல்லாண்டுகளாக நடைபெற்று வரும் **பாலக்கரை மேம்பாலம் கட்டும் பணிகளால்**, ஊரைச்சுற்றிக்கொண்டு, திருச்சி ஜங்ஷனுக்குப்போக எப்படியும் அரை மணி நேரத்திற்கு மேல் ஆகிவிடும். அதற்குள் பல்லவன் எக்ஸ்பிரஸ் வண்டி எப்படியும் புறப்பட்டு விடக்கூடும்.   திருச்சி டவுன் ஸ்டேஷனில் இந்த வண்டி நிற்காது. மழை வேறு வலுத்துத் தொல்லை கொடுத்து வருகிறது.

ரிஸ்க் எடுக்க விரும்பாதவராய், ஆட்டோவை நேராக ஸ்ரீரங்கம் ரயில்வே ஸ்டேஷனுக்கு விடச்சொன்னார். நேரம் இருப்பதால் பதட்டம் இல்லாமல், 6.45க்குள் அங்கு போய் செளகர்யமாக வண்டியைப்பிடித்து விடலாம் என்று நல்லதொரு முடிவு எடுத்தார்.

ஆட்டோ 6.30 க்கே ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தை அடைந்து விட்டது. முகுந்தனுக்கு ஒரு பெரிய நிம்மதி. சூடான காஃபி ஒன்று வாங்கி மழைக்கு இதமாக அருந்தினார். 



6.45 ஆகியும் இன்னும் இருட்டாகவே சூரிய வெளிச்சம் வராமல் இருந்ததும் அவருக்கு ஆச்சர்யமாக இருந்தது. பலத்த மழையும் கருத்த மேகமுமே காரணம் என்று நினைத்துக்கொண்டார்.

“சென்னை செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் எத்தனை மணிக்கு வரும்? இந்த ப்ளாட்ஃபார்ம் தானே!” என அங்கிருந்த ஃபோர்டரிடம் வினவினார்.

“என்ன சாமீ! ஊருக்குப்புதுசா நீங்கள்? சென்னைப் பட்டணத்திற்குப்போக ராத்திரி பத்தரை மணிக்குத்தான் ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ் வண்டி இருக்கு. பல்லவனுக்குத்தான் போகணும் என்றால் பேசாமப்போய்ப் படுங்க. நாளைக்குக் காலையிலே 6.45 க்குத்தான் அது வரும்” என்றான்.

அழாக்குறையாக இங்கும் அங்கும் திரும்பிய அவர் கண்களில் பட்டது அந்த ரயில்வே கடிகாரம் 18.50 என்று சிவப்புக்கலர் டிஜிட்டலில் காட்டியவாறே.

ராசி பலனில் இன்று சனிக்கிழமை உங்களுக்கு வீண் அலைச்சலும், விரையமான வெட்டிச் செலவுகளும் என்று போட்டிருந்தது அவருக்கு ஞாபகத்திற்கு வந்தது. 

கொட்டும் மழையால், பகலில் வீட்டில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த அவருக்கு, சனிக்கிழமை மாலை நேரம், ஞாயிற்றுக்கிழமை அதிகாலையாகத் தோன்றியதால் வந்தக் குழப்பமே இவ்வளவுக்கும் காரணம்.   எதிலும் ஓரளவு முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது தான்.

ஞாயிறு காலை பிடிக்க வேண்டிய ரிஸர்வேஷன் செய்த வண்டிக்கு, சனிக்கிழமை மாலையே புறப்பட்டுச் சென்றால், யார் தான் என்ன செய்வது?

கொட்டும் மழையிலும், மின்னல் இடியிலும், அவ்வப்போது லேசாகத் தெரியத் தொடங்கிய நிலா இவரைப்பார்த்து கண் சிமிட்டிச் சிரிப்பது போலத் தோன்றியது.






-o-o-o-o-o-o-
முற்றும் 
-o-o-o-o-o-o-



**பாலக்கரை மேம்பாலம் கட்டும் பணிகளால்**

திருச்சி டவுனிலிருந்து திருச்சி ஜங்ஷன் வரை செல்லும் நேர் வழிப்பாதையில் போக்குவரத்து முற்றிலும் அடைக்கப்பட்டிருந்த 
ஓரிரு வருடங்களில், இந்தக்கதை எழுதப்பட்டது. 

இப்போது பாலக்கரைப் பகுதியில் அதுபோன்ற 
போக்குவரத்துத் தொந்தரவுகள் ஏதும் இல்லை.  


-oOo-




83 கருத்துகள்:

  1. கொட்டும் மழையிலும், மின்னல் இடியிலும், அவ்வப்போது லேசாகத் தெரியத் தொடங்கிய நிலா இவரைப்பார்த்து கண் சிமிட்டிச் சிரிப்பது போலத் தோன்றியது./

    இரவா பகலா -- சூரியனா சந்திரனா என்று ஊருக்குப் புதியவர்களுக்கு மட்டுமல்ல.. முன் ஜாக்கிரதை முத்தண்ணா முகுந்தன்களுக்குக் கூட
    குழப்பம் வரும் போலும்!

    பதிலளிநீக்கு
  2. ரொம்ப ரொம்ப முன் ஜாக்கிரதையாக இருந்தால் அள்வுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு கதைதான் ..

    பதிலளிநீக்கு
  3. ஆபீஸுக்குப் புறப்படும் முன் தனது அலுவலக அடையாள அட்டை, வீட்டு விலாசம், தொலைபேசி எண்களுடன் கூடிய விசிடிங் கார்டு, பஸ் சார்ஜுக்கு ................................................................/

    ஒரு சிறு விஷயமும் விட்டுவிடாமல் நுணுக்கமாக பட்டியலிட்டிருப்பது தங்களின் உன்னிப்பான கவனிக்கும் திறமைக்கு சான்று பகிர்கிறது..

    பதிலளிநீக்கு
  4. ராசி பலனில் இன்று சனிக்கிழமை உங்களுக்கு வீண் அலைச்சலும், விரையமான வெட்டிச் செலவுகளும் என்று போட்டிருந்தது அவருக்கு ஞாபகத்திற்கு வந்தது. /

    ராசி பலன் இவ்வளவு அருமையாக பலித்திருக்கிறதே !

    பதிலளிநீக்கு
  5. இப்போது பாலக்கரைப் பகுதியில் அதுபோன்ற போக்குவரத்துத் தொந்தரவுகள் ஏதும் இல்லை.


    விமோசனம் வந்துவிட்டதா.. சந்தோஷம்..

    பதிலளிநீக்கு
  6. சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த அருமையான சிறு கதைக்குப் பாராட்டுக்கள் ஐயா..

    பதிலளிநீக்கு
  7. கதையின் தலைப்பே சுவை..முன்னெச்சரிக்கை இருக்கலாம்..ஆனால் அதற்காக இப்படியா..எதற்கும் ஒரு வரைமுறை உண்டு..இப்படிதான் பல முன்னெச்சரிக்கை முகுந்தன்கள் நகைச்சுவைப் பாத்திரமாகவே வாழ்ந்து விடுகிறார்கள்..
    அவனது நிலையைப்பார்த்து நிலவே எள்ளி நகையாடியது என்று கதையை முடித்தது நன்று..
    நகைச்சுவையில் ஒரு பாடம்..அருமை..

    பதிலளிநீக்கு
  8. சில சமயம் பகலில் நன்றாகத் தூங்கிவிட்டு மாலையில் எழுந்தால் காலை போன்ற மயக்கம் வருவதுண்டு. நான் அனுபவித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. Nice story sir. This happened to me too. Sme times, I even started brushing me teeth too.

    பதிலளிநீக்கு
  10. அடடா... நன்றாக அசந்து தூங்கிவிட்டால் இப்படி காலை, மாலை குழப்பம்கூட வருமா? நல்ல கதை சார்! பிரமாதம்! உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  11. வாழ்க!மறதி முகுந்தன்!
    நகைச் சுவை! நன்று!

    புலவர் சா இராமாநுசம்!

    பதிலளிநீக்கு
  12. அண்ணே அம்புட்டயும் மறக்காம கொண்டு போறது எம்புட்டு கஷ்டம்...இது அவரின் பழக்க தோஷமே ஹிஹி!..இப்படி நெறய பேர் இருக்காங்க!

    பதிலளிநீக்கு
  13. கதையின் தலைப்பே அருமையாக இருக்கு கதை அதைவிட சுவாரஸ்யமாக இருக்கு பாஸ்

    பதிலளிநீக்கு
  14. ஹி.. ஹி...
    மறுநாள் அந்த ரயிலைப் பிடித்தாரா?

    பதிலளிநீக்கு
  15. தலைப்பை பார்க்கும்போதே நகைச்சுவைக்கதைதான்னு புரியுது. ரொம்பவே முன் ஜாக்கிரதை போல இருக்கே.

    பதிலளிநீக்கு
  16. நல்ல நகைச்சுவை...

    ரசித்துப் படித்தேன்....

    பதிலளிநீக்கு
  17. Realistic story of this 'over-munjakkiradhai muthanna! What is interesting is the detailed description of every single item that the hero assembles before going to office. We also keep such things ready, more by second nature, rather than by detailed planning. I once traveled from Delhi to Jammu in the seventies when I was with Ashok Leyland. I had asked the hotel reception to wake me up at a particular time - but they rang my room number 30 minutes later. Under great stress, I rushed to the airport at the nick of time. The crew was about to close the aircraft's doors. Being the last one to board, it was quite embarrassing for me to look at the accusing faces of other passengers!

    பதிலளிநீக்கு
  18. கொட்டும் மழையால், பகலில் வீட்டில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த அவருக்கு, சனிக்கிழமை மாலை நேரம், ஞாயிற்றுக்கிழமை அதிகாலையாகத் தோன்றியதால் வந்தக் குழப்பமே இவ்வளவுக்கும் காரணம். எதிலும் ஓரளவு முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது தான்.

    ஞாயிறு காலை பிடிக்க வேண்டிய ரிஸர்வேஷன் செய்த வண்டிக்கு, சனிக்கிழமை மாலையே புறப்பட்டுச் சென்றால், யார் தான் என்ன செய்வது?

    கொட்டும் மழையிலும், மின்னல் இடியிலும், அவ்வப்போது லேசாகத் தெரியத் தொடங்கிய நிலா இவரைப்பார்த்து கண் சிமிட்டிச் சிரிப்பது போலத் தோன்றியது.//

    நல்ல நகைச்சுவை கதை. வாய் விட்டு சிரிக்க வைக்கிறது.

    ஆனைக்கும் அடி சறுக்கும் என்பது போல் உள்ளது.
    எவ்வளவு முன்னெச்சரிக்கையாக இருந்தாலும் இந்த மாதிரி ஏற்படுவது உண்டு.

    பதிலளிநீக்கு
  19. அன்பின் வை.கோ

    நகைச்சுவைக் கதை அருமை. ஆனால் இதுமாதிரி குணமுடையவர்கள் இன்றும் இருக்கிறார்கள். காலை மாலை மயக்கம் - சில தினங்களில் எனக்கும் ஒரிரு முறை வந்ததுண்டு. ஆனால் 5 / 10 நிமிடங்களில் நிலை மாறிடும். முன் சாக்கிரதை என்னும் செய்தியில் - அலுவலகம் செல்லும் முன் சரி பார்க்க வேண்டிய லிஸ்ட் மனதிலேயே உண்டு. 10 பொருட்கள் - வீட்டின் இரண்டாவது சாவி - கைக்குட்டை பணம் பேனா, கடிகாரம், மோதிரம், செயின், அலைபேசி, மூக்குக் கண்ணாடி, டைரி ஆக 10 - இத்தனையும் இருக்கிறாதா என வீட்டை விட்டு வெளியேறும் முன்னர் சரி பார்த்துக் கொள்வேன்.

    கதை இரசித்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  20. //எதையாவது மறந்து விட்டு விடுவோமோ என்று முன்னெச்சரிக்கையாகவே இருப்பார்.//

    // 'முன்னெச்சரிக்கை முத்தண்ணா' போல//

    பதிலளிநீக்கு
  21. //ஜிப்பு முதல் கணுக்கால் வரை, டாராகக் கிழிந்து (தையல் பிரிந்து) தொடை தெரிய பயணித்ததில் (தொடை நடுங்கி) மனிதன் கூசிக்குறுகிப் போய் விட்டார். //
    கஷ்ட காலம்..

    பதிலளிநீக்கு
  22. //பல் தேய்த்து முகம் கழுவி, //

    அப்போதே நினைத்தேன் எங்கோ இடிக்கிறதே என்று..

    பதிலளிநீக்கு
  23. //6.45 ஆகியும் இன்னும் இருட்டாகவே சூரிய வெளிச்சம் வராமல் இருந்ததும் அவருக்கு ஆச்சர்யமாக இருந்தது. பலத்த மழையும் கருத்த மேகமுமே காரணம் என்று நினைத்துக்கொண்டார்.//

    கதை வெளிச்சத்திற்கு வந்து விட்டது.

    பதிலளிநீக்கு
  24. //ஞாயிறு காலை பிடிக்க வேண்டிய ரிஸர்வேஷன் செய்த வண்டிக்கு, சனிக்கிழமை மாலையே புறப்பட்டுச் சென்றால், யார் தான் என்ன செய்வது?//

    நல்ல நகைச்சுவை சிறுகதை... வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  25. இப்படிப்பட்ட முன்னெச்சரிக்கை ஆசாமிகளை நிறைய பார்த்திருக்கின்றேன்... இரண்டு நாள் கழித்து செல்ல வேண்டிய ரயில் பயணத்திற்கு முன்பதிவு விண்ணப்ப படிவத்தில் மறதியாக ஒரு நாள் முந்திய தேதி இட்டு சீட்டு வாங்கி சம்பந்தப்பட்ட அந்த இரண்டாவது நாளில் மிகுந்த ஜபர்தஸ்துடன் ரயில் நிலையம் சென்று அசடு வழிந்த கதையும் நடந்ததுண்டு.

    அடுத்த கதையை எதிர் பார்க்கின்றோம்..

    பதிலளிநீக்கு
  26. யூகிக்கவே முடியவில்லை. கடைசி வரை. அது தான் கதையின் ப்ளஸ் பாய்ண்ட். ஓவர் முன் ஜாக்ரதையாக இருப்பவர், என்னடா, அலாரம் வைக்காமல் எப்படி தூங்கலாம் என்று நான் வேறு மனதில் திட்டி விட்டேன் :))

    //அடிமேல் அடிவைத்து, வாஜ்பாய் ஸ்டைலில் நடக்கும் போது, //

    :))

    ஒரு மனுஷன் எவ்வளவு விஷயம் நினைவில் கொள்ளணும் என்று படிக்கும் போதே டென்ஷன் ஆகிவிடும் பலருக்கு :))

    இது போல் நிறைய பேர் உண்டு. என் நெருருருருங்ங்ங்கிய உறவினர் ஒருவர் உட்பட :D :)))))

    பதிலளிநீக்கு
  27. கதை நல்ல சுவையாக இருந்தது. உங்களுக்குத் தெரியுமா, ஒரு விமானத்தை ஸ்டார்ட் செய்யுமுன் அதன் பைலட் முதல் அதன் இயக்கத்துக்கு செர்டிஃபிகேட் தரும் பலரும் இந்த மாதிரி ஒரு பெரிய செக் லிஸ்ட் வைத்து சரிபார்ப்பார்கள். அதில் இருப்பவை அநேகமாக அவர்கள் நினைவில் இருக்கக் கூடியதே. இருந்தாலும் மறக்காமல் இருக்கவும் தவறு நேராமல் இருக்கவும் இப்படி ஒரு கவுண்ட் டௌன் மாதிரி சோதிப்பார்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  28. ஐயா,

    நகைச்சுவையுடன் முகுந்தன் நகர்ந்த விதம் அருமை!

    பதிலளிநீக்கு
  29. ஆனைக்கும் அடி சறுக்கும் என்பதுபோல் முகுந்தன் எவ்வளவுதான் முன்னெச்சரிக்கையாய் இருந்தாலும் இப்படி ஒரு இடரைச் சந்திக்க நேர்ந்துவிட்டதே. கதை மிகவும் அருமை. பாராட்டுகள் வை.கோ சார்.

    பதிலளிநீக்கு
  30. அவர் ஆபீஸ் செல்லும் முன் சரிபார்த்துக் கொள்ளும்
    சாமான் லிஸ்ட் பார்த்து முதலில் ஆச்சரியம் வந்தது
    திரும்பவும் படித்துப் பார்த்தேன்
    கூடுதல் குறைச்சல் இல்லை
    சரியாகத்தான் எழுதி இருக்குறீர்கள்
    அந்த வேஷ்டி துண்டு தவிர
    முன்னெச்சரிக்கை முகுந்தன்
    எனக்கெல்லாம் ஒரு எச்சரிக்கை
    எனெனில் நானும் இதில் பாதி
    மனம் கவர்ந்த பதிவு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  31. நகைச்சுவை மிளிரும் சிறந்ததொரு கதை! சிலர் இப்படித்தான் அதிக பட்ச முன்னெச்செரிக்கைகளால் நிம்மதி இழப்பதும் உண்டு!

    பதிலளிநீக்கு
  32. சிறந்த நகைசுவை உணவுள்ள பைப்பு பாராட்டுகள் தொடர்ந்து மகிழ்விக்க வருக

    பதிலளிநீக்கு
  33. இந்தப் பதிவுக்கு அன்புடன் வருகை புரிந்து, நகைச்சுவையுடன் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து பரிமாறி சிறப்பித்து தந்துள்ள

    திருமதி *இராஜராஜேஸ்வரி* அவர்கள்
    திரு.மதுமதி அவர்கள்
    திரு.Palaniaappan Kandasamy அவர்கள்
    திரு.அமரபாரதி அவர்கள்
    திரு.கணேஷ் அவர்கள்
    புலவர் திரு. சா.இராமாநுசம் அவர்கள்
    திரு.விக்கியுலகம் அவர்கள்
    திரு.K.s.s.Rajh அவர்கள்
    திரு.NIZAMUDEEN அவர்கள்
    திருமதி LAKSMI அவர்கள்
    திரு.வெங்கட் நாகராஜ் அவர்கள்
    திரு.D.Chandraouli அவர்கள்
    திருமதி கோமதி அரசு அவர்கள்
    திரு. சீனா ஐயா அவர்கள்
    Advocate திரு.*P.R.Jayarajan* அவர்கள்
    திருமதி ஷக்திப்ரபா அவர்கள்
    திரு.GMB Sir அவர்கள்
    திரு.S. தனசேகரன் அவர்கள்
    திரு.E.S. சேஷாத்ரி அவர்கள்
    திருமதி கீதா அவர்கள்
    திரு.ரமணி அவர்கள்
    திருமதி மனோ சுவாமிநாதன் அவர்கள்
    +
    திருமதி மாலதி அவர்கள்

    ஆகிய அனைத்து நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    அன்புடன் vgk



    *
    நன்றி,நன்றி,நன்றி,நன்றி,நன்றி,நன்றி
    *
    _________________________________

    என் அடுத்த பதிவான

    “காவேரிக்கரை இருக்கு ....
    கரைமேலே ___ இருக்கு”

    நாளை 29/12/2011 வியாழன் காலை வெளியிடப்படும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தொடர்ந்து வருகை தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    உங்கள் vgk

    பதிலளிநீக்கு
  34. //பல் குத்தும் குச்சிகள், காது குடையும் பஞ்சுக்குச்சிகள், கைக்கடிகாரம், பேனா, ஆபீஸ் ஃபைல்கள், செல்போன், சார்ஜர், ஆபீஸ் டிராயர் சாவி, குடை, பஸ்ஸில் படித்துக்கொண்டே போக ஏதாவது வார இதழ்கள், செய்தித்தாள்..//

    .. என்று படித்துக் கொண்டே வருகையில், பேண்ட், பெல்ட், பனியன், ஜட்டி, ஷர்ட்.. என்று வந்த பொழுது 'குபுக்'கென்று வந்த சிரிப்பை அடக்கவே முடியவில்லை.
    அந்த ரிசர்வ் கேஷ் சமாச்சாரத்தை தனியாக பேண்ட்டின் பெல்ட் அணியும் இடத்தில் இருக்கும் பாக்கெட்டில் பதுக்கி வைத்துக் கொள்ளும் பழக்கம் எனக்கும் உண்டு. பிக்பாக்கெட்டில் பறி கொடுக்காமல் இருக்கத்தான்.
    அந்த வேஷ்டி-துண்டுக்கான காரணம் சொன்னதும் போகிற போக்கில் (படித்துக் கொண்டு போகிற போக்கில் தான்) இன்னொரு புன்முறுவலை வரவழைத்தது.

    ஐம்பது வயதுக்கு மேலானாலே இப்படித்தான். முன்னெச்சரிக்கையாக அவர் எடுத்துக் கொள்ளும் பல ஐட்டங்கள் தேவையானது தான்.

    வங்கி, ரயில் ரிசர்வேஷன்-- இந்த மாதிரி இடங்களில் கூட "பேனா இருக்கா, சார்?" என்று கேட்கும் பிரகிருதிகளைப் பார்த்திருப்பீர்கள்.
    அந்த மாதிரியான ஒரு அலட்சியத்துடன் பிறரை எதிர்பார்க்கும் நபர்கள்,இந்த மாதிரியான முகுந்தன்களிடமிருந்து பாடம் பெற வேண்டும்.

    நகைச்சுவை என்று சொல்லாத போதே, உங்கள் எழுத்தில் நகைச்சுவை தெறிக்கும். இப்போதோ 'நகைச்சுவை கதை' என்று நீங்களே சொல்லி விட்ட பொழுது, கேட்க வேண்டுமா, ஹஹ்ஹாஹ்களுக்கு?.

    வாழ்த்துக்கள், கோபு சார்!

    பதிலளிநீக்கு
  35. மாதேவி said...
    //நல்ல நகைச்சுவை.// மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  36. அட கஷ்ட காலமே!இதுக்குதான் ஒவர் முன்னெச்சரிக்கையா இருக்கக் கூடாது.

    சார் அவர் எடுத்து வைக்கும் லிஸ்ட்டில் போன்& சார்ஜர்லாம் இருக்கே அப்பவே செல்பேசிலாம் வந்துட்டா!அல்லது அந்த பாலத்தின் கதை செல்பேசிகள் வந்தபின்பா?

    பதிலளிநீக்கு
  37. ஜீவி said...
    //பல் குத்தும் குச்சிகள், காது குடையும் பஞ்சுக்குச்சிகள், கைக்கடிகாரம், பேனா, ஆபீஸ் ஃபைல்கள், செல்போன், சார்ஜர், ஆபீஸ் டிராயர் சாவி, குடை, பஸ்ஸில் படித்துக்கொண்டே போக ஏதாவது வார இதழ்கள், செய்தித்தாள்..//
    ****
    .. என்று படித்துக் கொண்டே வருகையில், பேண்ட், பெல்ட், பனியன், ஜட்டி, ஷர்ட்.. என்று வந்த பொழுது 'குபுக்'கென்று வந்த சிரிப்பை அடக்கவே முடியவில்லை.****

    ஐயா, தங்களின் இன்றைய மேலான வருகையும், மனம் திறந்து மனம் மகிழ்ந்து கொடுத்துள்ள, நீண்ட பின்னூட்டமும், என் எழுத்துக்களின் வெற்றிக்கு, நான் செய்த மிகப்பெரிய பாக்யமாகக் கருதுகிறேன்.

    /‘குபுக்’ என்ற சிரிப்பை அடக்கவே முடியவில்லை/

    அது தானே சார், என் இந்தக்கதையின் எதிர்பார்ப்பும்! ;))))

    ஒருசில குறிப்பிட்ட நகைச்சுவைக்காட்சிகளைப் பார்த்தாலோ, படித்தாலோ நானும் இது போல வாய்விட்டு பலமாகச் சிரித்து விடுவதுண்டு.

    இந்த நகைச்சுவை உணர்வு என்பது உண்மையிலேயே கடவுள், மனிதனுக்கு மட்டுமே கொடுத்துள்ள ஒரு வரம் என்றே சொல்ல வேண்டும்.
    மனிதனால் மட்டும் தானே சிந்திக்கவும், சிரிக்கவும் முடியும்!

    ****அந்த ரிசர்வ் கேஷ் சமாச்சாரத்தை தனியாக பேண்ட்டின் பெல்ட் அணியும் இடத்தில் இருக்கும் பாக்கெட்டில் பதுக்கி வைத்துக் கொள்ளும் பழக்கம் எனக்கும் உண்டு. பிக்பாக்கெட்டில் பறி கொடுக்காமல் இருக்கத்தான்.****

    ஆம், ஐயா. நம்மைப்போன்ற பலருக்கும் உண்டு தான்.

    ****அந்த வேஷ்டி-துண்டுக்கான காரணம் சொன்னதும் போகிற போக்கில் (படித்துக் கொண்டு போகிற போக்கில் தான்) இன்னொரு புன்முறுவலை வரவழைத்தது.****

    மிகவும் சந்தோஷம், ஐயா.

    ****ஐம்பது வயதுக்கு மேலானாலே இப்படித்தான். முன்னெச்சரிக்கையாக அவர் எடுத்துக் கொள்ளும் பல ஐட்டங்கள் தேவையானது தான்.****

    ஆமாம், ஐயா! பொறுப்பானவர்களும், அனுபவஸ்தர்களும் இவ்வாறு தான் ஒரு முன்னெச்சரிக்கையாகத் தான் இருப்பார்கள். அது மிகவும் வரவேற்கத் தக்க நல்ல பழக்கம் தான், ஐயா.

    ****வங்கி, ரயில் ரிசர்வேஷன்-- இந்த மாதிரி இடங்களில் கூட "பேனா இருக்கா, சார்?" என்று கேட்கும் பிரகிருதிகளைப் பார்த்திருப்பீர்கள்.****

    நிறைய பார்த்திருக்கிறோம். பணப்பட்டுவாடா செய்யும் இடத்தில் பல்லாண்டுகள் பணி புரிந்துள்ளேன்.
    பணம் வாங்குபவர் கையொப்பமிட வேண்டிய இடத்தையும் சுட்டிக்காட்டி பேனாவும் நான் தான் பெரும்பாலும் தரவேண்டியிருக்கும். நிறைய இதில் எனக்கு அனுபவம் உண்டு, ஐயா.

    ****அந்த மாதிரியான ஒரு அலட்சியத்துடன் பிறரை எதிர்பார்க்கும் நபர்கள்,இந்த மாதிரியான முகுந்தன்களிடமிருந்து பாடம் பெற வேண்டும்.****

    மிகச்சரியாகவே சொல்லியுள்ளீர்கள்.

    ****நகைச்சுவை என்று சொல்லாத போதே, உங்கள் எழுத்தில் நகைச்சுவை தெறிக்கும். இப்போதோ 'நகைச்சுவை கதை' என்று நீங்களே சொல்லி விட்ட பொழுது, கேட்க வேண்டுமா, ஹஹ்ஹாஹ்களுக்கு?.****

    ஐயா இதை உங்கள் வாயால் கேட்க நான் என்ன தவம் செய்தேனோ?

    நீங்கள் என்ன சாதாரண மனிதரா?
    எவ்வளவு மிகப்பிரபல எழுத்தாளர்களின் எழுத்துக்களை வாசித்து, சுவாசித்து மகிழ்ந்து எவ்வளவு கட்டுரைகள் எழுதியிருக்கிறீர்கள். ;)))))))))))

    அப்படிப்பட்ட உங்கள் வாயால் இது போல் சொல்வது எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமாக உள்ளது, ஐயா.

    உண்மையிலேயே இது எனக்குக் கிடைத்த உற்சாக டானிக் தான், ஐயா!

    அநேக கோடி சாஷ்டாங்க நமஸ்காரங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ஆசீர்வாதம் செய்யுங்கள்.


    //வாழ்த்துக்கள், கோபு சார்!//

    மனமார்ந்த நன்றிகள், ஐயா!
    பிரியமுள்ள vgk

    பதிலளிநீக்கு
  38. கதை வெளியிட்ட அன்றே படித்து விட்டேன் .பின்னூட்டமிட தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும் .
    உங்க கதா பாத்திரங்கள் அன்றாடம் நாம் சந்திப்பவர்கள்
    நான் சந்தித்த ஒரு முன்னெச்சரிக்கை முகுந்தி நினைவுக்கு வந்தார் .
    பேங்க் எக்சாமுக்கு ஹால் டிக்கட்டை மறக்ககூடதுன்னு பத்திரமா எடுத்து வச்சிருக்கார் /எக்ஸாம் ஹாலில் சென்று பார்த்தா அது பஸ் டிக்கட் .நானும் அதே ஹாலில் எக்ஸாம் எழுத போயிருந்தேன் . பாவமாதான் இருக்குஇப்படிப்பட்ட மனிதர்களை நினைச்சா .

    பதிலளிநீக்கு
  39. thirumathi bs sridhar said...
    //அட கஷ்ட காலமே!இதுக்குதான் ஒவர் முன்னெச்சரிக்கையா இருக்கக் கூடாது.//

    வாங்கம்மா, வாங்க. எல்லாம் நலம் தானே? எப்படி இருக்கிறீர்கள்?

    உங்களைக்காணுமே என்று தோன்றும்.

    இருந்தாலும், பாவம் என்ன செய்கிறார்களோ! என்னமோ! என்ற பாசமே கண்முன் வந்து நிற்கும்.

    பக்கத்து ஊரா என்ன, உடனே வந்து பார்க்க என்று நானும் அவங்களும் பேசிக்கொண்டோம்.

    //சார் அவர் எடுத்து வைக்கும் லிஸ்ட்டில் போன்& சார்ஜர்லாம் இருக்கே அப்பவே செல்பேசிலாம் வந்துட்டா!அல்லது அந்த பாலத்தின் கதை செல்பேசிகள் வந்தபின்பா?//

    இப்போ ஒரு 2 அல்லது 3 வருஷங்கள் முன்பு தான் பாலம் சம்பந்தமான வேலைகள் நிறைவு பெற்றன.

    அதற்கு முன்பு ஒரு 2 வருஷம் முழுவதும் வேலை நடந்து வந்தது.

    ஆக மொத்தம் ஒரு 5 வருஷங்கள் தான் இருக்கும்.

    நான் கதைகள் எழுத ஆரம்பித்ததே 2005 இல் தானே. அதற்கு முன்பே செல்போன்கள் வந்து விட்டதே.

    வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, மேடம். Please Take Care of You, Kuttippayal & our Amrutakutti.

    அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  40. சார்:
    என் கேள்விக்கு பதில் தெரிவித்தமைக்கு நன்றி.
    என் மீதான தங்களின் அக்கறையில் நெகிழ்ந்துபோனேன்.நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  41. angelin said...
    //கதை வெளியிட்ட அன்றே படித்து விட்டேன் .பின்னூட்டமிட தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும்//

    அதனால் பரவாயில்லை, மேடம்.

    //உங்க கதா பாத்திரங்கள் அன்றாடம் நாம் சந்திப்பவர்கள்
    நான் சந்தித்த ஒரு முன்னெச்சரிக்கை முகுந்தி நினைவுக்கு வந்தார் .
    பேங்க் எக்சாமுக்கு ஹால் டிக்கட்டை மறக்ககூடதுன்னு பத்திரமா எடுத்து வச்சிருக்கார் /எக்ஸாம் ஹாலில் சென்று பார்த்தா அது பஸ் டிக்கட் .நானும் அதே ஹாலில் எக்ஸாம் எழுத போயிருந்தேன் . பாவமாதான் இருக்குஇப்படிப்பட்ட மனிதர்களை நினைச்சா .//

    ஆமாம், மேடம். எல்லாவற்றிலும் மிகுந்த கவனத்துடனும் முன்னெச்சரிக்கையுடனும் தான் இருக்க வேண்டியுள்ளது.

    இல்லாது போனால் நமக்குத்தான் கஷ்டம்.

    அன்பான வருகைக்கும், அருமையான கருத்துக்களுக்கும், மிக்க நன்றி, மேடம்.

    அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  42. இடுப்பிலிருந்து அடிக்கடி நழுவிப்போகும் அரணாக்கயிறு//

    :-)

    பேண்ட், ஷர்ட், பனியன், ஜட்டி அணிந்து கொண்டுள்ளோமா, என்பது உள்பட//
    :-)

    பதிலளிநீக்கு
  43. 'எழுத்தும் தெய்வம்; இந்த எழுதுகோலும் தெய்வம்' என்று சொன்னார் மஹாகவி.

    அவளின் பரிபூர்ண ஆசிக்கு ஏங்கி, அந்த தெய்வத்தை நாமிருவரும் சேர்ந்து வணங்குவோம்.

    அன்பையும் பிரியத்தையும் மனிதர்களுக்குள் பரிமாறிக் கொள்ளலாம். ஆனால் ஆசி நல்கி கைப்பிடித்து எழுத வைக்க அன்னையின் அருளே அவசியம்.
    அதை வேண்டி கலைமகள் தாயின் பாதார விந்தங்களே சரணம் என்று அடிபணிவோம்.

    அன்புடன்,
    ஜீவி

    பதிலளிநீக்கு
  44. நிலாமகள் said...
    இடுப்பிலிருந்து அடிக்கடி நழுவிப்போகும் அரணாக்கயிறு//

    :-)

    பேண்ட், ஷர்ட், பனியன், ஜட்டி அணிந்து கொண்டுள்ளோமா, என்பது உள்பட//
    :-)

    தங்களின் அன்பான அபூர்வ வருகைக்கும், தங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தியதாகச் சுட்டிக்காட்டியுள்ள இடங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.
    அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  45. thirumathi bs sridhar said...
    //சார்:
    என் கேள்விக்கு பதில் தெரிவித்தமைக்கு நன்றி.//

    OK OK

    என் மீதான தங்களின் அக்கறையில் நெகிழ்ந்துபோனேன்.நன்றி சார்.//

    உங்களைப்போன்ற தங்கமான குணம் கொண்டவர்கள் மீது எப்படி எனக்கு அக்கறை இல்லாமல் இருக்க முடியும்?

    தாங்கள் நெகிழ்ந்து போனதில் நானும் நெகிழ்ந்து போயுள்ளேன்.

    எண்ணங்களின் மகிழ்ச்சிப்பகிர்வுக்கு மிக்க நன்றி, மேடம்.

    அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  46. ஜீவி said...
    //'எழுத்தும் தெய்வம்; இந்த எழுதுகோலும் தெய்வம்' என்று சொன்னார் மஹாகவி.//

    ஆஹா, அருமையாகத்தான் சொல்லியுள்ளார். நினைவூட்டிக் குறிப்பிட்டதற்கு, நன்றிகள் ஐயா.

    //அவளின் பரிபூர்ண ஆசிக்கு ஏங்கி, அந்த தெய்வத்தை நாமிருவரும் சேர்ந்து வணங்குவோம்.//

    நிச்சயமாகச் செய்வோம், ஐயா.

    //அன்பையும் பிரியத்தையும் மனிதர்களுக்குள் பரிமாறிக் கொள்ளலாம்.//

    ஆமாம். புரிகிறது. அது மட்டும் தான் நம்மால் முடிந்தது, ஐயா.

    //ஆனால் ஆசி நல்கி கைப்பிடித்து எழுத வைக்க அன்னையின் அருளே அவசியம்.

    அதை வேண்டி கலைமகள் தாயின் பாதார விந்தங்களே சரணம் என்று அடிபணிவோம்.

    அன்புடன்,
    ஜீவி//

    கலைமகளாகிய கடவுளைக் காட்டிடும் குருவாகத் தங்களை நினைத்து ஏற்றுக்கொள்கிறேன். மிக்க நன்றி, ஐயா.

    பதிலளிநீக்கு
  47. நல்ல கதை. முன்னெச்சரிக்கை அவசியமானது தான். பாவமாயிருந்தது முகுந்தன் நிலைமை. பதட்டம் பல நேரங்களில் சரியான திட்டமிடல்களையும் பாழாக்கிவிட்டு விடும் என்பதற்கு இந்தக் கதை நல்ல உதாரணம். வாழ்த்துக்கள்.


    தீபிகா.

    பதிலளிநீக்கு
  48. தீபிகா(Theepika) said...
    //நல்ல கதை. முன்னெச்சரிக்கை அவசியமானது தான். பாவமாயிருந்தது முகுந்தன் நிலைமை. பதட்டம் பல நேரங்களில் சரியான திட்டமிடல்களையும் பாழாக்கிவிட்டு விடும் என்பதற்கு இந்தக் கதை நல்ல உதாரணம். வாழ்த்துக்கள்.
    -தீபிகா.//

    தங்களின் (முதல்?) வருகைக்கும், கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் நன்றிகள். vgk

    பதிலளிநீக்கு
  49. இமா said...
    //பாவம் முகுந்தன். ;))))//

    முகுந்தன் மேல் மிகவும் இரக்கப்படுவது போல எழுதிவிட்டு ;))))

    சிரிக்கும் இமாவுக்கு
    ஜே ஜே ஜே

    பதிலளிநீக்கு
  50. வை.கோபாலகிருஷ்ணன் said...
    ஜீவி said...
    //'எழுத்தும் தெய்வம்; இந்த எழுதுகோலும் தெய்வம்' என்று சொன்னார் மஹாகவி.//

    ஆஹா, அருமையாகத்தான் சொல்லியுள்ளார். நினைவூட்டிக் குறிப்பிட்டதற்கு, நன்றிகள் ஐயா.

    பதிலளிநீக்கு
  51. பல்லவனில் வரும் கும்பலில் முக்கால் வாசி பேர் ஸ்ரீரங்கத்தில் தானே ஏறுவார்கள்....

    முன்னெச்சரிக்கை முகுந்தன் கடைசியில் ஸ்டேஷனிலேயே இரவு தங்கி பல்லவனை பிடித்தாரா..அல்லது வீட்டுக்கு சென்று காலை வந்தாரா....பாவம்.

    பதிலளிநீக்கு
  52. \\பேண்ட், ஷர்ட், பனியன், ஜட்டி அணிந்து கொண்டுள்ளோமா, என்பது உள்பட//

    இதைப் பார்த்ததும் ரஜினி சார் ஒரு படத்துல வேஷ்டியை மறந்துட்டு போவாரே அந்த ஞாபகம் வந்துடுச்சு சார். சிரிப்பை அடக்க ரொம்ப நேரமாச்சு.

    \\வாஜ்பாய் ஸ்டைலில் \\
    வாஜ்பாய் கண்முன் நடப்பதாக நினைத்துக் கொண்டே படித்ததில் சிரித்துவிட்டேன். :-D

    \\சனிக்கிழமை மாலை நேரம், ஞாயிற்றுக்கிழமை அதிகாலையாகத் தோன்றியதால்\\
    நான் கூட சிறு பிள்ளையாக இருக்கும்போது இந்த மாதிரியான அனுபவம் உண்டு சார். என்ன செய்வது வயதாகும் போது, பெரியவர்களும் குழந்தையாகி விடுகிறார்கள்.

    \\கொட்டும் மழையிலும், மின்னல் இடியிலும், அவ்வப்போது லேசாகத் தெரியத் தொடங்கிய நிலா\\

    மழைக் கால நிலாவை கண்முன் காட்டிய வரிகள்.

    இந்தக் கதையையும் வெகுவாக ரசித்துப் படித்தேன் சார்.

    - நுண்மதி

    பதிலளிநீக்கு
  53. இராஜராஜேஸ்வரி said...
    வை.கோபாலகிருஷ்ணன் said...
    ஜீவி said...
    //'எழுத்தும் தெய்வம்; இந்த எழுதுகோலும் தெய்வம்' என்று சொன்னார் மஹாகவி.//

    /ஆஹா, அருமையாகத்தான் சொல்லியுள்ளார். நினைவூட்டிக் குறிப்பிட்டதற்கு, நன்றிகள் ஐயா./

    மீண்டும் வருகை தந்து திரு. ஜீவி அவர்களின் கருத்துக்களுக்கு நன்றி கூறி சிறப்பித்தற்கு மிக்க நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
  54. கோவை2தில்லி said...
    //பல்லவனில் வரும் கும்பலில் முக்கால் வாசி பேர் ஸ்ரீரங்கத்தில் தானே ஏறுவார்கள்....

    முன்னெச்சரிக்கை முகுந்தன் கடைசியில் ஸ்டேஷனிலேயே இரவு தங்கி பல்லவனை பிடித்தாரா..அல்லது வீட்டுக்கு சென்று காலை வந்தாரா....பாவம்.//

    ஆமாம் மேடம், பல்லவனைப்பிடிக்க பலரும் ஸ்ரீரங்கத்தில் தான் ஏறுவார்கள்.

    அவர் ஸ்டேஷனிலேயே தங்கினாரா, வீட்டுக்குப்போனாரா, என்ன செய்தாரோ, தெரியவில்லை மேடம்.

    மிகவும் முன்னெச்சரிக்கையாகத் தான் ஏதாவது செய்திருப்பார்.

    பதிலளிநீக்கு
  55. nunmadhi said...
    \\பேண்ட், ஷர்ட், பனியன், ஜட்டி அணிந்து கொண்டுள்ளோமா, என்பது உள்பட//

    இதைப் பார்த்ததும் ரஜினி சார் ஒரு படத்துல வேஷ்டியை மறந்துட்டு போவாரே அந்த ஞாபகம் வந்துடுச்சு சார். சிரிப்பை அடக்க ரொம்ப நேரமாச்சு.

    \\வாஜ்பாய் ஸ்டைலில் \\
    வாஜ்பாய் கண்முன் நடப்பதாக நினைத்துக் கொண்டே படித்ததில் சிரித்துவிட்டேன். :-D

    \\சனிக்கிழமை மாலை நேரம், ஞாயிற்றுக்கிழமை அதிகாலையாகத் தோன்றியதால்\\
    நான் கூட சிறு பிள்ளையாக இருக்கும்போது இந்த மாதிரியான அனுபவம் உண்டு சார். என்ன செய்வது வயதாகும் போது, பெரியவர்களும் குழந்தையாகி விடுகிறார்கள்.

    \\கொட்டும் மழையிலும், மின்னல் இடியிலும், அவ்வப்போது லேசாகத் தெரியத் தொடங்கிய நிலா\\

    மழைக் கால நிலாவை கண்முன் காட்டிய வரிகள்.

    இந்தக் கதையையும் வெகுவாக ரசித்துப் படித்தேன் சார்.

    - நுண்மதி
    -------------------------

    தங்கள் வருகைக்கும், அழகாக சிரித்து மகிழ்ந்ததாக பல இடங்களைச் சுட்டிக் காட்டியுள்ளதற்கும், மிக்க நன்றி நுண்மதி. அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  56. முன்னெச்சரிச்சை முகுந்தன் கதையை மிகவும் ரசித்தேன்,இங்கு நானும் சில முன் ஜாக்கிரதை முத்தண்ணாக்களை பார்த்திருக்கிறேன்.ஆனால் உங்கள் முகுந்தன் எல்லோரையும் பீட் செய்து விட்டார்.
    கதை மிகவும் அருமை.சார் நானும் திருச்சியில் பல வருடங்கள் இருந்திருக்கிறேன். பாலக்கரை ஏரியா தெரியும்.

    பதிலளிநீக்கு
  57. Asiya Omar said...
    //முன்னெச்சரிச்சை முகுந்தன் கதையை மிகவும் ரசித்தேன்,இங்கு நானும் சில முன் ஜாக்கிரதை முத்தண்ணாக்களை பார்த்திருக்கிறேன்.ஆனால் உங்கள் முகுந்தன் எல்லோரையும் பீட் செய்து விட்டார்.

    கதை மிகவும் அருமை.சார் நானும் திருச்சியில் பல வருடங்கள் இருந்திருக்கிறேன். பாலக்கரை ஏரியா தெரியும்.//

    அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, மேடம்.

    நான் திருச்சியில் இருந்திருக்கிறேன், பாலக்கரை நன்கு தெரியும் என்று நீங்கள் சொல்வதால், எனக்கு

    “இன்பத்தேன் வந்து
    பாயுது காதினிலே” ! ;)))))

    மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  58. எதுவும் அளவுக்கு மீறி போனா கஷ்டம்தானே அண்ணா .ட்ரெயின்ன மிஸ் பண்ணாம நேரத்தோட ஜங்க்சனுக்கு போகணும்,லக்கேஜ் எதுவும் விட்டுபோகாம எடுத்து வச்சாச்சு..இதே நினைப்பில ஹோட்டல் சாப்பாட்டை வெட்டிட்டு படுக்க போயிட்டார்...பாவம் மனுசருக்கு தூக்கத்தில இருந்து முழிச்ச உடனே பொழுது நல்லாவே விடிஞ்சு போச்சு ..

    பதிலளிநீக்கு
  59. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான விரிவான கருத்துக்களுக்கும் நன்றி சகோதரி, அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  60. // கொட்டும் மழையிலும், மின்னல் இடியிலும், அவ்வப்போது லேசாகத் தெரியத் தொடங்கிய நிலா இவரைப்பார்த்து கண் சிமிட்டிச் சிரிப்பது போலத் தோன்றியது.//

    ஹா ஹா முழுக்க முள்ளுக்க சிரிக்க வைத்துக் கொண்டே சொல்லும் அற்புதமான நகைசுவைக் கதை. காலம் கடந்து அறிந்து கொண்டாலும் படித்த திருப்தி சுகமாய் இருக்கிறது

    பதிலளிநீக்கு
  61. WELCOME Mr. SEENU Sir,

    தங்கள் அன்பான வருகைக்கும், அழகாகப் படித்து ரசித்து எழுதியுள்ள சுகமான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.

    அன்புடன்
    vgk

    பதிலளிநீக்கு
  62. முன்னெச்சரிக்கை முகுந்தன் அருமையான நகைசுவை கதை...... இக்கதை ராணி வார இதழில் வந்துள்ளது மிகவும் பெருமைப்பட வேண்டிய ஒன்று ஐயா ... வாழ்த்துக்கள்.... மிக்க மகிழ்ச்சி ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள VijiParthiban Madam,

      வாங்க, வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள். எனக்கும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி தான்....

      அன்புடன்
      vgk

      நீக்கு
  63. சரியான முன் ஜாக்கிரதை முத்தண்ணாவா இருக்காரே முகுந்தன்!

    ரசித்தேன். இந்த மாலை மயக்கம் அனுபவம் எனக்கும் இருக்கு. சின்ன வயசில் செம அடி வாங்கி அழுது கொண்டே தூங்கிப்போய் விளக்கு வைக்கும் நேரத்தில் விழித்து அதிகாலை என்று நினைத்துப் பள்ளிக்கூடம் போக தயாரானேன்:-)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள திருமதி துளசி கோபால் மேடம்,

      வாங்க. வணக்கம்.

      தங்களின் அனுபவம் எனக்கும் உண்டு. பலருக்குமே உண்டு.
      சிலர் தங்கள் பின்னூட்டங்களில் கூட தெரிவித்துள்ளார்கள்.

      தங்களின் அன்பான வருகையும், அழகான கருத்துக்களும் என்னை மிகவும் உற்சாகப்படுத்துகிறது.

      என் மனமார்ந்த நன்றிகள்.

      அன்புடன்
      vgk

      நீக்கு
  64. முன்னெச்செரிக்கை முத்தண்ணா சாரி சாரி முன்னெச்செரிக்கை முகுந்தன் பண்ற அட்டகாசங்கள் எல்லாமே ரசித்து வாசித்தேன் அண்ணா...

    அதெப்படி செக் லிஸ்ட் வெச்சிருக்கார்.... அதுவும் அவசியமான.... வேஷ்டி துண்டுக்கான காரணம் நல்லவேளை சொல்லிட்டீங்க.. யோசிச்சு வாசகர்கள் தலைப்பிச்சுக்க வெச்சுக்காம....

    இந்த கதை படிச்சதும் எனக்கு இபான் ஆங்கிலப்புத்தகத்தில் சொல்லிக்கொடுத்த லெசன் நினைவுக்கு வந்தது... நாளை எக்சாம்...

    என்ன ஆனாலும் வர்ணனை அசத்தல் அண்ணா....

    முகுந்தனின் அத்தனை காரியங்களும் படிக்கும்போது ரசித்து சிரிக்கவைத்தன...

    என்னமா எழுதுறீங்க அண்ணா நீங்க...

    மழை என்று சாதாரணமா சொல்லாம அதனால் ஏற்படும் அவஸ்தைகள் குண்டு குழி... அதில் வழுக்கி விழுந்து தோள்பட்டை எலும்பு விலகி இப்ப வாஜ்பாய் ஸ்டைலில் நடப்பதைச்சொன்னபோது அசந்துவிட்டேன்.. என்ன ஒரு தத்ரூபமான வர்ணனை...

    நகைச்சுவையும் தூக்கல்... காபியில் ஒரு ஸ்பூன் சர்க்கரை அதிகமாக போட்டால் குடிக்க கசக்குமா என்ன?

    இந்த கதையிலும் அப்படியே...

    ஹாஹா அது சரி... ரொம்ப முன்னெச்சரிக்கையாக இருந்து இருந்து கடைசியில் அடுத்த நாள் காலை ட்ரெயின்ல செல்லவேண்டியது உறக்கத்தில் மறந்து எழுந்து அரக்கபறக்க ஓடினது சிரிப்பை வரவழைத்தது...

    ஓவர் அலர்ட்னெஸ் உடம்புக்கு ஆகாது என்ற மெசெஜும் புரியவைத்தது அண்ணா....

    ரசிக்கவும், சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த பகிர்வுக்கு அன்பு நன்றிகள் அண்ணா...

    பதிலளிநீக்கு
  65. மஞ்சுபாஷிணி November 24, 2012 3:57 AM
    //முன்னெச்செரிக்கை முத்தண்ணா சாரி சாரி முன்னெச்செரிக்கை முகுந்தன் பண்ற அட்டகாசங்கள் எல்லாமே ரசித்து வாசித்தேன் அண்ணா...//

    வாங்கோ மஞ்சு ... இப்போத்தான் “தேடி வந்த தேவதை” யாக ஓடிவந்து என் ”தேடி வந்த தேவதை” கதையின் ஐந்து பகுதிகளுக்கும் தனித்தனியாக நீங்க பின்னூட்டங்கள் கொடுத்திருந்தீங்க. இப்போதான் அவற்றையெல்லாம் நான் ஒருவழியாப் படித்துவிட்டு என் பதில் கருத்துக்களை எழுதி முடித்தேன்.

    அதற்குள் இங்கே ”முன்னெச்சரிக்கை முகுந்தன்” அவர்களையும் சந்திக்க [படிக்க] வந்துள்ளது ஆச்சர்யமாக உள்ளது. ரொம்ப ரொம்ப
    சந்தோஷம் மஞ்சு.

    //அதெப்படி செக் லிஸ்ட் வெச்சிருக்கார்.... அதுவும் அவசியமான.... வேஷ்டி துண்டுக்கான காரணம் நல்லவேளை சொல்லிட்டீங்க.. யோசிச்சு வாசகர்கள் தலைப்பிச்சுக்க வெச்சுக்காம....//

    ஓடும் பஸ்ஸில் அவசரமாக ஏறும்போது அவரோட டைட் பேண்ட் ஒரு நாள் டாராகக் கிழித்து விட்டதே, மஞ்சு.

    வேஷ்டி துண்டு பற்றிய காரணத்தை விலாவரியாகச் சொன்னால் தானே, நம் வாசகர்களுக்குத் தெரிய முடியும்.

    இல்லாவிட்டால் நீங்க சொல்வதுபோல எல்லோரும் தங்கள் முடியைப்பிய்ச்சுக்கிட்டு மொட்டையாகி விடுவார்களே, மஞ்சு!;)

    >>>>>>>>>>

    பதிலளிநீக்கு
  66. VGK To மஞ்சு [2]

    //இந்த கதை படிச்சதும் எனக்கு இபான் ஆங்கிலப்புத்தகத்தில் சொல்லிக்கொடுத்த லெசன் நினைவுக்கு வந்தது... நாளை எக்சாம்...//

    அடடா, குழந்தை இபானுக்கு நாளைக்கு எக்ஸாமா? அவனை அதற்கு தயார் செய்யவேண்டிய பொறுப்பு தாயாராகிய உங்களுக்கு இருக்கும் அல்லவா!

    //என்ன ஆனாலும் வர்ணனை அசத்தல் அண்ணா....

    முகுந்தனின் அத்தனை காரியங்களும் படிக்கும்போது ரசித்து சிரிக்கவைத்தன...

    என்னமா எழுதுறீங்க அண்ணா நீங்க...//

    மனம் திறந்து மஞ்சு பாராட்டுவது மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

    //மழை என்று சாதாரணமா சொல்லாம அதனால் ஏற்படும் அவஸ்தைகள் குண்டு குழி... அதில் வழுக்கி விழுந்து தோள்பட்டை எலும்பு விலகி இப்ப வாஜ்பாய் ஸ்டைலில் நடப்பதைச்சொன்னபோது அசந்துவிட்டேன்.. என்ன ஒரு தத்ரூபமான வர்ணனை...

    நகைச்சுவையும் தூக்கல்... காபியில் ஒரு ஸ்பூன் சர்க்கரை அதிகமாக போட்டால் குடிக்க கசக்குமா என்ன?

    இந்த கதையிலும் அப்படியே...//

    ”ஸ்வீத்தோ...... ஸ்வீத்த்த்தான” கருத்துக்கள் தித்திப்பாக!

    ஒரு ஸ்பூனுக்கு பதிலாக ஒரு சின்னக்கரண்டிச் சர்க்கரையை
    போட்டுட்டீங்களே மஞ்சூஊஊஊஊஊ மகிழ்ச்சிம்மா ;)))))

    >>>>>>>>>>

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. VGK to மஞ்சு [3]

      //ஹாஹா அது சரி... ரொம்ப முன்னெச்சரிக்கையாக இருந்து இருந்து கடைசியில் அடுத்த நாள் காலை ட்ரெயின்ல செல்லவேண்டியது உறக்கத்தில் மறந்து எழுந்து அரக்கபறக்க ஓடினது சிரிப்பை வரவழைத்தது...//

      ”நீ ... சிரித்தால் ... தீபாவளி !”
      என்ற பாடல் நினைவுக்கு வந்ததும்மா. ;)))))

      //ஓவர் அலர்ட்னெஸ் உடம்புக்கு ஆகாது என்ற மெசெஜும் புரியவைத்தது அண்ணா....

      ரசிக்கவும், சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த பகிர்வுக்கு அன்பு நன்றிகள் அண்ணா...//

      ரொம்பவும் சந்தோஷம் மஞ்சு.

      பிரியமுள்ள
      கோபு அண்ணா

      நீக்கு
  67. கதையை நினைத்து,நினைத்து சிரிப்பு வருகிரது. அருமையான சிரிப்புக் கதை. இரவு,பகல்தெரியாது ஓட்டமாக ஓடி, காப்பியையும் ,குடித்துவிட்டு கடைசியில் எவ்வளவு அசடு வழிந்திருக்கும். பிள்ளைக்கு பெண் பார்க்க வேறு போகிராரா? பதட்டம் இன்னுமே அதிகமாயிருக்கும். ஆனால் இனி மிகவும் உஷாராகவே இருப்பார்.
    வயதானவர்கள் படுக்கப் போகுமுன் ஒரு பை கொள்ளாது முன் எச்சரிக்கை ஸாமான்கள் வைத்துக் கொள்வது போல. எச்சரிக்கை ஓரளவோடு அவசியமாகிரது. நகைச்சுவை தாராளமாகக் கொடுத்திருக்கிரீர்கள். ரஸிக்கிறேன். அன்புடன் மாமி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Kamatchi March 6, 2013 at 2:37 AM

      வாங்கோ மாமி, அநேக நமஸ்காரங்கள்.

      //கதையை நினைத்து,நினைத்து சிரிப்பு வருகிறது. அருமையான சிரிப்புக் கதை. இரவு,பகல்தெரியாது ஓட்டமாக ஓடி, காப்பியையும் , குடித்துவிட்டு கடைசியில் எவ்வளவு அசடு வழிந்திருக்கும்?. பிள்ளைக்கு பெண் பார்க்க வேறு போகிறாரா? பதட்டம் இன்னுமே அதிகமாயிருக்கும். ஆனால் இனி மிகவும் உஷாராகவே இருப்பார்.

      வயதானவர்கள் படுக்கப் போகுமுன் ஒரு பை கொள்ளாது முன் எச்சரிக்கை ஸாமான்கள் வைத்துக் கொள்வது போல. எச்சரிக்கை ஓரளவோடு அவசியமாகிறது.

      நகைச்சுவை தாராளமாகக் கொடுத்திருக்கிரீர்கள். ரஸிக்கிறேன். அன்புடன் மாமி.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகாக ரஸித்துப்படித்து கூறியுள்ள ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனமர்ந்த நன்றிகள்.

      அநேக நமஸ்காரங்களுடன்,
      கோபாலகிருஷ்ணன்

      நீக்கு
  68. எல்லாம் சரியாக இருக்கா என்று பார்க்கும் மனிதனுக்கு, இது தேவையா?
    அவர் தான் முன்னெச்சரிக்கை ஆளாயிற்றே,
    அப்பிறம் அந்த தூக்கம் தேவைதான்.
    அப்புறம் பாருங்கோ முகுந்தன் பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்க போனார் அல்லவா? அதான் பதட்டம் இன்னும் அதிகமாக இருந்து இருக்கும். நகைச்சுவை கலந்த சிறுகதை.சூப்பர்.

    பதிலளிநீக்கு
  69. mageswari balachandran April 30, 2015 at 7:03 PM

    வாங்கோ, வணக்கம்.

    //எல்லாம் சரியாக இருக்கா என்று பார்க்கும் மனிதனுக்கு, இது தேவையா? அவர் தான் முன்னெச்சரிக்கை ஆளாயிற்றே, அப்புறம் அந்த தூக்கம் தேவைதானா?. அப்புறம் பாருங்கோ முகுந்தன் பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்க போனார் அல்லவா? அதான் பதட்டம் இன்னும் அதிகமாக இருந்து இருக்கும். நகைச்சுவை கலந்த சிறுகதை. சூப்பர். //

    :)

    //முகுந்தன் பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்க போனார் அல்லவா? //

    இல்லை. அவர் பிள்ளைக்குத்தான் சென்னை மேற்கு மாம்பலத்தில் பெண் பார்த்து விட்டு வர புறப்பட்டுப்போனார். :) ஏதோ ஒன்றைச்சாக்கிட்டுப் புறப்பட்டுப்போனார் .... OK OK., :)

    தங்களின் அன்பான வருகைக்கும் அழகான இனிய கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    தங்களால் முடியுமானால் ஜனவரி 2011 முதல் நான் வெளியிட்டுள்ள அனைத்துப்பதிவுகளுக்கும், வரிசையாக வருகை தந்து, ஒரு 15 வார்த்தைகளுக்குக் குறையாமல் பின்னூட்டமிட்டு, என் புதுப்போட்டியில் கலந்துகொண்டு ரொக்கப் பரிசினை வெல்லுங்கள்.

    போட்டி முடிய இன்னும் மிகச்சரியாக எட்டே எட்டு மாதங்கள் மட்டுமே உள்ளன. இப்போதே ஆரம்பித்து தினமும் சராசரியாக ஒரு ஐந்து பதிவுகளுக்காவது வருகைதந்து பின்னூட்டமிட்டு, வெற்றிவாகை சூடுங்கள். தங்களுக்கு என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

    அன்புடன் VGK

    பதிலளிநீக்கு

  70. //கொட்டும் மழையால், பகலில் வீட்டில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த அவருக்கு, சனிக்கிழமை மாலை நேரம், ஞாயிற்றுக்கிழமை அதிகாலையாகத் தோன்றியதால் வந்தக் குழப்பமே இவ்வளவுக்கும் காரணம். எதிலும் ஓரளவு முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது தான்.

    ஞாயிறு காலை பிடிக்க வேண்டிய ரிஸர்வேஷன் செய்த வண்டிக்கு, சனிக்கிழமை மாலையே புறப்பட்டுச் சென்றால், யார் தான் என்ன செய்வது?//

    ஆமா யார்தான் என்ன செய்துவிடமுடியும்,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் May 27, 2015 at 6:15 PM

      //ஆமா யார்தான் என்ன செய்துவிடமுடியும்//

      ஹைய்யோ, கரெக்டா சொல்லிட்டேள் ! :) மிக்க நன்றி.

      நீக்கு
  71. இவரைப் போல் ஒரு முன் ஜாக்கிரதை முத்தண்ணாவுடன் நான் பணி செய்திருக்கிறேன்.

    அளவிட முடியாத முன் ஜாக்கிரதையாக இருந்தாலும் தவறு நேர்வதை தவிர்க்க முடியாது.

    //ஞாயிறு காலை பிடிக்க வேண்டிய ரிஸர்வேஷன் செய்த வண்டிக்கு, சனிக்கிழமை மாலையே புறப்பட்டுச் சென்றால், யார் தான் என்ன செய்வது?////

    நல்ல மனிதர்.

    பதிலளிநீக்கு
  72. நல்லாதா முன்னெச்சரிக்க ஆளாகீராரு. ராவக்கு ஸ்டேஷனுலயே படுத்துபோட்டு காலல வண்டி புடிக்க வேண்டியதுதான.

    பதிலளிநீக்கு
  73. நான்லாம் அடிக்கடி இல்ல இல் தினசரியுமே லோக்கல் ட்ரெயினில் ட்ராவல் பண்ணுற ஆளு. இதுபோல மதிய தூக்கம் போட்டா தொலஞ்சிது பொழைப்பே கெட்டுடும். இவ்வளவு முன்னெச்சரிக்கை தேவையில்லதான் அது சிக்கல்லதானே மாட்டி விடறது. நார்மலான ஜாக்கிறதை உணர்வு இருந்தாலே போதும் அப்புறம் எப்படி இதுபோல நகைச்சுவை கதை கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
  74. ஞாயிறு காலை பிடிக்க வேண்டிய ரிஸர்வேஷன் செய்த வண்டிக்கு, சனிக்கிழமை மாலையே புறப்பட்டுச் சென்றால், யார் தான் என்ன செய்வது?/// முன்னெச்சரிக்கை முகுந்தன் - அதுக்காக இவ்வளவு முன்னெச்சரிக்கயா...சுவாரசியமான கதைதான்.

    பதிலளிநீக்கு