என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வியாழன், 21 ஏப்ரல், 2016

ஜீவி - புதிய நூல் - அறிமுகம் - பகுதி 20 (நிறைவுப்பகுதி)



’ஜீவி’ என்று நண்பர்களால் அன்புடன் அழைக்கப்படும் ’பூ வனம்’ http://jeeveesblog.blogspot.in/ வலைப்பதிவர் திரு. G. வெங்கடராமன் அவர்களின் நூலினை சமீபத்தில் சென்னை சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.  

ஏற்கனவே இவரின் படைப்பினில் நான்கு சிறுகதை தொகுப்பு நூல்கள் வெளிவந்திருக்கின்றன. தமிழில் வெளிவரும் உயரிய படைப்புகளை கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து வாசித்துவரும் 73 வயதான இவர் சென்னையில் வசித்து வருகிறார்.

தன் வாசிப்பு அனுபவம் மூலம் கண்டடைந்த 37 தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் அவருக்கு ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவே இந்த நூல் வெளியிட காரணமாக அமைந்துள்ளது. உன்னதமான தனது உணர்வெழுச்சிகளையும் விமர்சனங்களையும் எவ்வித ஆர்பாட்டமுமின்றி ஓர் எளிய நடையில் தன் சக வாசகர்களுடன்  ஜீவி பகிர்ந்துகொள்கிறார்.




நூல் தலைப்பு:
ந. பிச்சமூர்த்தியிலிருந்து 
எஸ்.ரா. வரை
மறக்க முடியாத தமிழ் எழுத்துலகம்
By ஜீவி

முதற்பதிப்பு: 2016

வெளியீடு:
சந்தியா பதிப்பகம்
புதிய எண் 77, 53வது தெரு, 9வது அவென்யூ
அசோக் நகர், சென்னை-600 083
தொலைபேசி: 044-24896979


அட்டைகள் நீங்கலாக 264 பக்கங்கள்
விலை: ரூபாய் 225 

ஒவ்வொரு பிரபல எழுத்தாளர்கள் பற்றியும் அவரின் பிறந்த ஊர், அவர்களின் சமகால எழுத்தாள நண்பர்கள், செய்துவந்த தொழில், உத்யோகம், எழுத்து நடை, எழுத்துலகில் அவரின் தனித்தன்மைகள், எந்தெந்த பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வந்தார், எந்தெந்த பத்திரிகை அலுவலகங்களில் ஊழியராகவோ அல்லது ஆசிரியராக பணியாற்றி வந்தார் போன்ற பல்வேறு செய்திகளுடன், அந்த எழுத்தாளர் எழுதியுள்ள பிரபல ஆக்கங்கள், அவற்றில் இவர் மிகவும் லயித்துப்போன பகுதிகள், அவர்கள் பெற்றுள்ள பரிசுகள் + விருதுகள், பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டவைகள் என மிகவும் விஸ்தாரமாக ஒவ்வொன்றையும் பற்றி தான் அறிந்த வகையில் எடுத்துச் சொல்லியுள்ளார்  ஜீவி.

இந்த நூல் அறிமுகத்தின், முதல் 19 பகுதிகளில் நாம் தொடர்ந்து ஜீவி சிலாகித்துச் சொல்லியுள்ள 37 பிரபல எழுத்தாளர்களில், 36 நபர்களையும் பற்றி பார்த்துவிட்டோம். இப்போது இந்த நிறைவுப்பகுதியில்  திரு. எஸ்.ரா. அவர்களைப்பற்றி மட்டும் நாம் பார்ப்போம். 




37) எழுத்துப் பயணி
எஸ். ராமகிருஷ்ணன்
[பக்கம் 249 முதல் 264 வரை]



தமிழ் வாசிப்பு  உலகுக்கு  எஸ்.ராமகிருஷ்ணன், எஸ்.ரா. தான். வாசிப்பில்லாமல் எழுத்தாளர் இல்லை என்றாலும், வாசிப்பு உலகிலிருந்து வந்த எஸ்.ரா. என்று எஸ்.ரா. வின் வாசிப்பு அனுபவங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஜீவி பெருமையாகச் சொல்கிறார்.

தமிழில் சிறந்த நூறு கதைகளை பட்டியலிட எஸ்.ரா. முனைந்த பொழுது அந்த நூறில் தனது இரண்டு கதைகளையும் சேர்த்து கொண்டிருக்கிறார். 'தாவரங்களின் உரையாடல்' மற்றும் 'புலிக்கட்டம்' ஆகிய எஸ்.ரா.விற்குப் பிடித்த அவரது  இரண்டு கதைகளை இந்த நூலில் ஜீவி விமரிசிக்கிறார்.

  1. திரிகூட மலை தாண்டவராய சுவாமிகள் எழுதிய ''தாவங்களின் ரகசிய வாழ்க்கை' என்ற நூலைப் பற்றி கேள்விப்பட்டு அதைப் பற்றி அறிய வேண்டும் என்ற அசுர ஆவலில் இங்கிலாந்திலிருந்து இந்தியா வருகிறார் ராபர்ட்ஸன் என்று வாசிக்க ஆரம்பிக்கும் பொழுதே பரபரப்பு நம்மைத் தொற்றிக் கொண்டு விடுகிறது.  ஆறு விரல் பெண், வாசல் படியில் சேவலின் அறுபட்ட தலை ரத்தம் கசியக் கிடப்பதாக.... என்று கதை முடியும் வரை ஒரே 'பரபர' தான்..
              2. அடுத்த கதை 'புலிக்கட்டம்'  பிரமாதமான கதை.  
                  வாசித்துத் தான் அதன் ரசனையை அறிய வேண்டும். 
                  சொன்னால் சரிப்படாது.

இந்த இரண்டு கதைகளும் எஸ்.ரா. வுக்கு பிடித்த அவரது கதைகள் என்றால்,  தனக்குப் பிடித்த எஸ்.ராவின் 'வெறும் பிரார்த்தனை' கதையை எடுத்துக் கொண்டு ஜீவி பரவசப்படுகிறார்.

’எஸ்.ரா.’ அவர்களின் தேர்ந்தெடுத்த கதைகளான ‘காந்தியோடு பேசுவேன்’; ‘ஷெர்லி அப்படித்தான்’; ‘பாதியில் முடிந்த படம்’; ‘பிடாரனின் மகள்’; ’சஞ்சாரம்’ என்கிற நாவல் முதலிய பலவற்றையும் பற்றி இந்த நூலில் பேசப்பட்டுள்ளன. 

எஸ்.ரா. அவர்கள் நாடகம் மற்றும் திரைப்படங்களிலும் தனது ஆர்வத்தினைக்காட்டி தன் பங்களிப்பினைத் தந்துள்ளார்கள்.


இவர் எழுதிய முதல் கதை ‘தொலைந்துபோன கபாடபுரம்’ என்றாலும் இவரின் முதல் பிரசுரம் ’கணையாழி’ பத்திரிகையில் வெளிவந்த ’தண்டவாளம்’ என்பதே என்கிறார் ஜீவி.


நாவலுக்கு எஸ்.ரா.வின் 'யாமம்'  கதையை ஜீவி எடுத்துக் கொண்டிருக்கிறார்.  அந்த யாமம் எப்படி காமமாய் கதையெங்கும் விரிகிறது என்று ஜீவி சொல்லச் சொல்ல நம் வாசிப்பின் சுகம் எங்கேயோ போகிறது.

'யாமம்' வாசித்தது  அதி அற்புத அனுபவமாயிற்றாம், ஜீவிக்கு.

நமக்கும் தான் என்று சந்தோஷமாய்ச் சொல்லலாம்..  

எஸ். ரா. அவர்களின் ‘யாமம்’ தாகூர் இலக்கிய விருதினைப்பெற்ற புதினமாகும். இந்த விருதினைப்பெற்ற முதல் எழுத்தாளரும் இவரே என்கிறார் ஜீவி. 

-oOo-

ஜீவி சாரின் இந்த நூலில் 
’யாமம்’ பகுதியில் 
நான் மிகவும் ரஸித்த வரிகள்:

ஆக, யாமம் திரிபுகொண்டு காமமாய் நாவல் நெடுக பதுங்கிக்கிடக்கிறது. இரவின் இரகசியம், வாசனைகளின் சுகந்தம் ஆகிய எல்லாமுமே காமத்தீயைக் கொழுந்துவிட்டு எரியச்செய்கிறது. காமம் தான் கதைகளாகிய இந்த நிகழ்வுகளைக் கட்டிப்போட்ட சரடு. 

வாரிசு தேவைக்காக, தனிமையை நிரப்புவதற்காக, இச்சைக்காக, பரிதாபத்திற்காக என்று காமம் வெவ்வேறு காரணங்களுக்கான தீர்வாக தன்னை நியாயப்படுத்திக்கொள்கிறது. அதனால் சம்பந்தப்பட்டவர்கள் அடைந்த இழப்புகளும் ஏராளம்.

புதினத்திற்கு ’யாமம்’ என்று பெயரிட்டிருந்தாலும் காமம்தான் கதையின் ஓட்டத்திற்கு அச்சாணியாக இருக்கிறது. 

மொத்தத்தில் காமம் ஒரு தீ. அதன் கதகதப்பை நாடியோரை அது சுடாமல் விடாது. யாமம் தெரிவிக்கும் நீதியும் அதுவே. 

எஸ்.ரா.வும் தனக்கு வாய்ப்பிருந்தும், தன் எழுத்துக்களால் காமத்தீயை, விசிறி விசிறி அனலைக் கிளப்பாமல், அடக்கி வாசித்திருக்கிறார். அதற்காக அவரைப் பாராட்டியே ஆக வேண்டும்.      

காமம் என்பது தேனும் கூட. காமத்தை சுகிப்பவன், தேனில் விழுந்த ’ஈ’யாகிறான். மாந்துகிறேன் பேர்வழி என்று ஒரு கிண்ணத் தேனின் மேற்பரப்பில் உட்கார்ந்த ஈ, அந்தத் தேனில் விழுந்தே கிடப்பது ... அதன் இறக்கைகள் நனைந்து, பிசுபிசுத்துப் பறக்க முடியாத நிலையையும் உருவாக்கலாம். தேனில் அமிழ அமிழ  அந்தத் தேன் கிண்ணத்திலிருந்தே அதனால் வெளியேற முடியாதபடிக்கு அதனை மூழ்கச் செய்யலாம். 

ஈ பறப்பதற்காகப் படைக்கப்பட்ட ஒன்று. தேனில் மூழ்குவதற்காக அல்ல, வெளியே வரவேண்டும்;  வந்து அது, அதன் இறக்கைகள் படபடத்துப் பறக்க வேண்டும்.

தேனையும், ஈயையும் கற்பனையில் உருவாக்கிய எழுத்தாளனும் தான் படைத்த ஈயைப்போல தேனிலேயே விழுந்து கிடக்கக்கூடாது. தேவைக்காகத் தேனும் வேண்டியிருந்தாலும், ஈயை வெளியேற்ற வேண்டிய பொறுப்பும் அவனுக்குண்டு. விழுந்து கிடந்தால் ஈக்கும் அவனுக்கும் வித்யாசமில்லாது போகும்.

நவீன இலக்கியம் என்பதும் சதாசர்வ காலமும் தேனில் ஈயை மூழ்கடித்து மூழ்கடித்து, ஈயை முடக்கக்கூடிய வேலையும் அல்ல.

-oOo-

தேன் போன்ற இந்த ஜீவி சாரின் நூலாகிய தேன் கிண்ணத்தில், இதுவரை  ஓர் ஈ போல மூழ்கிப்போயிருந்த நான்,  தேனின் தீண்டலாலும், தேனின் சுவையாலும், அது எனக்களித்த சுகபோகங்களாலும், மயங்கிக்கிடந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும்.


பிசுபிசுத்துப்போய் இருந்த என் இறக்கைகளுடன், எப்படியோ ஒருவாறு சமாளித்துத் தட்டுத்தடுமாறி, [அடிக்கடி என் மேலிடத்தின் குறுக்கீடுகள் போன்ற மாபெரும் உதவிகளாலும்] ஒரு வழியாக இந்த நூலைப் படித்து முடித்து வெளியேறி விட்டேன். 


இந்த அருமையான தேனின் ருசியும், நினைவலைகளும் மட்டும் என்றும் நீங்காமல், நீண்ட நாட்கள் என் மனதினில் இடம் பெற்றிருக்கும். - VGK




என் முடிவுரை


கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நம் ஜீவி சார் அவர்கள் தான் வாசித்து இன்புற்றுள்ள பிரபல எழுத்தாளர்கள் சிலரின் படைப்புகளைப்பற்றி நன்கு திறனாய்வு செய்து, தனக்கே உரித்தான பாணியில் ஒவ்வொன்றையும் அழகாக நமக்கு பருக ஆரோக்யமான ஜூஸ் போல இந்த நூலில் கொடுத்துள்ளார்கள். 

உண்மையைச் சொல்லப்போனால், இவர் சுட்டிக்காட்டியுள்ள பிரபலங்களில் (சுஜாதாவின் ஒருசில சிறுகதைகளைத் தவிர) எதையுமே இதற்கு முன் வாசித்தறியும் வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை. இவரின் இந்த நூல் வாயிலாக பிரபல தமிழ் எழுத்தாளர்கள் பலரின் பெயர்களையும், எழுத்துலகில் அவர்களின் மிகப்பெரிய சாதனைகளையும். தனித்தன்மைகளையும், தனித்திறமைகளையும், தனிச்சிறப்புக்களையும் ஓரளவுக்கு இப்போது என்னால் நன்கு அறிந்துகொள்ள முடிந்துள்ளதில் தனித்திருப்தி ஏற்பட்டிருக்கிறது. 

இந்த நூலினை 26.02.2016 வெள்ளிக்கிழமை மதியம் 2 மணிக்குப் படிக்க எடுத்த நான், ஆரம்ப அட்டை முதல் நிறைவு அட்டை வரை ஒரு வரி விடாமல், மனதில் வாங்கிக்கொண்டு 05.03.2016 சனிக்கிழமை மதியம் 2 மணிக்குள் (ஒன்பது நாட்களுக்குள்ளாக) ரஸித்துப் படித்து முடித்துவிட்டேன். 

குளிக்கும் நேரம், சாப்பிடும் நேரம், தூங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களின் இந்த நூல் என் கைகளிலேயே தவழ்ந்து கொண்டிருந்தது. தொடர்ந்து வாசிக்காமல் இந்த நூலைக் கீழே வைக்கவே எனக்கு மனசு வரவில்லை. அவ்வளவு சுவாரஸ்யம். பார்க்கப்போனால் இந்த நூல் பூராவும் இருப்பவை கட்டுரைகள் என்ற வகைப்பட்டன. கட்டுரைகள் எழுதுவதில் கதைகள் படிப்பதைப்போன்ற இவ்வளவு சுவாரஸ்யத்தை எப்படிக் கொண்டுவந்தார் என்பதுதான் ஜீவி சாரின் தனித்திறமையாக எனக்குத் தெரிகிறது. வாசித்துப்பார்த்தால் நீங்களும் அதைக் கண்டுகொள்வீர்கள். 

இந்த நூலில் குறையேதும் இல்லை என்பதே ஓர் சின்னக் குறையாகச் சொல்லலாம். 99.99% எழுத்துப்பிழைகளோ, அச்சுப்பிழைகளோ இல்லாமல் இருப்பது மேலும் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. 

இந்த 264 பக்கங்கள் கொண்ட நூலில் என் கண்களுக்குப் பட்டது மூன்றே மூன்று ... அதுவும் மிகச்சிறிய அச்சுப்பிழைகள் மட்டுமே. (1) பக்கம் எண்: 127-இல் ஒரு வார்த்தையில் ‘று” என்று இருக்க வேண்டிய எழுத்து ‘ரு’ என அச்சடிக்கப்பட்டுள்ளது (2) பக்கம் எண் 159-இல் ’ஜீனோ’, ’மீண்டும் ஜீனோ’ என்று இருக்க வேண்டியது ’ஜெனோ’, ’மீண்டும் ஜெனோ’ என அச்சிடப்பட்டுள்ளது  (3) பக்கம் எண் 160-இல் ஒரு வார்த்தையில் ‘ய’ என்ற எழுத்து மட்டும் அச்சிடப்படாமல் விட்டுப்போய் உள்ளது. மொத்த நூலிலுமே என் கண்களில் பட்டது இவை மூன்றே மூன்று மிகச்சிறிய அச்சுப்பிழைகள் மட்டுமே. அந்த அளவுக்கு ஓர் ஈடுபாட்டுடன் மிகக் கடுமையாக உழைத்து இந்த நூலை ஜீவி அவர்கள் முழுமையாக MOST PERFECTION உடன் வெளியிட்டுள்ளார்கள். 

எழுத்துலகில் எத்கிஞ்சுது (கொஞ்சூண்டாவது) ஈடுபாடு உள்ள நான், இந்த நூலை படிக்க நேர்ந்ததை வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய பாக்யமாக நினைத்து மகிழ்கிறேன். 

முழு மனத் திருப்தியுடன், இந்த அனுபவம் பெற காரணமாய் இருந்த இந்த நூலின் ஆசிரியர் ஜீவி சார் அவர்களுக்கு என் நமஸ்காரங்களுடன் கூடிய பாராட்டுகளையும், வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். 


 


  


இன்றைய வளரும் எழுத்தாளர்களும், பதிவர்களும் அவசியமாக இந்த நூலினை வாங்கிப்படித்துத் தங்களிடம் ஓர் பொக்கிஷமாக வைத்துப் பாதுகாத்து வர வேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பமாகும்.

ஜீவியின் 'ந.பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா.வரை' என்ற நூல் தமிழகத்தில்  கீழ்க்கண்ட புத்தகக் கடைகளில் கிடைக்கும்  என்கிற விவரம் நண்பர் ஜீவியின்  மூலமாக அறிந்தேன்.  இந்தப் புத்தகத்தை வாங்கி வாசிக்க எண்ணமுள்ளவர்களுக்கு இந்தத் தகவல் உபயோகமாக இருக்கும் என்பதால் அதை இங்கு குறிப்பிட்டிருக்கிறேன்.


மதுரை: மல்லிகை புக் சென்டர், 11, மேலாவணி தெரு, 
ரயில் நிலையம் எதிரில், மதுரை. போன்: 2341739

கோவை: விஜயா பதிப்பகம், 20, ராஜ  வீதி, கோயம்புத்தூர். போன்:  2394614

ஈரோடு: பாரதி புத்தகாலயம், 39  SBI சாலை, ஈரோடு--1

பொள்ளாச்சி: நம்ம புக்ஸ், 12, பஜார் தெரு, பொள்ளாச்சி--1

சேலம்: பாலம் புக்ஸ், 36/2,  அத்வைத ஆசிரமம் சாலை, சேலம்-4. 
போன்:  2335952

தேனி: மாயா புக்ஸ், 28, மதுரை ரோடு, 
(பேருந்து நிலையம் எதிரில்), தேனி-1

சென்னை: சந்தியா பதிப்பகம், எண்: 77,  53வது தெரு, 9வது அவென்யூ, 
அசோக் நகர்,  சென்னை -600 083 போன்:  24896979

சென்னை: நியூ புக் லேண்ட்ஸ், 52/C,  வடக்கு உஸ்மான ரோடு, 
தி. நகர், சென்னை- 17


-oOo-

இன்று 21.04.2016 வியாழக்கிழமை 
’சித்ரா பெளர்ணமி’ 
என்ற நல்ல நாளில், இந்த என் தொடர் நிறைவடைந்துள்ளது 
எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

அனைவருக்கும் சித்ரா பெளர்ணமி நல்வாழ்த்துகள்


சித்திரை மாதம் பெளர்ணமி திதியில், சித்திரை நக்ஷத்திரமும் கூடி வருவதால், சித்ரா பெளர்ணமி என அழைக்கப்படுகின்றது. மாதத்தின் பெயரும் நக்ஷத்திரத்தின் பெயரும் ஒன்றாகி (சந்திரன் சித்திரை மாதத்தில் சித்திரை நக்ஷத்திரத்தில் சஞ்சரிக்கையில்) சூரியன் உச்ச பலம் பெறும் மேஷ ராசியில் (சித்திரை மாதத்தில்) வரும் பெளர்ணமி தினம் சிறப்புப் பெறுகின்றது. 




இந்தப் பெளர்ணமி திதியும், சித்ரா நக்ஷத்திரமும், சித்திரை மாதமும் அம்மனுக்கு உரியனவாக இருப்பதனால், இந்த தினம் அம்பாளை பூஜிக்க மிகவும் சிறப்பான நாளாகும். 





அம்மனுக்குரிய இந்தச் சித்ரா பெளர்ணமி விரத நாளிலேயே, எமனின் சபையில் நம் பாவ புண்ணியக் கணக்கை இம்மியும் பிசகாமல் எழுதும் சித்ரகுப்தன் அவதரித்த நாளாகவும் இது கருதப்படுகிறது.






ஒவ்வொருவரும் செய்யும் புண்ணிய, பாவங்களைக் கணிப்பவர் சித்திர குப்தனார் என்பது நம்பிக்கை. நாம் செய்யும் புண்ணிய, பாவங்களை நமது இறப்பின் பின் தொகுத்து அதற்கேற்ப மோக்ஷமோ, நரகமோ, மறு பிறவியில் பெறும் உருவமோ வழங்கப்படும் என்பது இந்துக்களின் ஐதீகம். 




எமதர்மனின் கணக்கரான சித்ரகுப்தன் இந்த சித்திரை நக்ஷத்திர தினத்தன்றுதான் நீலாதேவி மற்றும் கர்ணிகாம்பா ஆகியோரை மணந்ததாகப் புராணம் சொல்கிறது. 




அன்னை மீனாக்ஷி, மதுரையில் சொக்கநாதரை மணந்ததும், கள்ளழகர் மதுரை வைகையாற்றில் விழா காண்பதும், இதே சித்திரை மாத பெளர்ணமி தினத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 


இறைவியாகிய அம்பாள், இயற்கையின் சக்தியாக, தர்மத்தின் காவலாக, உலக இயக்கத்தின் ஆதாரமாக விளங்குவதாக இந்துக்கள் கொள்கின்றனர். அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலை நிறுத்த, அம்பாள் காலத்திற்குக் காலம் பல்வேறு அவதாரங்களை எடுத்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. 



பூமா தேவியாக, பொறுமையின் இருப்பிடமாக வீற்றிருக்கும் அன்னை பொறுமை இழந்தால் .... எரிமலையாகக் கிளர்ந்தெழவும், புயலாக, வெள்ளமாக, வரட்சியாக, ஆழிப்பேரலையாக, அதிர்வாக, கொடுநோய்களாக வெளிப்பட்டு தன் சக்தியைக் காட்டி உலகத்தாருக்குப் புத்தியைப் புகட்டும் ஆற்றல் மிக்கவள். 






தாயாக இருந்து வாழ்வளிக்கும் அம்மனை இந்த நன்நாளில் நம்பிக்கையுடன் தொழுது நின்றால், நிச்சயம் வாழ்வில் மலர்ச்சியும், எழுச்சியும் நம்மை நாடி வரும். துன்ப, துயரங்கள் தூர விலகி விடும். மங்களம் பொங்கும். நல்வாழ்வு கிட்டும் என புராணங்கள் கூறுகின்றன.






அக்ஷய திருதியை போலவே இந்த நாளிலும் தானங்கள் செய்வது நன்மை தரும் என்று கருதப்படுகிறது. வெயிலுக்கு இதமாக தயிர்சாதம், கைவிசிறி, பானகம், நீர்மோர் இவற்றை தானமாக அளிப்பது வழக்கம்.





உப்பில்லாமல் உணவருந்தி, பசும்பால், பசு நெய், பசுந்தயிர் தவிர்த்து, சித்ரா பௌர்ணமி விரதம் இருந்து, ஒரு மூங்கிலாலான முறத்தில், அரிசி, வெல்லம், மாங்காய், ஒரு நோட்டுப்புத்தகம், பேனா முதலியவைகளையும் தானம் செய்யலாம்.










'கொஞ்சம் வெட்டி பேச்சு'
வலைப்பதிவர்

சித்ரா

 'கொஞ்சம் வெட்டி பேச்சு' 

மிகப்பிரபலமானதோர் வலைப்பதிவரும், பாளையங்கோட்டையில் பிறந்த சித்திரமும், தற்சமயம் அமெரிக்காவில் வாழ்ந்து வருபவரும், என்னை ’கோபு மாமா’ என அன்புடன் அழைப்பவருமான, நம் அன்புக்குரிய ’சித்ரா’ பிறந்த தினமும் ஒரு ’சித்ரா பெளர்ணமி’ அன்றுதான். அதனாலேயே அவருக்கு ‘சித்ரா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. 

அதனாலேயே பெளர்ணமி முழு நிலவு போல சும்மா ஜொலிக்கிறாரோ என்னவோ, என நான் அடிக்கடி எனக்குள் நினைத்துக்கொள்வது உண்டு. :) 

சித்ராவின் தந்தை, பிரபலமான திரு. பொ.ம.ராசமணி அவர்கள் போலவே, சித்ராவும் மிகச் சிறந்ததோர் நகைச்சுவையாளர். 

ஜனவரி 2012 வரை, வலையுலகில் கொடிகட்டிப்பறந்து வந்த இவர், ஏனோ அதன்பிறகு கடந்த நான்கு ஆண்டுகளாக புதிய பதிவுகள் ஏதும் தரவில்லை. 

இருப்பினும், சமீபகாலமாக சித்ரா பெளர்ணமி நிலவு போல ஃபேஸ்புக்கில் அடிக்கடி தோன்றி வருகிறார்.

 இனிய பிறந்த நாள் 
நல்வாழ்த்துகள் ..... சித்ரா. :)


 

அன்புடன் 
கோபு மாமா



இத்துடன் இந்தத்தொடரை நிறைவு செய்துகொண்டு 
தங்களிடமிருந்து தற்காலிகமாக 
விடைபெற்றுக்கொள்கிறேன்.




என்றும் அன்புடன் தங்கள்,

(வை. கோபாலகிருஷ்ணன்)

செவ்வாய், 19 ஏப்ரல், 2016

ஜீவி - புதிய நூல் - அறிமுகம் - பகுதி 19




’ஜீவி’ என்று நண்பர்களால் அன்புடன் அழைக்கப்படும் ’பூ வனம்’ http://jeeveesblog.blogspot.in/ வலைப்பதிவர் திரு. G. வெங்கடராமன் அவர்களின் நூலினை சமீபத்தில் சென்னை சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.  

ஏற்கனவே இவரின் படைப்பினில் நான்கு சிறுகதை தொகுப்பு நூல்கள் வெளிவந்திருக்கின்றன. தமிழில் வெளிவரும் உயரிய படைப்புகளை கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து வாசித்துவரும் 73 வயதான இவர் சென்னையில் வசித்து வருகிறார்.

தன் வாசிப்பு அனுபவம் மூலம் கண்டடைந்த 37 தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் அவருக்கு ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவே இந்த நூல் வெளியிட காரணமாக அமைந்துள்ளது. உன்னதமான தனது உணர்வெழுச்சிகளையும் விமர்சனங்களையும் எவ்வித ஆர்பாட்டமுமின்றி ஓர் எளிய நடையில் தன் சக வாசகர்களுடன்  ஜீவி பகிர்ந்துகொள்கிறார்.




நூல் தலைப்பு:
ந. பிச்சமூர்த்தியிலிருந்து 
எஸ்.ரா. வரை
மறக்க முடியாத தமிழ் எழுத்துலகம்
By ஜீவி

முதற்பதிப்பு: 2016

வெளியீடு:
சந்தியா பதிப்பகம்
புதிய எண் 77, 53வது தெரு, 9வது அவென்யூ
அசோக் நகர், சென்னை-600 083
தொலைபேசி: 044-24896979


அட்டைகள் நீங்கலாக 264 பக்கங்கள்
விலை: ரூபாய் 225 

ஒவ்வொரு பிரபல எழுத்தாளர்கள் பற்றியும் அவரின் பிறந்த ஊர், அவர்களின் சமகால எழுத்தாள நண்பர்கள், செய்துவந்த தொழில், உத்யோகம், எழுத்து நடை, எழுத்துலகில் அவரின் தனித்தன்மைகள், எந்தெந்த பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வந்தார், எந்தெந்த பத்திரிகை அலுவலகங்களில் ஊழியராகவோ அல்லது ஆசிரியராக பணியாற்றி வந்தார் போன்ற பல்வேறு செய்திகளுடன், அந்த எழுத்தாளர் எழுதியுள்ள பிரபல ஆக்கங்கள், அவற்றில் இவர் மிகவும் லயித்துப்போன பகுதிகள், அவர்கள் பெற்றுள்ள பரிசுகள் + விருதுகள், பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டவைகள் என மிகவும் விஸ்தாரமாக ஒவ்வொன்றையும் பற்றி தான் அறிந்த வகையில் எடுத்துச் சொல்லியுள்ளார் ஜீவி.

இந்த நூல் அறிமுகத்தில் நாம் தொடர்ந்து இவர் சிலாகித்துச்சொல்லியுள்ள 37 எழுத்தாளர்களையும் பற்றி அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாகப் பார்த்து வருகிறோம். 

இதுவரை  இந்த இன்றையப் பதிவுடன் 36 பிரபல எழுத்தாளர்களையும் நாம் பார்த்து முடித்து விட்டோம். 

இதன் அடுத்த பகுதியுடன் இந்தத்தொடர் இனிதே நிறைவடைய உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.




35) எண்ண ஓவியன் 
வண்ணநிலவன்
[பக்கம் 223 முதல் 237 வரை]


எழுத்தாளர் வண்ணநிலவன்  கதைகளை எடுத்துக் கொண்டு பிரமாதப்படுத்துகிறார் ஜீவி. 

அவரது ‘எஸ்தர்’ கதையை எடுத்துக்கொண்டு இத்தனை நாளும் எல்லோரும் நினைத்துச் சொன்ன மாதிரி இல்லாமல், எஸ்தர் கதையில் வரும் பாட்டியின் இறப்பிற்கான காரணத்தைப் புதுமாதிரியாகச் சொல்கிறார். இதிலிருந்தே ஜீவி இந்தக்கதையை எவ்வளவு ஆழ்ந்து படித்திருக்கிறார் என்று தெரிகிறது.


'பாம்பும் பிடாரனும்'  என்னும் வண்ணநிலவனின் கதையை ஜீவி விவரிக்கும் அழகே தனிதான்.

வண்ணநிலவனின் 'கெட்டாலும் மேன்மக்கள்' கதை ஜீவியின் எழுத்து லாவகத்தில் மனதை விட்டு  அகல மறுக்கிறது.   சுப்பையா, அவன் முதலாளி அரிகிருஷ்ணனின் மனைவி சந்திரா-- இரண்டு பேருமே மறக்கமுடியாத பாத்திரப் படைப்புகள். வண்ணநிலவனின் எழுத்துக்களில் ஜீவி நோக்கில் இந்த பாத்திரப் படைப்புகள் வார்ப்பு பெறும் பொழுது வாசிக்கையிலேயே மனம் நெகிழ்ந்து போகிறது..

எல்லாரும் வண்ணநிலவனின் 'எஸ்தர்' கதை தான் அவர் மாஸ்டர் பீஸ் என்கிறார்கள் என்றால் ஜீவிக்கு வண்ணநிலவனின் 'கெட்டாலும் மேன்மக்கள்'  கதை தான் அவரது மாஸ்டர் பீஸாம்! 

வண்ணநிலவனின்  'கடற்புரம்' நாவலை எடுத்துக் கொண்டு ஜீவி அலசுகிறார். பொன்னியின் செல்வனில் வரும் ஓடக்காரப் பெண்மணி பூங்குழலியின் 'அலைகடலும் ஓய்திருக்க..’ பாடலை ’கடற்புரம்’ நாவலில் வரும் 'வெள்ளியும் மறைஞ்சு போச்சே..' பாடலுடன் ஒப்புமை படுத்தி நம் நெஞ்சை கனக்கச் செய்கிறார்.

'ரெயினீஸ் ஐயர் தெரு',  'கம்பா நதி''   என்று வாசிக்க வாசிக்க வண்ணநிலவனை மறக்கவே முடியவில்லை. எப்படிப்பட்ட எழுத்தாளர் என்று மலைக்கிறோம்.

வண்ணநிலவனின் ஒரு கவிதையும் கடைசியில் வருகிறது. அவர் சொல்கிற மாதிரி 'எதையேனும் சார்ந்திருக்கத் தான் வேண்டும்' என்று தோன்றுகிறது.   

இவர் எழுதியுள்ள மற்ற படைப்புகளான ‘மழை’; ‘துன்பக்கேணி’; ‘அந்திக்கருக்கல்’; ‘சரஸ்வதி’; ’காவல்’ என்ற நாவல்; இவரின் முதல் கதையான ‘மண்ணின் மலர்கள்’ போன்ற அனைத்தையும் பற்றி ஜீவி ஆங்காங்கே குறிப்பிட்டுப் புகழ்ந்து பேசியுள்ளார்.  

வண்ணநிலவனுக்கு ‘துக்ளக்’ ஆசிரியர் ’சோ’ அவர்களால் வைக்கப்பட்டுள்ள பெயர்: துர்வாசர். துர்வாசர் என்ற பெயரில் துக்ளக் பத்திரிகையில் எழுதுவதும் இவரே என்பது ஜீவி நமக்குக் கொடுக்கும் கூடுதல் தகவலாகும். 





36) கலா நேசர் 
கலாப்ரியா
[பக்கம் 238 முதல் 248 வரை]




கலாப்ரியா அடிப்படையில் கவிஞர்.  இருப்பினும் கட்டுரை வரிசையில் அவர் எழுதிய 'நினைவின் தாழ்வாரங்கள்' என்னும் சுயசரிதை போன்ற நூலையும், அதன் தொடர்ச்சியான 'உருள் பெருந்தேர்' என்ற நூலையும்  ஜீவி எடுத்துக் கொள்கிறார். 

கலாப்ரியாவின் நினைவோடையில் தங்கியிருப்பதில் சினிமா சம்பந்தப்பட்டவை பெரும் பகுதியை ஆக்கிரமித்து விடுகிறது. இரயில் நிலையங்களில் இந்தி எழுத்துக்களை தார் பூசி அழித்தவர் .... இந்தி சினிமாக்களை, நடிகர்களை, நடிகர் நடித்த காட்சிகளைத் தவறாமல் நினைவு வைத்திருப்பதை ஜீவி சுட்டிக் காட்டி அதற்காகவே ஒரு காரணமும் கற்பித்துச் சொல்கிறார்.  

‘பெண்கள் பகுதி கவுண்டரில் பாக்கியத்தக்கா உதவியுடன் டிக்கெட் வாங்கி படம் பார்த்த’ கலாப்ரியாவின் அனுபவங்கள் வேடிக்கையானவை; ரசிக்கத் தகுந்தவை. இந்த அனுபவங்களின் தொடர்ச்சியாய் வரும் ’பாக்கியத்தக்கா’ மறக்க முடியாதவர். தென்காசி பஸ்ஸின் டயரில் அடிபடுகிற மாதிரி பாய்ந்து காசை எடுத்த விஜயரெங்கனும் மறக்க முடியாதவர்.  

திருநெல்வேலி நகரின்  சினிமாத் தியேட்டர்கள், ஓட்டல்கள் என்று எதையும் விட்டு வைக்கவில்லை.   எஸ்.எஸ்.ஆரின் 'முத்து மண்டபம்' என்கிற திரைப்படத்தின் விசேஷ நினைவு வேடிக்கையாய் இருக்கிறது.  

சுய விமர்சனத்துடன் தனது வாழ்க்கைச் சரித்திரத்தை எழுதுவோருக்கு துணிச்சல் வேண்டும். அது கலாப்ரியாவுக்கு இருக்கிறது.



-oOo-

கலாப்ரியா எழுதியுள்ள இந்தச் சின்னக் 
கவிதையைப் படித்துப்பாருங்கள்:

அந்திக் கருக்கலில்
இந்தத் திசை தவறிய
பெண் பறவை
தன் கூட்டுக்காய்
தன் குஞ்சுக்காய்
அலைமோதிக் கரைகிறது.
எனக்கதன் கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்
இருந்தும்
எனக்கதன்
பாஷை புரியவில்லை.




இன்றைய வளரும் எழுத்தாளர்களும், பதிவர்களும் அவசியமாக இந்த நூலினை வாங்கிப்படித்துத் தங்களிடம் பொக்கிஷமாக வைத்துப் பாதுகாத்து வர வேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பமாகும். 

என்றும் அன்புடன் தங்கள்,

(வை. கோபாலகிருஷ்ணன்)

தொடரும்



  

இதன் அடுத்த பகுதியில் 
இடம்பெறப்போகும் பிரபல எழுத்தாளர்:-       

  
   வெளியீடு: 21.04.2016 பிற்பகல் 3 மணிக்கு.
காணத் தவறாதீர்கள் !
கருத்தளிக்க மறவாதீர்கள் !!