என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 31 அக்டோபர், 2014

VGK 40 / 01 / 03 FIRST PRIZE WINNERS - மனசுக்குள் மத்தாப்பூ




’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்




  
  

  
  





கதையின்  தலைப்பு :


 VGK-40 



     மனசுக்குள் மத்தாப்பூ   






இணைப்புகள்:

பகுதி-1 க்கான இணைப்பு:  
பகுதி-2 க்கான இணைப்பு:  

பகுதி-3 க்கான இணைப்பு:  

பகுதி-4 க்கான இணைப்பு:  



     

மேற்படி ‘சிறுகதை விமர்சனப்போட்டி’க்கு 

மிக அதிக எண்ணிக்கையில் 

பலரும் மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். 

அவர்கள் அனைவருக்கும் 

என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.  








 நடுவர் திரு. ஜீவி  


 நம் நடுவர் அவர்களால் 

பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள

விமர்சனங்கள் மொத்தம் :



* ஆறு *


*வழக்கமான ஐவருடன் மூன்றாம் பரிசு மட்டும் 


உபரியாக ஒருவருக்கு அளிக்கப்படுகிறது.*


*உயர்திரு நடுவர் அவர்களின் வழிகாட்டுதல்களின்படி

மூன்றாம் பரிசுக்கான தொகை மட்டும் 

இருவருக்குமே முழுமையாகவே அளிக்கப்பட உள்ளது *

[NOT SHARING]










இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஆறு நபர்களுக்கும் 

நம் பாராட்டுக்கள் + 

மனம் நிறைந்த இனிய  நல்வாழ்த்துகள். 



  
       


முதல் பரிசினை முத்தாக


வென்றுள்ள விமர்சனம்-1







ஒரு காரியம் செய்வீர்களா? "வித்தியாசமான கரு" என்று முதலிலேயே கோபு அவர்களைக் கூப்பிட்டுச் சொல்லிவிடுங்களேன்? 


அப்படியே இன்னொன்றையும் நான் சொன்னதாகச் சொல்லிவிடுங்கள், புண்ணியமாகப் போகும். "இதுவரை படிக்க வைத்தக் கதைகளில்(சீடை கதை தவிர) பெரும்பாலும் இழையளவு கருநூலை வைத்து ஜரிகை கலந்த எட்டுமுழ கதைவேட்டி பின்னியவர், இக்கதையில் சம்பவங்கள் திருப்பங்கள் சேர்த்துக் கருவைக் கனமாக்கியிருக்கிறார். கனக்கருவைக் கதைப்படுத்துவதில் தெரிந்தோ தெரியாமலோ குழி தோண்டியிருக்கிறார். நிறைய கதைகள் இத்தகைய குழியில் விழுந்து, எழாமல் அமுங்கிவிடும். இவர் விழாமல் தாண்டியிருப்பது பாராட்ட வேண்டிய சாமர்த்தியம்". சொல்லிவிட்டீர்களா? சமர்த்து. நன்றி. குழி தோண்டு/தாண்டு படலத்துக்குப் பிறகு வருவோம்.


நாயகன் மனோ மனோதத்துவ நிபுணன். மறுபடி படியுங்கள். மனோ பிழையாக இருமுறை வரவில்லை. நாயகன் மனோ. நாயகன் மனோதத்துவ நிபுணன். ஆக.. புரிந்ததா, விடுங்கள். 


மனோதத்துவ நிபுணனோ கனவு காண்பதில் நிபுணனாக இருக்கிறான்.


கர்ப்பம் தரித்த அனுவைக் கட்டிக்கொண்டு அட்டையாக ஒட்டிக்கொண்டிருக்கிறான் மனோ. அனு விலகுமாறு நச்சரிக்கிறாள். மனோ இரட்டை அர்த்தத்தில் கொஞ்சுகிறான் (ஹிஹி.. கதையில் கிளுகிளுவுக்குக் குறைச்சலில்லை). பிரசவ வலி வேகத்தில் திடீரென்று அலறுகிறாள் அனு. ஹ்ம், கனவு. மனோ விழிக்கிறான்.


காதல் கனவு காண்கிறோம் என்று வையுங்கள். முதலில் காதலிப்பதாகவும், பிறகு கல்யாணம், பிள்ளை என்று வரிசைக் கிரமமாகத் தானே கனவு காண்போம்? இந்தக் கதையின் நாயகன் முதலில் பிள்ளைப் பேற்றை கனவாகக் கண்டுவிட்டு அங்கிருந்து லாஜிகலாக காதலுக்கு வருகிறான். இந்தக் கேள்விக்குறி லாஜிக் சுவாரசியமான லாஜிக்காக மாறியிருப்பது கதாசிரியரின் கைவண்ணம்.


கனவு நிபுணன் மனோ, அனு வீட்டின் மாடியில் குடியிருக்கிறான். தினசரி என்ன செய்கிறார் மாடி வீட்டு மைனர்? ஒரு பைனாகுலர் வைத்துக்கொண்டு தினம் கீழ் வீட்டு அனு கோலம் போடுவதை ரசிக்கிறான். அனுவும் தினமொரு கோலம் போட்டு (தரையில் தான்) அழகு பார்க்கிறாள். அதை மனோ அழகு பார்ப்பதையும் அழகு பார்க்கிறாள். மண்ணிலே கோலம் போட்ட கோதை, நாயகன் மனதிலும் நாளடைவில் கோலம் போட்டு விடுகிறாள். காதல் கோலம். அதைக் கலையாமல் வைத்திருருக்க விரும்புகிறான் நாயகன். இந்த வேளையில் நாயகி வாய்ச்சொல் ஏதுமிலை என்ற வண்ணமிருப்பது நாயகனுக்குப் புரிகிறது. ஊஹூம்.. கண்ணொடு கண் நோக்கின் வாய்ச்சொற்கள் என்ற வள்ளுவர் பாணி இல்லை. அனு உண்மையிலேயே வாய்ச்சொல் ஏதுமிலாதவள். ஊமை. திக்கென்றாகிறது பைனாகுலர் மைனருக்கு. ஊமையுடன் எப்படி காதல் டூயட் பாடுவது என்ற கவலையில் திக்கெனவில்லை. அத்தனை சொக்கத்தங்க அழகுப் பதுமை ஊமையான அநியாயத்தில் திக்கென்றாகிறது. கள்ள சைட் என்றாலும் மைனருக்கு நல்ல மனதாக்கும்.


தொடக்கத்திலிருந்து இந்த இடம் வரை கதாசிரியர் அடிக்கடி கவிஞராவது வியப்பு. சுவாரசியம். அழகு. அதனால் அருமை.

அனு கோலமிடும் அழகை இப்படி வர்ணிக்கிறார்: "..வழுவழுப்பான கைகளில் அணிந்த கண்ணாடி வளையல்களின் ஒலிகளுடன், தலை நிறைய பூவுடன், அன்ன பக்ஷியொன்று தத்தித்தத்தி தாவித்தாவி வட்டமிட்டு கோலம் வரையும் அழகை..." சைட் அடித்தாலும் இப்படியல்லாவா அடிக்க வேண்டும்? எத்தகைய குளுகுளு காட்சி!


அனுவின் "இடுப்பு மடிப்புகளில் பனித்துளிகள் படர்வதை" படிக்கையில் நமக்கே ஏதோ செய்கிறது. இந்த மாதிரி பைனாகுலர் ஒன்று கிடைக்காமல் போனதே? பைனாகுலர் கிடைத்தாலும் அனுராதாவுக்கு எங்கே போவது? ஹ்ம்.


"அனுவின் அன்றாடக் கோலங்கள், அன்புக் கோலங்களாக பதிந்து, என்றும் அழியாத காதல் கோலங்களாக மாறத்துவங்கி விட்டன". ஆகா! கோல ஜாலம்.


இத்தோடு விட்டாரா? தலை நிறைய பூ இருந்தால், அடுத்த கட்டம் என்ன? "சிறிய பட்டாம்பூச்சியொன்று அவளின் முதுகுப்புறம் தேன் தேடி மேய்வதை"... அதானே? இதல்லவோ கிளுகிளு? ரசிக்கிறான் நாயகன். குட்டிக் கவிதைகள் படித்த திருப்தி நமக்கு.


ஊமைப் பெண் ஒரு கனவு கண்டாள். சரி, அதை உள்ளத்தில் வைத்து வாழ்கிறாளா என்றுத் தெரிந்து கொள்ள நினைக்கிறான் நாயகன். அதற்குள் சோதனையாய் கதையில் திருப்பம். சைட் அடித்துக் கொண்டிருந்தவன் வீட்டுக் கதவைத் தட்டிச் செய்தி சொல்கிறார் அனுவின் தாய். 


அனுவைப் பெண் பார்க்க பட்டணத்திலிருந்து பெரிய இடத்துக்காரர்கள் வருவதாகவும், பெண் பார்க்கும் நேரத்தில் கீழே வந்து ஆண் இல்லாத வீட்டில் சற்று உதவியாக இருக்க முடியுமா என்றும் கேட்கிறார். அதிர்ந்த நாயகன் தன் எண்ணத்தைச் சொல்லாமல் உதவுவதாகச் சொல்கிறான். 'க்கும்.. சைட் அடிக்க மட்டும் தெரிகிறது' என்று நாம் புலம்புகிறோம்.


காதலுறும் ஒருவன் தன் காதலுக்கு இடையூறு ஏற்படுவது போல் தெரிந்தால் என்ன செய்வான்? உடனே பதறுவான். காதலியிடம் போவான். பெற்றோர்களிடம் புலம்புவான். நண்பர்களிடம் ஆலோசனை கேட்பான். குறைந்தபட்சம் கவிதையாவது பாடுவான். மனோ அப்படியில்லை. உடனே ஹை டெபனிஷன் கலரில் கனவு காண்கிறான். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு வடிகால்.


கனவில் அனு கோலம் வரைகிறாள். (இது மனோவின் கனவு. அனு, அவன் சைட் அடிக்கும் பெண். அவன் கனவில் அவள் கோலமிட்டால் என்ன, கொஞ்சினால் நமக்கென்ன என்கிறீர்களா? சரி). அனு கோலம் வரைவதை மனோ சைட் அடித்துக் கொண்டிருக்கிறான் (கனவில் தான்). இவன் சைட் அடிக்கும் கோணத்தில் அனுவின் முதுகுப்புறமாக ஒரு பெரிய நாகம் படமெடுத்து ஆடுகிறது. மனோ அரண்டு போய் கீழிறங்குகிறான். சட்டென்று அனுவை அப்படியே தூக்கிக்கொண்டு நாகத்தின் பார்வையில் நிற்கிறான். யாரோ தன்னைத் தொட்டுத் தூக்கியது ஒரு அதிர்ச்சி. கண்ணெதிரே நாகம் படமெடுத்து ஆடுவதைப் பார்த்ததில் மறு அதிர்ச்சி. அதுவரையில் பேச்சறியாதப் பேதை, "அம்மா" என்று அலறுகிறாள். வந்த வேலை முடிந்தது போல் மறைகிறது நாகம். ஆனால் கன்னிப் பெண்ணைத் தொட்டுத் தூக்கிய கயமைக்காக மனோவுக்குக் கெட்ட பெயரும் தண்டனையும் கிடைக்கிறது. அதற்கு நிவர்த்தியாக என்ன செய்யலாம் என்று யோசிக்கையில் கனவு கலைந்து விடுகிறது.


கனவில் கண்டது நிஜமாகும் என்று நம்புகிறவன் மனோ. 


மூச்! படித்த மனோதத்துவ நிபுணர் இப்படியெல்லாம் நம்புவாரா? லாஜிக்கெல்லம் கேட்கப்படாது. பிச்சிப்புடுவேன் பிச்சு. இது மனோவின் நம்பிக்கை. அதில்லாமல், காதலுக்கு எதற்கு லாஜிக்? 


கனவு நனவானால் என்னவாகும் என்று கலங்கி நிற்கையில், கீழே அனு வீட்டில் பட்டணத்து மாப்பிள்ளையைச் சந்திக்கிறான் மனோ.

மாப்பிள்ளையாக வந்தவன் ஒன்றாம் நம்பர் கேடி. ஆயிரம் கேடிக்கு சமம். சும்மா அதிரும் கேடித்தனம். தானறிந்த அத்தனை தில்லுமுல்லுக்களையும் காலை எட்டு மணிக்குள்ளாகச் செய்பவன். அதற்குப் பிறகு புதுக் கயமைகளைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியாளன். ஏற்கனவே பல முறை திருமணமானவன். பணத்துக்காகவும் பொல்லாப்புக்காகவும் மாப்பிள்ளையாக இங்கே வந்திருக்கிறான். இவனைப் பற்றி மனோவுக்கு இளமையிலேயே தெரியும்.


தன்னுடைய அனுவுக்கு ஆபத்து என்று தெரிந்ததும் மனோ என்ன செய்கிறான்? 


நோ, நோ. இந்த முறை கனவெல்லாம் காணவில்லை. உண்மைகளைப் புட்டுப் புட்டு வைத்து விடுகிறான் அனுவின் தாயிடம். ஏதோ சாக்கு சொல்லி மாப்பிள்ளையை அனுப்பி விடுகிறார் தாய்.  கதையின் முக்கிய திருப்பம் இது தான். மிச்சக்கதை விமரிசனத்துக்குத் தேவையில்லை. நீங்களே படித்துக் கொள்ளுங்கள். மறு நாள் கோலத்தில் தன்னுடைய நன்றியை மனோவுக்கு வெளிப்படுத்துகிறாள் அனு என்பதை மட்டும் இங்கே தெரிந்து கொண்டால் போதும்.


குழி தோண்டு/தாண்டு படலத்துக்கு வந்து விட்டோம்.


கர்ப்பிணியாக இருக்கும் இடங்கள் கனவு, அதற்குப் பிறகு நாகப்பாம்பு வருமிடம் கனவு... என்று அனுவையும் மனோவையும் இணைக்கும் சுவாரசியமான சம்பவங்கள் அனைத்தும் கனவு என்று கதாசிரியர் சொன்னதும் பற்றிக்கொண்டு வருகிறது. இப்படியே கடைசியில் எல்லாம் கனவு என்று சொல்லி நம்மைக் குழந்தையாகக் கருதுவார் போலிருக்கிறதே என்ற எரிச்சலுண்டாகிறது. அதுவும் கனவில் தோன்றுபவை நனவாகும் என்ற நம்பிக்கையுள்ள படித்த நிபுணன் என்றதும் டபுள் எரிச்சல். எல்லாம் கனவு என்று எழுதுவது கதாசிரியருக்கான குழி. இது கனவு அது கனவு என்று ஆங்காங்கே குழி தோண்டியவர் எப்படி வெளிவரப் போகிறார் என்ற ஆவலுடன் தொடர்கிறோம். அழகாகவே தாண்டியிருக்கிறார்.


மனோ மனோதத்துவ நிபுணர் என்று முதலிலேயே சொல்லிவிடுவதால், தாண்டு படலம் சுலபமாகி விடுகிறது. உலகின் அத்தனை பேரும் ஏதோ ஒரு கட்டத்தில் மன நோயாளிகளே என்ற வியாக்கியானம் அசர வைக்கிறது. அந்த வகையில் அனுவுக்கும் மனோதத்துவ ரீதியில் குணமுண்டாகலாம் என்ற லாஜிக்கை சிக்கல் பிரித்துச் சொல்கிறார். பட்டணத்து மாப்பிள்ளையின் பெயர் நாகப்பன். நாகம் கனவில் வந்தது, நாகப்பன் நனவில் வருகிறான். கனவிலும் நனவிலும் காப்பாற்றியவன் மட்டும் நாயகன். கனவில் நடப்பது நனவாகும் என்று நம்புகிறான் மனோ. அனுவுடன் கனவில் கணவனாகக் கொஞ்சுகிறான். நனவில் நன்றி சொல்லி காதலைத் தொடங்கி வைக்கிறாள் அனு. ஆக, சாமர்த்தியமாக கனவுக்கும் நனவுக்கும் முடிச்சிட்டு, குழி தாண்டி, வெற்றிக்கொடி நட்டிருக்கிறார் கதாசிரியர். பாராட்டுக்கள்.


வாழ்வில் நான் முக்கியமாக நினைக்கும் மூன்றை இந்தக் கதை தொட்டிருப்பது, தொட்டுப் பின்னியிருப்பது எனக்கு பிடித்திருக்கிறது.

நம் எல்லோருக்குமே வாழ்வில் ஒரு முழுமை தேவைப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் இந்த முழுமை கிடைக்கிறதா என்றால் இல்லை. முழுமை என்பது அவரவர் விளக்கத்துக்குட்பட்டது என்றாலும், ஒரு சிறிய பொதுவானக் கேள்வியின் விடையில் அது முழுமையா இல்லையா என்று தெரிந்து விடுகிறது. ஒரு நாளின் முடிவில், அல்லது வருடத்தின் முடிவில், அல்லது ஒரு பருவத்தின் முடிவில், அல்லது முதுமையின் விளிம்பில்.. ஏதோ ஒரு காலக்கட்டத்தில் வாழ்வின் சுவடுகளைத் திரும்பிப் பார்க்கையில், சம்பவங்களை அசை போடுகையில்... 'நாம் வாழ்க்கையில் முழுமை பெற்றோமா, ஒரு நிறைவு கிடைத்திருக்கிறதா?' என்ற சிறிய, பொதுக் கேள்விக்கான விடையில் புரிந்து விடுகிறது. இந்தக் கேள்வியை வாழ்வில் எப்பொழுது கேட்கிறோம் என்பது ஒரு வகைத் தேடல். எப்பொழுதெல்லாம் கேட்கிறோம் என்பது இன்னொரு வகைத் தேடல். ஒவ்வொரு தேடலிலும் ஒவ்வொரு வகை முழுமை.


என் வரையில் அறிவு, காதல், கருணை - இம்மூன்றும் வாழ்வில் ஒவ்வொருவருக்கும் முழுமையைத் தரக்கூடியது என்று நம்புகிறேன். தயங்காமல் அறிவை உபயோகித்து வாழ்வது தன்னம்பிக்கை மற்றும் நேர்த் தேடல்களை நம் வசமாக்கி வாழ்வை வளமாக்குகிறது. காதல் எனும் அற்புத உணர்வு அந்த வளமான வாழ்வை, உணர்வோடு இணைந்தத் துணையுடன் வாழச் செய்து அளவிலா மகிழ்ச்சியைப் பெற வைக்கிறது. அந்த மகிழ்ச்சியான வாழ்வை அடுத்தவரும் பெற வேண்டும் என்ற தயாள குணம், பெருந்தன்மை, மெலியாருக்கு உதவ வேண்டும் என்ற உணர்வு, எல்லோரும் ஓரினம், தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதில்லை என்றப் பரந்த நோக்கு - இவை அத்தனையும் கருணையின் அடையாளம்.  இந்த மூன்றும் இல்லாமல் வாழ்வு முழுமையடைவதில்லை. 


இந்தக் கதையில் வரும் மனோ-அனுவின் உறவு, அறிவு, காதல், கருணை மூன்றையும் தொட்டுக் காட்டியிருக்கிறது. அவர்களின் மனமிணைந்தக் காதலின் தொடக்கமே ஒரு முழுமையின் வெளிப்பாடு என்று படிக்கும் பொழுது - சற்றே புல்லரிக்கிறது. இந்தக் காதலர்களின் வாழ்வில் முழுமைக்குப் பஞ்சமில்லை என்ற நிறைவு உண்டாகிறது.


ஆங்காங்கே கவிதை உணர்வுகளை மீட்டிய காதல் கதை.






 







இந்த விமர்சனத்தை எழுதி அனுப்பியுள்ளவர்: 





  



 திரு. அப்பாதுரை அவர்கள்.


வலைத்தளம்: மூன்றாம் சுழி







  





மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 




அன்பான இனிய நல்வாழ்த்துகள்.



      




முதல் பரிசினை முத்தாக


வென்றுள்ள விமர்சனம்-2





மனசெல்லாம் மத்தாப்பூ பூக்கும்படியாய் அழகானதொரு காதல் கதை. மனோ, அனு மீது கொண்ட உன்மத்தம் வெகு அழகாய் வெளிப்படுகிறது.

கதையில்.  மனோ – அனு காதல் தம்பதியரின் பிணைப்பு சாதாரண 
பிணைப்பல்ல என்பதை எடுத்த எடுப்பிலேயே உணர்த்திவிடுகிறார் 
ஆசிரியர்பாசக்கயிற்றினாலும் தங்கள் பாசத்தைப் பிரிக்கமுடியாது 
என்பதைப் போல மார்க்கண்டேயன்சிவலிங்கத்தை ஆலிங்கனம் செய்த உவமையும், வருடும் காதல்வசனங்களும் முதல் பகுதியிலேயே வாசகரைக் கதைக்குள் ஈர்த்துவிட, தொடரும் பகுதிகளில் வாசக இருப்பை, தொடர்ந்து கதைக்குள் தக்கவைத்துக்கொள்கிறார் கதாசிரியர், தன் கதை சொல்லும் சாமர்த்தியத்தால்.

கர்ப்பிணியான அனுவைக் கட்டிக்கொண்டு லயிக்கும் காதல் கணவனாய்மனோவின் கனவும், அதைத் தொடர்ந்து நாம் எதிர்பாராத நிகழ்வுகளும், மீண்டும் ஒரு கனவும் அதன் பலாபலனும் என ஒரு zigzag வடிவத்தில் பயணிக்கிறது கதை.

அனு தன் அன்புக்கணவருடன் தனக்கு வரவிருக்கும் 
தற்காலிகப்பிரிவை எண்ணி பொறுமை காத்தாள் என்ற 
வரிகளை வாசிக்கும்போதுகர்ப்பிணியான அனு சீராடத் 
தன் தாய்வீடுசெல்லும்போது ஏற்படும் பிரிவைத்தான் 
குறிப்பிடுகிறாள் என்றுதான் முதலில்  தோன்றுகிறது

பொதுவாக முதன்முறைதாய்மையடைந்திருக்கும் 
பெண்களை ஏழாம் மாதம் வளைகாப்புநடத்தி தாய்வீட்டுக்கு 
அழைத்துச்செல்வது வழக்கம்இங்கும்அந்தப் பிரிவை 
எண்ணிதான் இருவரும் கலங்குகிறார்களோ என்று
நினைத்துக் கொண்டிருக்கையிலேயே…  உள்ளூரிலேயே.. 
அவர்கள் வசிக்கும் அதே வீட்டின் கீழ் போர்ஷனில்தான் 
அனுவின் தாயார் வசிக்கிறார் என்பது தெரியவருகிறது.  
அடச்சேகூப்பிடுதூரத்தில் இருக்கும் மாமியார் வீட்டுக்கு அனுப்பத்தான்
இத்தனை பீடிகையா?’ என்று அடுத்ததாகத் தோன்றுகிறது.

கடைசியில் பிரிவு அதற்காகவும் இல்லையாம்பிரசவத்துக்கு
மருத்துவமனை செல்வதால் உண்டாகும் பிரிவு பற்றிய
கவலையாம் அது… இது நல்லாயிருக்கே… பிரசவத்துக்கு
மனைவியை மருத்துவமனை அனுப்பாமல் வீட்டில்
வைத்துக்கொண்டு இப்படி ஆலிங்கனம் செய்துகொண்டே
இருந்தால் குட்டி மனோவாவது… அனுக்குட்டியாவது

ஆசைக்கும் ஒரு அளவு வேண்டாமா இந்த மனோவுக்கு
இப்படியா கர்ப்பிணி மனைவியைப்போட்டு பாடாய்ப் படுத்துவது? இப்படியொரு பெண்டாட்டி பித்தனாக 
இருக்கிறானே என்று அவனை நொந்துகொண்டிருக்கும்போதே 
திடுக்கென்று கனவுகலைந்து விழிக்கிறான் மனோ
அடடாநமக்கும் விழிப்பு தட்டி ஆசுவாசம் வருகிறது 
அந்த இடத்தில்.

உலகில் எத்தனை விதமான மனநோயாளிகள் இருக்கின்றனர்
என்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின்
எண்ணிக்கையை விடவும் அனுமதியாகாமல் வெளியுலகில்
சுற்றித்திரியும் நோயாளிகளே அதிகம் என்றும் மனோவியல்
மருத்துவரான மனோ நினைப்பதாக கதையோட்டத்துடன் 
ஒருபெரிய பட்டியல் வருகிறதுஅனுவை கோலப்பைத்தியம் 
என்று குறிப்பிட்ட அவன் தன்னை அனு பைத்தியம் என்று 
குறிப்பிட்டுதானும் அந்தப் பட்டியலில் இணைந்திருக்கலாம்
அந்த அளவுக்கு அவனை கனவிலும் நனவிலும் 
கற்பனையிலும் ஆக்கிரமித்திருக்கிறாள் அனு.

நல்லதோபொல்லாததோநடவாத ஒன்றை நடப்பதுபோல்
நினைப்பதை கற்பனை என்கிறோம்அந்தக் கற்பனையே 
கொஞ்சம்கொஞ்சமாய் எண்ணத்தை 
ஆக்கிரமித்துக்கொள்ளும்போதில் உறக்கத்தில் 
நம்மையறியாது அரை உணர்வுநிலையில்
எழுவதைக் கனவு என்கிறோம்.  நடக்கவிருக்கும் ஒன்றைமுன்கூட்டியே 
அறிந்துகொள்ளும் திறனை உள்ளுணர்வின் உந்துதல் 
என்கிறோம்இப்படி கற்பனையும் கனவும் உள்ளுணர்வின் 
உந்தலுமாய்  மனோவின் மனம் காதலியானஅனுவையும் 
அவள் பிரச்சனைகளையுமே சுற்றிச் சுற்றிவருவதால் 
இந்த இளம் மனநல மருத்துவனுக்கு காதல் வியாதி
முற்றிவிட்டது என்றே சொல்லலாம்.

அனுவின் கோலங்கள் பற்றிய சிலாகிப்பும்,  
கோலமிடும் கோலமயிலான அவளைப் பைனாகுலர் மூலம் 
அருகில் ரசித்து மகிழும் சிலிர்ப்புமாய் மனோவின் பரவச 
அனுபவங்கள் ஆஹா….

காதலியே ஆனாலும் அவளறியாமல் அவளை 
பைனாகுலர்வழியே ரசிக்கலாமா
ஒரு மருத்துவருக்கு இது அழகா?
திருமணமாகாத கன்னிப்பெண்ணை
அவள் தன்னைக்காதலிக்கிறாளா என்று தெரியாத நிலையில்
அவளறியாமல் இப்படி அணு அணுவாக ரசிப்பது 
தவறென்று மனசாட்சிஉறுத்தாதாஎன்றெல்லாம் 
யோசிக்கவிடாமல் மனோவின்ஆழ்மன ஆசையைக் 
கனவாக்கி காதல் கசிந்துருகும் பாத்திரமாய்ப்படைத்து 
நம்மை வாயடைக்கச் செய்துவிடுகிறார் ஆசிரியர்.

என்னதான் காதலின் ஆழத்தைகனவில் அவளைத் 
திருமணம்செய்துஅவள் கர்ப்பிணியான பின்பும் 
காதலைச் சொட்டச் சொட்ட உணர்த்தினாலும் 
இந்த இடத்தில் ஒன்றிரண்டு கேள்விகள் எழாமல்இல்லை
மனசாட்சியையும் மீறி ரசிக்குமளவுக்கு காதலும் ஆசையும் 
வைத்திருப்பவன்திருமணம் செய்துகொள்ளும்நோக்கம் 
இல்லாமல் இருப்பானாஅனுவின் தாயாரிடம் ஏன் அவன் 
அனுவைத்  திருமணம் செய்வது குறித்துப் பேசவில்லை?அவ்வளவு தூரம் கனவிலும் கற்பனையிலும் 
அவளைக்காதலித்தவன்அவளைத் திருமணம் 
செய்துகொள்ள எந்தமுயற்சியும் எடுக்காதிருப்பது ஏன்
ஏன் தயங்கவேண்டும்?

மனோவுக்கு என்ன குறைமருத்துவனாய் இருக்கிறான்
நல்லசுபாவமுடையவனாகவும் இருக்கிறான்
மகளின்திருமணப்பேச்சின்போது அவன் இருந்தால் 
ஒரு தைரியம்கிடைக்கும் என்ற அளவில் அவன் மீது 
நம்பிக்கைவைத்திருக்கிறார் அனுவின் தாயார்
பிறகும் ஏன் மௌனம்சாதிக்கிறான்தானாகப் பெண்கேட்கும் சாமர்த்தியம் இல்லாவிடினும் இதோ..  
இப்போது அனுவின்  தாயாரே அவளது திருமணப்பேச்சைத் துவக்கிவைத்திருக்கிறார்களே.. இந்தசந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளாமல் 
நழுவ விடுவது ஏன்?

பெண்பார்க்க வருகிறார்கள் என்று கேள்விப்பட்டதுமே 
அனுவைவேறொருவனுக்கு மனைவியாகப் போகிறவள் 
என்று எண்ணுவதும்திருமணத்துக்குப் பின் அவளது 
வாழ்க்கை நல்லபடியாக அமையவேண்டும் என்று 
பிரார்த்திப்பதும்தான் சற்று நெருடலாக உள்ளது.

ஒருவேளை… ஒருவேளை… அவள் ஊமை என்ற விவரம்
மனோவுக்கு முதல்நாள்தானே தெரியவந்ததுமனோ எதிர்பாராத
அதிர்ச்சி அல்லவா அதுஅந்த அதிர்ச்சியிலிருந்து 
அவன்மீளவில்லையோஇல்லையே… 
அந்த விஷயம் தெரிந்தபிறகும் அவன் அனுமேல் வைத்திருக்கும் 
ஈடுபாட்டில் துளியும் குறையவில்லை என்றும் கதாசிரியர் 
சொல்லிவிட்டாரே.

மனோவுக்கு கனவு ஏற்பட்டால் அது நிச்சயம் நடந்துவிடுவதுண்டு
என்று குறிப்பிட்டு மனோவின் வாழ்க்கையில் சம்பவித்த சில நிகழ்வுகளையும் குறிப்பிடுகிறார் கதாசிரியர்

கனவுகள் பலிக்கும் என்றால் மனோவுக்கு அனுவுடன் 
திருமணமாகும்தாய்மைப்பேறுஉண்டாகும்
அனுவால் பேசமுடியும்.. எல்லாம் சரிதான்.
இரண்டாவது கனவில் நிகழ்ந்ததுபோல் 
மனோவைக்கட்டிப்போட்டு ஊரே கூடி 
உதைப்பதும் நிறைவேறுமா
அப்படியென்றால் ஐயோ பாவம் அவன்!

நிறைவேற வாய்ப்பும் இருக்கிறது என்பதை 
கதையின் கடைசிப்பகுதி மறைமுகமாக உணர்த்துகிறது. 
நாகப்பா ஒரு ரௌடி. எந்த ரௌடியும் தான் நினைத்துவந்த 
காரியம் ஆகாதபொழுதில் சும்மா இருப்பதில்லை. 
ஒன்று உடனேயே பாய்ந்து எதிரியின் குடலை உருவிவிடுவார்கள் அல்லது கருவிக்கொண்டு உரிய காலம் வரும்வரை காத்திருப்பார்கள். இங்கும் நாகப்பா வெறுமனே புலம்பிக்கொண்டு வெளியேறுவதாய் சொல்லப்பட்டாலும் பின்னாளில் அவனால் மனோவுக்கு ஏதேனும் ஆபத்து வரும் வாய்ப்புள்ளது என்பதால் அந்த அடி உதைக்கனவும் ஒருநாள் நிறைவேறக்கூடும் என்று கொள்ளலாம். 
அந்த நாகப்பாவின் கண்களுக்கு மனோவின் தரிசனம் 
மறுபடி கிடைக்காமல் பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.  

அதைப் பற்றி அப்புறம் பார்ப்போம். 
இப்போது அனுவின் மனத்தில் இடம்பிடித்துவிட்ட 
மனோவின் குதூகலத்தைப் பார்த்து ரசிப்போம். 
கதாசிரியரே சொல்லிவிட்டாரே.. அடுத்த தீபாவளி 
அனு – மனோவுக்கு நிச்சயம் 
தலை தீபாவளியாகத்தான் இருக்கும் என்று! 
நாளைய காதற்தம்பதியருக்கு நாமும் இனிதே நம் 
வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்வோம். 

ooooooooooooooooooooooooo 






 







இந்த விமர்சனத்தை எழுதி அனுப்பியுள்ளவர்: 






 திருமதி. கீதாமதிவாணன் அவர்கள்.


வலைத்தளம்: கீதமஞ்சரி

geethamanjari.blogspot.in





 



மீண்டும் ஒரு மிகப்பெரிய ஹாட்-ட்ரிக் 


அடித்து அசத்தியுள்ளார்கள்  !








VGK-35 To VGK-40 





 

  

   



 



 Great Achievement ! 

My Heartiest Congratulations to you !! 

- Gopu



இது இவர் அடித்துள்ள ஐந்தாவது 

ஹாட்-ட்ரிக் வெற்றியாகும்.




அடுத்தடுத்து மூன்று முறை தொடர் 

வெற்றிகளுடன் ஒரேயொரு ஹாட்-ட்ரிக்



VGK-23 TO VGK-25 




 இவர் அடித்துள்ள மற்ற


நான்கு ஹாட்-ட்ரிக்களுமே


ஒவ்வொருமுறையும் 


ஆறு தொடர் வெற்றிகளுடன் 


[சிக்ஸ்சருடன்]


கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.



VGK-07 TO VGK-12 ; 

VGK-17 TO VGK-22; 

VGK-29 TO VGK-34 

and  

VGK-35 TO VGK-40



    





மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 




அன்பான இனிய நல்வாழ்த்துகள்.



      


 



மிகக்கடினமான இந்த வேலையை
சிரத்தையுடன் பரிசீலனை செய்து
நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 
நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.




நடுவர் அவர்களின் வழிகாட்டுதல்களின்படி
முதல் பரிசுக்கான தொகை இவ்விருவருக்கும்


சரிசமமாகப்பிரித்து அளிக்கப்பட உள்ளன.





      

 





இந்த இறுதிப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 

இடைவெளிகளில் வெளியிடப்பட்டுள்ளன.





அதற்கான இணைப்புகள்














காணத்தவறாதீர்கள் !



     



முக்கிய அறிவிப்பு


  

 





’அழைப்பிதழ்’



நாளை 01.11.2014 முதல் 09.11.2014 வரை


நம் சிறுகதை விமர்சனப்போட்டியின் 


வெற்றி விழாக்கள்


நிறைவு விழாக்கள் 


தினமும் ஒரு புத்தம் புதிய தகவலுடன் 


வெகு விமரிசையாகக் 


கொண்டாடப்பட உள்ளன.



நிகழ்ச்சி நிரல்:



01.11.2014  

VGK-01 TO VGK-40 TOTAL LIST OF HAT-TRICK PRIZE WINNERS



02.11.2014 

சாதனையாளர்களுக்கான புதிய கூடுதல் விருதுகள் அறிவிப்பு - 1


03.11.2014 

சாதனையாளர்களுக்கான புதிய கூடுதல் விருதுகள் அறிவிப்பு - 2


04.11.2014 

சாதனையாளர்களுக்கான புதிய கூடுதல் விருதுகள் அறிவிப்பு - 3


05.11.2014 

சாதனையாளர்களுக்கான புதிய கூடுதல் விருதுகள் அறிவிப்பு - 4



06.11.2014  


VGK-01 To VGK-40 

வெற்றியாளர்கள் பற்றிய 

ஒட்டுமொத்த அலசல்.




07.11.2014 

 நன்றி அறிவிப்பு 

- கோபு [VGK]



08.11.2014

’அன்பான நெஞ்சங்களுக்கு’

என்ற தலைப்பில் நடுவர் 

திரு ஜீவி அவர்களின் கடிதம்




09.11.2014 

VGK-31 TO VGK-40 


ஒட்டுமொத்த பரிசு அறிவிப்பு +


அவரவர்களுக்கான மொத்தப் 


பரிசுத்தொகை அறிவிப்பு +


பரிசுப்பண பட்டுவாடா தேதி அறிவிப்பு.









அனைவரும் அவசியமாக 


குடும்ப சஹிதம் 


முன்னதாகவே வருகைதந்து


இந்த இனிய வெற்றி விழாக்களைக்


கண்டுகளித்துக் கருத்தளித்து 


சிறப்பிக்குமாறு  அன்புடன்


வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.














என்றும் அன்புடன் தங்கள்

வை.கோபாலகிருஷ்ணன்