என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 23 பிப்ரவரி, 2013

*குலதெய்வமே உன்னைக் கொண்டாடுவேன்!*

2
=
ஸ்ரீராமஜயம்

குலதெய்வமே 
உன்னைக் கொண்டாடுவேன்!


சென்ற என் மூன்று பதிவுகளில் “என் வீட்டு ஜன்னல் கம்பி ஒவ்வொன்றாய்க் கேட்டுப்பார்” என்ற தலைப்பில் என் வீட்டைப்பற்றி கொஞ்சம் எழுதியிருந்தேன்.

எவ்வளவு நேரம் வீட்டுக்குள்ளேயே ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது? காலாற நடந்து சென்று அருகே உள்ள கோயில் குளம் எனப்பார்த்து மகிழ வேண்டாமா?  

எங்களின் குலதெய்வங்கள் மொத்தம் மூன்று. என் முன்னோர்கள் சிறப்பாக வழிபட்ட தெய்வங்கள் இவை.  

[1] குணசீலம் 
[2] மாந்துறை 
[3]  சமயபுரம்

வீட்டில் புதிதாகக் குழந்தைகள் பிறந்தால் முடிகாணிக்கை செலுத்த வேண்டியதும் இதே வரிசைக் கிரமப்படி தான் செய்வது வழக்கம். 




குணசீலம் பெருமாள் கோயில் 


மாந்துறை சிவன் கோயில்


மாந்துறை காவல் தெய்வமான கருப்பர் கோயில்


சமயபுரம் மஹமாயீ கோயில்




1. குணசீலம் : [திருச்சி To சேலம் மார்க்கத்தில் திருச்சியிலிருந்து 18 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள முக்கொம்பு பக்கத்தில் உள்ளது]

குணசீலம் “ஸ்ரீ அலமேலு மங்கா ஸமேத ஸ்ரீ ப்ரஸன்ன வேங்கடாசலபதி” திருக்கோயில். 

முதல் நாள் மாலை ஸ்வாமிக்கு சந்தனக்காப்பு அலங்காரமும், மறுநாள் காலை திருமஞ்சனமும் செய்து வருவது வழக்கம். 

வருஷத்தில் ஒரு நாள் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம அகண்ட பாராயணமும் நடைபெறும். 

அன்று பால் குடம் ஏந்திப்போய், அகண்ட பாராயணத்திலும் கலந்து கொள்வது உண்டு. 

லக்ஷக்கணக்கான ஆவர்த்திகள் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாம ஜபம், பலராலும் சேர்ந்து உச்சரிக்கப்பட்டு, நாள் பூராவும் இரவு பகல் எந்நேரமுமாக நடைபெற்று வரும்.   

அதுபோல வருடத்தில் ஒரு நாள் நடைபெறும் தேர் திருவிழாவும், அன்றைய தினம் நடைபெறும் மிகப்பெரிய அன்னதான விருந்தும் மிகவும் குறிப்பிடத்தக்கவைகளாகும்.  

இந்தக்கோயிலின் சிறப்புகள் பற்றி மேலும் பல விஷயங்கள் அறிய, நம் தெய்வீகப்பதிவர் திருமதி இராஜராஜேஸ்வரி  [மணிராஜ்] அவர்கள் எழுதியுள்ள பதிவுக்குச் சென்று பார்த்து மகிழுங்கள்.

இணைப்பு இதோ: 

http://jaghamani.blogspot.com/2011/11/blog-post_05.html  
[தலைப்பு: ”குணக்குன்று குணசீலம் பிரசன்ன வேங்கடாசலபதி” ]

இந்தக்கோயிலுக்கு வருடம் ஒருமுறையாவது சென்று வழிபட்டு வருவது எங்கள் வழக்கம். இந்தக்கோயிலில் குடிகொண்டுள்ள தெய்வத்தின் பிரதிநிதி போல என் வீட்டருகே ஒரு கோயில் அமைந்துள்ளது என்பதில் எத்தனை மகிழ்ச்சி. இதோ இங்கே பாருங்கள்:





ஸ்ரீகிருஷ்ணன் 
என்கிற 
ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசப்பெருமாள் திருக்கோயில்
திருச்சி - 2


பெருமாள் மூலவர் சந்நதி


2. மாந்துறை : [திருச்சி To லால்குடி மார்க்கத்தில் திருச்சியிலிருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அருமையான சிவன் கோயில். இதன் முக்கியமான காவல் தெய்வம் கருப்பர் - ஸ்ரீ கருப்பண்ணஸ்வாமி ]

மாந்துறை “ஸ்ரீ பாலாம்பிகா ஸமேத ஸ்ரீ ஆம்ரவனேஸ்வரர் ” திருக்கோயில் [வெகு அழகான சிவாலயம், அந்த அம்மனும் அழகோ அழகு தான்].

இந்தக்கோயிலின் சிறப்புகள் பற்றி மேலும் பல விஷயங்கள் அறிய, நம் தெய்வீகப்பதிவர் திருமதி இராஜராஜேஸ்வரி  [மணிராஜ்] அவர்கள் எழுதியுள்ள பதிவுக்குச் சென்று பார்த்து மகிழுங்கள்.

இணைப்பு இதோ:
http://jaghamani.blogspot.com/2011_07_01_archive.html 

[தலைப்பு: ”ஆதரவு அளிக்கும் ஆம்ரவனேஸ்வரர்” ] 

இந்தக்கோயிலுக்கும் வருடம் ஒருமுறையாவது சென்று வழிபட்டு வருவது எங்கள் வழக்கம். ஆடி வெள்ளி + தை வெள்ளி போன்ற நாட்களில், அம்பாள் சந்நதியில் மாவிளக்கு போட்டுவிட்டு, கருப்பர் உள்பட ஐந்து சந்நதிகளில் விசேஷ அர்ச்சனைகள் செய்து விட்டு மெயின் ரோட்டருகே உள்ள பிள்ளையாருக்கு சதிர் தேங்காய் உடைத்து விட்டு வருவோம்.  

எப்போதாவது, கும்பங்கள் பலவும் வைத்து, வேதவித்துக்களை வரவழைத்து,  ஸ்ரீருத்ர மஹன்யாச பாராயணம் செய்யச்சொல்லி, சிறப்பு அபிஷேகங்களும் செய்து விட்டு வருவதும் உண்டு.

இந்தக்கோயிலில் குடிகொண்டுள்ள சிவன் + அம்பாள் + கருப்பர் போன்ற தெய்வங்களின் பிரதிநிதிகள் போலவும், என் வீட்டருகே  கோயில்கள் அமைந்துள்ளன என்பதில் எத்தனை மகிழ்ச்சி.  இதோ இங்கே பாருங்கள்:





திருச்சி வடக்கு ஆண்டார் தெரு மூலையில் 
வடக்கு நோக்கியபடி 
[ராமா கஃபேக்கு மிக அருகில்]
அமைந்துள்ள கருப்பர் கோயில், 
திருச்சி-2 


ஸ்ரீகருப்பண்ண ஸ்வாமி சந்நதி



இதோ மேலும் ஓர் சப்பாணிக்கருப்பர்
திருச்சி-2 
வாணப்பட்டரைப் பகுதியில் 
தெப்பக்குளம் பர்மா பஜாரை ஒட்டி
கிழக்கு நோக்கி கோயில் கொண்டுள்ளார்.



ஸ்ரீ ஆனந்தவல்லி ஸமேத ஸ்ரீ நாகநாதர்
மிகப்பிரபலமான சிவன் கோயில்


ஸ்ரீ நாகநாதர் சந்நதி



ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பாள் சந்நதி


3. சமயபுரம்: [திருச்சி To சென்னை மார்க்கத்தில் திருச்சியிலிருந்து 20  கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அருமையான மிகப் பிரபலமான சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில்.]  

மஹாமாயை, மஹமாயீ, மாரியாத்தா என்றெல்லாம் சொல்லி, அனைத்துத் தரப்பு  மக்களாலும் கொண்டாடப்படும் திவ்யமான க்ஷேத்ரம் இது.  

இந்தக்கோயிலின் சிறப்புகள் பற்றி மேலும் பல விஷயங்கள் அறிய, நம் தெய்வீகப்பதிவர் திருமதி இராஜராஜேஸ்வரி [மணிராஜ்] அவர்கள் எழுதியுள்ள பதிவுக்குச் சென்று பார்த்து மகிழுங்கள்.

இணைப்பு இதோ:
 http://jaghamani.blogspot.com/2011/05/blog-post_05.html

[தலைப்பு:  ”சமயத்தில் காப்பாள் சமயபுரத்தாள்..” ]

இந்தக்கோயிலுக்கும் வருடம் ஒருமுறையாவது சென்று வழிபட்டு வருவது எங்கள் வழக்கம்.  ஒரே ஒரு முறை இந்தக்கோயிலின் தங்கத் தேரினை எங்கள் குடும்பத்தினர் எல்லோரும் சேர்ந்து இழுக்கும் பாக்யம் பெற்றோம்.

இந்தக்கோயிலில் குடிகொண்டுள்ள தெய்வத்தின் பிரதிநிதி போலவும் என் வீட்டருகே ஒரு கோயில் அமைந்துள்ளது என்பதில் தான் எத்தனை மகிழ்ச்சி. இதோ இங்கே பாருங்கள்:




திருச்சி டவுன் வாணப்பட்டரை 
ஸ்ரீ மாரியம்மன் கோயில் கோபுரம்


வாணப்பட்டரை ஸ்ரீ மஹமாயீ அம்பாள் சந்நதி
[அபிஷேக அலங்காரங்களுக்கு முன் எடுக்கப்பட்ட படம்]


^17.07.2018 அன்று எடுத்து இணைக்கப்பட்ட படம்^


என் வீட்டை விட்டு காலாற நடந்து, திருச்சி தாயுமானவர் கோயிலுக்குச் சொந்தமான நந்திகேஸ்வரரையும், மிக அழகான தெப்பக்குளத்தையும், அதன் மேற்குக்கரையில் அமைந்துள்ள வாணப்பட்டரை ஸ்ரீ மாரியம்மனையும் ஒரு சுற்று சுற்றி விட்டு வந்தாலே போதும். இந்திரலோகம் சென்று வந்தது போல மனதுக்கு ஓர் உற்சாகம் பிறந்திடும். 


திருச்சி டவுன்  தெப்பக்குளம்
வடக்குக்கரையிலிருந்து 
இரவினில் எடுத்த படம்


ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் இந்தத்தெப்பக்குளத்தில் நடைபெறும் ஸ்ரீ தாயுமானவர் + ஸ்ரீ மட்டுவர் குழலம்மை தெப்ப உற்சவம், கண்கொள்ளாக் காட்சியாகும்.  




தாயுமானவரை நோக்கி அமர்ந்திருக்கும் 
மஹா நந்திகேஸ்வரர்.

நந்திக்கு மட்டுமே இங்கே ஒரு தனிக்கோயில் 
அமைந்துள்ளதால்  திருச்சி மலைக்கோட்டையைச்சுற்றி 
அமைந்துள்ள தேரோடும் வீதிகளில் ஒன்றான இதற்கு 
”நந்தி கோயில் தெரு” என்றே பெயர் உள்ளது.

பிரதோஷ தினங்களில் சந்தனக்காப்புடன் 
இந்த நந்தியானவர் ஜொலிப்பார்.
அந்த அழகினைக்காண நமக்கு 
கோடி கண்கள் வேண்டும்.


என் வீட்டிலிருந்து கிளம்பி காலாற 10 நிமிடங்கள் நடந்தாலே போதும் மேலே காட்டியுள்ள அனைத்து இடங்களுக்கும் சென்றிடலாம்.

எல்லாவற்றையும் நிறுத்தி நிதானமாக தரிஸித்து விட்டு திரும்ப வீடு வந்து சேர மொத்தமே ஒரு மணி நேரம் மட்டுமே ஆகும்.

என் எல்லாக் குலதெய்வங்களையும் ஒருங்கே கும்பிட்டு வந்தது போல ஓர் மன நிம்மதி ஏற்பட்டு விடும்.

வீடு அமைந்தது ஓர் ராசியென்றால் இவ்வாறு என் மூன்று குல தெய்வங்களின் பிரதிநிதிகள் போலவே எல்லாக் கோயில்களும் என் வீட்டுக்கு மிக அருகிலேயே அமைந்துள்ளது, நினைக்கவே மிகவும் வியப்பளிப்பதாக உள்ளது அல்லவா!

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம், யானை முன்னே நடந்து வர,   அதன் பின்னே பிள்ளையார் தேர், தாயுமானவர் தேர், மட்டுவர் குழலம்மை தேர் என மூன்று தனித்தனித் தேர்களும், மற்றொரு நாள் வாணப்பட்டரை ஸ்ரீ மஹமாயீ தேரும் எங்கள் தெருவழியாகவே செல்லும்.   அவை மிகவும் அற்புதமான காட்சிகளாகும்.

நான் எழுதிய என் முதல் சிறுகதையான “தாயுமானவள்” என்னும் கதையின் முதல் பகுதியில் இந்த வாணப்பட்டரை ஸ்ரீ மாரியம்மன் திருத்தேர் வருகை பற்றிய வர்ணனைகள் இடம் பெற்றிருக்கும்.

இணைப்பு இதோ: http://gopu1949.blogspot.in/2011/12/1-of-3.html






திருச்சி நகரின் மையப்பகுதியான MAIN GUARD GATE இல் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயத்தின் தோற்றம்.  இதையும் என்னால் என் வீட்டு ஜன்னல் கம்பிகள் மூலம் காணமுடிகிறது என்பதும், என் வீட்டுக்கு மேலும் ஓர் சிறப்பாகும்.


இந்த ஆலயத்தின் சிறப்புகள் பற்றி மேலும் பல விஷயங்கள் அறிய, நம் திருச்சி திரு. தி. தமிழ் இள்ங்கோ ஐயா [எனது எண்ணங்கள்] அவர்கள் எழுதியுள்ள பதிவுக்குச் சென்று பார்த்து மகிழுங்கள்.

இணைப்பு இதோ:

http://tthamizhelango.blogspot.com/2012/09/st-lourdes-church_9.html

[தலைப்பு: ”திருச்சி: புனித லூர்து அன்னை ஆலயம் (St. Lourdes Church)”]



  







சூடான 
செய்திகளும் படங்களும்



இன்று 24.02.2013 மாசி மகத் திருநாளை ஒட்டி 
ஸ்ரீ ஆனந்தவல்லி + ஸ்ரீ நாகநாதர்
கோயில் திருத்தேர்கள் 
சற்று நேரம் முன்பு 
பவனி வந்த காட்சிகள்
என் வீட்டு ஜன்னல் கம்பிகள் மூலம் 
படமாக்கித் தரப்பட்டுள்ளன. 



என்றும் அன்புடன் தங்கள்,
வை. கோபாலகிருஷ்ணன்


சனி, 16 பிப்ரவரி, 2013

என் வீட்டு ஜன்னல் கம்பி ஒவ்வொன்றாய்க் கேட்டுப்பார் !





என் வீட்டு ஜன்னல் கம்பி 
ஒவ்வொன்றாய்க் 
கேட்டுப்பார் !

அனுபவம்
By
வை. கோபாலகிருஷ்ணன்


[ பகுதி 3 of 3 ]

-oOo-




இந்த என் வீட்டு ஜன்னலுக்கு பக்கத்திலேயே தான் என்னுடைய DOUBLE COT கட்டிலில், என் படுக்கை கும்முன்னு மெத்தையோட இருக்கும். எனக்கு படுத்துக்கொள்ளும் போது குறைந்தது ஒரு ஏழு தலையணியாவது வேணும். அதுவும் ஒவ்வொன்றும் கொஞ்சம் கிண்ணுன்னு மோதமுழங்க இருக்கணும். தொஞ்ச பஜ்ஜி மாதிரி இருக்கக்கூடாது. 

அதாவது தலைக்கு மூன்று, காலுக்கு இரண்டு, இரண்டு கால் தொடைகளுக்கும் இடையிலே இரண்டு தலையணி வேண்டும். 

என் கட்டிலிலே நானும் என் இன்றைய அன்புக்காதலியான லாப்டாப்பும் மட்டும் தான் இருப்போம். எப்போதுமே நான் தலையணிகளில் சாய்ந்து படுத்துக்கொண்டே தான்,[ஸ்ரீரங்கம் பள்ளிகொண்ட பெருமாள் போலத்தான்] லாப்டாப்பில் படிப்பேன், அடிப்பேன், ஆபரேட் செய்வேன்.  


ஸ்ரீரங்கம் பள்ளிகொண்ட பெருமாள்

கட்டிலின் இருபக்கங்களிலும் இரண்டு  மிகப்பெரிய பைகள் தொங்கவிடப்பட்டிருக்கும். 

அவற்றில் நிறைய ‘மிக்ஸர், காராபூந்தி, ஓமப்பொடி, காராச்சேவ், வறுத்த முந்திரி, பச்சை முந்திரி, பாதாம் பருப்பு, தூள்பக்கோடா, சிப்ஸ், முறுக்கு, தட்டை, பாப்கார்ன், மஸாலா கடலை, கடலை மிட்டாய், கடலை உருண்டைகள், தித்திப்பு தேன்குழலான மனோரக்கா உருண்டைகள்,  தேங்காய் பர்பி,  நிலக்கடலை, பொட்டுக்கடலை, அச்சு வெல்லம், போன்ற பலவிதமான பக்க வாத்யங்களான கரமுராக்கள், சின்னச்சின்ன 50 கிராம் / 100 கிராம் பாக்கெட்களாக வாங்கி ஸ்டாக்கில் வைத்திருப்பேன்.





இவையெல்லாம் நான் மட்டும் தின்பதற்காக, எனக்காக மட்டும் அல்ல. என்னை நாடி வருவோருக்கு கொடுப்பதற்காகவும் தான்.  

இது எல்லாமே செளகர்யமாகவே இருந்தாலும், “பஞ்சணையில் காற்று வரும் தூக்கம் வராது” என்ற பாடல் போல நான் பெரும்பாலும் இரவெல்லாம்  சரியாகத் தூங்குவதே இல்லை. 

லாப்டாப்புக்கு நெட் கனெக்‌ஷன் சரியாகக் கிடைக்காமல் போனால் தான், நானும் தூங்கப்போகலாமா என யோசிப்பது வழக்கம். 

லாப்டாப்புக்கு நெட் கனெக்‌ஷன் இருக்கும் பக்ஷத்தில், பெரும்பாலும் விடியற்காலம் தான் நான் தூங்கவே ஆரம்பிக்கிறேன். அதனால் நான் எழுந்திருக்கவும் மிகவும் தாமதம் ஆகி விடுகிறது.  

எல்லாமே இந்த வலைப்பதிவுக்கு வந்த 02.01.2011 க்குப் பிறகு தான், இப்படியெல்லாம் நடக்கிறது. 

அதற்கு முன்பெல்லாம் நான் இப்படி இருந்ததே இல்லை. ஏதாவது புஸ்தகம் படிச்சுக்கிட்டே இருப்பேன். அப்படியே ஒரு அரை மணி நேரத்தில் தூங்க ஆரம்பித்து விடுவேன்.

நான் எப்போது தூங்கி கண் விழித்தாலும், முதலில் ஜன்னல் கதவுகளில் உள்ள [ கொசுக்கள் உள்ளே நுழையாமல் இருப்பதற்காகப் போடப்பட்டுள்ள] வலைக்கதவுகளைத் திறப்பேன். பிறகு ஜன்னல் கதவுகளையும் விரியத் திறப்பேன். அழகாக உச்சிப்பிள்ளையாரும் தாயுமானவரும் குடிகொண்டுள்ள மலையைப் தரிஸிப்பேன். வணங்குவேன்.
            
                                                                                                                  

என் வீட்டுக்குள் இருந்தவாறே  ஜன்னல் கம்பிகள் 
வழியாக எடுக்கப்பட்ட படங்கள் இவை என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சி மலைக்கோட்டையை, அநேகமாக மலையைச்சுற்றிக் குடியிருக்கும் எல்லோருமே மிகச்சுலபமாகப் பார்க்க முடியும் தான். 

என் வீட்டு ஜன்னல்களுக்கு உள்ள 
தனிச்சிறப்பு இதோ கீழே வருகிறது.




என் வீட்டில், என் படுக்கையில் அமர்ந்தவாறே, என் வீட்டு ஜன்னல் கம்பிகள் வழியாக,  “ஸ்ரீ ஆனந்தவல்லி ஸமேத ஸ்ரீ நாகநாத ஸ்வாமி” கோயிலின் இரண்டு கோபுரத்தையும் ஒருங்கே தரிஸிக்க முடிகிறது.  

கோபுர தரிஸம் கோடிப்புண்ணியம் அல்லவா!  இரண்டு கோபுர தரிஸனம் என்றால் புண்ணியமும் இரண்டு கோடியல்லவா!! அதுவும் தினமும் இரண்டு கோடிகள் அல்லவா!!!

ஒன்று கிழக்கு பார்த்த கோபுரம், மற்றொன்று மேற்கு பார்த்த கோபுரம். இரண்டு கோபுரத்தின் சைடு போர்ஷன்களும் அழகாக என் வீட்டு ஒரே ஜன்னல் மூலம் காட்சியளிக்கும். அத்தோடு உச்சிப்பிள்ளையார் + தாயுமானவர் மலைகளும்.  வேறென்னங்க வேணும் என் மகிழ்ச்சிக்கு. ;))))) 

இந்த ஸ்ரீ ஆனந்தவல்லி ஸமேத ஸ்ரீ நாகநாதர் கோயில் ஓரளவு நல்ல பெரிய கோயில். தினமும் நான்கு கால பூஜைகளும் முறைப்படி நடைபெற்று வருகின்றன.   

கோயில் மணி அடித்தாலும், மேளம் + நாயனம் வாசித்தாலும், என் வீட்டினில் அந்த இன்னிசை மென்மையாகக் கேட்கும். வீட்டிலிருந்து ஐந்தே நிமிடத்தில் இந்தக் கோயிலை அடைந்து விட முடியும்.  

பிரதோஷம் தோறும் கோயிலுக்குள்ளேயே ரிஷப வாகனத்தில் ஸ்வாமி புறப்பாடு அமர்க்களமாக நடைபெறும்.  அன்னாபிஷேகம் போன்ற அனைத்து விசேஷங்களும் வெகு சிறப்பாக நடைபெறும். நவராத்திரி 10-12 நாட்களும் மிக அழகான அம்பாள் அலங்காரங்களும், வீதிகளில் அம்பாள் புறப்பாடும் வெகு ஜோராக நடைபெறும்.  விஜயதஸமியன்று ஸ்வாமி அம்பு போடுதல் நிகழ்ச்சியும் நடைபெறும். 

பிள்ளையார், முருகன், ஸ்வாமி, அம்பாள், சந்திரன், சூரியன், கால பைரவர், தக்ஷிணாமூர்த்தி, 63 நாயன்மார்கள், கஜலக்ஷ்மி,  இடும்பன், ஸ்ரீ துர்க்கை, சண்டிகேஸ்வரர், நவக்கிரஹங்கள், ஸ்ரீ ஹனுமான் போன்ற அனைத்துக் கடவுளுக்கும் தனித்தனி சந்நதிகள் இந்த “ஸ்ரீ ஆனந்தவல்லி ஸமேத ஸ்ரீ நாகநாதர் கோயிலில் உண்டு.  

பிரஸாதங்கள் தயார் செய்யுமிடமான மடப்பள்ளியும் உண்டு. தினமும் மதியம் சுமார் 50 ஏழை ஜனங்களுக்கு  கோயிலுக்குள்ளேயே ஓர் பெரிய இடத்தில், அவர்களை டேபிள் சேர் போட்டு அமர வைத்து , அன்னதானமும் செய்யப்பட்டு வருகிறது. அன்னதானத்திற்கென தனியே ஒரு உண்டியலும் வைத்து நிர்வகித்து வருகிறார்கள்.

ஸ்வாமி புறப்பாடுகள் நடத்த, புத்தம் புதியதாக பெயிண்ட் செய்யப்பட்ட மிகப்பெரிய வாஹனங்களும் இந்தக்கோயிலில் உள்ளன. மிகச்சிறப்பாக பராமரிக்கப்படும் மிகவும் சுத்தமான அதுவும் HEART OF THE CITY யில் அமைந்துள்ள கோயிலாகும் இது.

மேலே சைடு போர்ஷனில் மட்டும் படத்தில் தெரியும்  அந்த இரண்டு கோபுரங்களும், ஸ்வாமி அம்பாள் கருவறை விமானங்களின் உச்சிப்பகுதியும் என் வீட்டுக்குள் இருந்து ஜன்னல் கம்பிகளின் வழியே எடுக்கப்பட்ட புகைப்படம். அந்த இரண்டு கோபுரங்களின் முழுத் தோற்றத்தினையும் இதோ இங்கே பாருங்கோ:






கிழக்கு நோக்கிய 
கோபுரத்தின் முன்பகுதி



மேற்கு நோக்கிய 
கோபுரத்தின் முன்பகுதி


ஸ்ரீ நாகநாதர் [சிவன்] 




ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பாள்

இந்த ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பாளுடன் எனக்கு நீண்டகாலமாக பரிச்சயமும், ஆத்மார்த்த பிரியமும், அளவுக்கு அதிகமான அன்பும்,  பாசமும், பக்தியும் உண்டு. 

இந்த அம்பாளுடன் நான் மிகவும் உரிமையுடன் சண்டை போட்டதும் உண்டு. மிகுந்த கோபப்பட்டதும் உண்டு. அவற்றில் ஒரு சம்பவத்தைக்கூட என் பதிவினில் எழுதியுள்ளேன்.

இணைப்பு இதோ: 

http://gopu1949.blogspot.in/2012/03/5.html




தைப்பூசத்தன்று, திருச்சியில் உள்ள அனைத்துக்கோயில் ஸ்வாமி, அம்பாள் விக்ரஹங்களும், காவிரி ஆற்றில் தீர்த்தவாரி முடித்து, வெகு சிறப்பான அலங்காரங்களுடன் எங்கள் தெருவழியாகவே ஆரம்பித்து, விடியவிடிய இன்னிசைக் கச்சேரிகளுடன் ஊர்வலமாக  திருச்சி மலைக்கோட்டையைச்சுற்றிச் செல்வது வழக்கம். 

சூர சம்ஹார நிகழ்ச்சியன்று, ஸ்ரீ முருகப்பெருமான் செம்மறி ஆட்டுக்கடா வாகனத்தில் அமர்ந்தவாறு, சூரனின் தலையை வாங்கும் நிகழ்ச்சி  எங்கள் கட்டட வாசலில் மட்டுமே வெகு சிறப்பாக நடைபெறும் ஒன்றாகும்.  

திருச்சி பக்கம் அடிக்கடி வருபவர்கள் சுத்தத்திற்கும் சுகாதாரத்திற்கும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ள “ஸ்ரீ நாகநாதா டீ ஸ்டால்” என்ற கடையினை நகரத்தின் ப்ல இடங்களில் ஒரே மாதிரியான அமைப்புடன் கண்டிருக்கலாம். இந்தக்கோயிலின் ஸ்வாமி பெயரில் தான், அந்தக்கடைகளை ஒரே முதலாளி தான், பல இடங்களில் நடத்தி வருகிறார். அவர் வசிக்கும் பங்களாவும் எங்கள் வடக்கு ஆண்டார் தெருவிலேயே “ஸ்ரீ நாகநாதர் இல்லம்” என்ற பெயரில் அமைந்துள்ளது.

என் குடியிருப்புப்பகுதியின் மொட்டை மாடிக்குச் சென்றால் போதும், தெற்கு நோக்கினால் மிகவும் அருகிலேயே மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோயிலையும், ஸ்ரீ மாத்ருபூதேஸ்வரரான தாயுமானவர் கருவறையின் தங்கக் கலஸ கோபுரத்தையும் நான் மிகச்சுலபமாக தரிஸிக்கலாம்.

மொட்டைமாடியின் வடக்குப்பக்க ஓரத்திற்குச் சென்றால் காவிரி நதியையும், ஸ்ரீரங்கம் இராஜ கோபுரத்தையும் என்னால் காணமுடிகிறது. 

இடையில் இப்போது தோன்றியுள்ள  பலமாடிக் கட்டடங்களாலும், என் வீட்டிலிருந்து ஸ்ரீரங்கம் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் தாண்டியுள்ளதாலும், இராஜகோபுரத்தின் உச்சியை மட்டுமே,என் வீடு அமைந்துள்ள கட்டடத்தின் மொட்டைமாடியிலிருந்து எடுத்த  புகைப்படத்தில் கொண்டுவர முடிந்துள்ளது. அந்தப்படம் இதோ இங்கே:



     
ஸ்ரீரங்கம் இராஜகோபுரம் அருகே 
நேரில் சென்றால் காட்சியளிக்கும் தோற்றம்


சிலர் தங்கள் வீட்டை அழகு படுத்த வேண்டி, பெரும் பணம் செலவுசெய்து INTERIOR DECORATIONS என்று செய்துகொள்கிறார்கள்.

மலைகள், நதிகள், மரங்கள், பசுஞ்சோலைகள் போன்ற இயற்கைச்சூழலை செயற்கையாக படங்கள் மூலமும், துணியினால் ஆன திரைகள் மூலமும் வீட்டுக்குள் கொண்டு வந்து சுவற்றில் ஒட்டி மகிழ்கிறார்கள். 

எனக்கு அது போலெல்லாம் இயற்கையைச் செயற்கையாக வீட்டிற்குள் கொண்டு வரவேண்டிய அவசியம் இல்லை என்பதை என் வீட்டு ஜன்னல் கம்பிகளைக் கேட்டாலே தெரியும். 

அந்த ஜன்னல் கம்பிகளின் மூலமே தான் நான் தினமும், இயற்கை அழகான திருச்சி மலைக்கோட்டையையும், அதன் மேல் உள்ள உச்சிப்பிள்ளையாரையும், அருகே உள்ள ஸ்ரீ தாயுமானவர் கோயிலின் தங்கக்கலஸத்தையும், ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பாள் ஸமேத ஸ்ரீ நாகநாதர் கோயிலின் இரண்டு கோபுரங்களையும், ஸ்வாமி + அம்பாளின்  மேற்கூரை விமானங்களையும், வீட்டில் என் கட்டிலில் அமர்ந்தவாறே ஒரே ஜன்னல் மூலம், கண்குளிரக்காணும் பாக்யம் பெற்றவனாக இருக்கிறேன் என்பது அந்த என் வீட்டு ஜன்னல் கம்பிகளுக்கு மட்டுமே தெரிந்த கதை.  

இவையெல்லாம் எனக்கு சாதகமாக இன்று அமைந்துள்ளது எல்லாமே, எல்லாம் வல்ல அந்த எங்கள் ஊர் உச்சிப்பிள்ளையார் அவர்களின் கருணை மட்டுமே என சொல்லிக்கொண்டு என்னுடைய இந்த கட்டுரையை முடித்துக்கொள்கிறேன்.

இதையெல்லாம் ஒட்டுமொத்தமாக நேரில் பார்த்தும் கேட்டும் பரவஸம் ஆகிப்போய்விட்ட  ”மூன்றாம் சுழி” வலைத்தளத்தின் பதிவர் நம் அன்புக்குரிய திரு. அப்பாதுரை சார் அவர்கள், என் வீட்டு ஜன்னல் ஓரத்தில், தான் தங்க ஓர் இடம் கேட்டதில் வியப்பு ஏதும் இல்லை தானே ! 



மீண்டும் அடுத்த ஞாயிறு [24.02.2013] அன்று 
என் மற்றொரு பதிவின் மூலம் சந்திப்போம்

என்றும் அன்புடன் தங்கள்,
வை. கோபாலகிருஷ்ணன்

-oOo- -oOo- -oOo-

இதே போன்ற வீடு கட்டிய அல்லது வீடு வாங்கிய 
தன் அனுபவத்தை சுவைபட எடுத்துக்கூற 
”மணம் (மனம்) வீசும் ” 
என்ற வலைத்தளப்பதிவர் திருமதி ஜெயந்தி ரமணி 
அவர்களை தொடர்பதிவிட நான் அழைக்கின்றேன்.

வாருங்கள் என் அன்புக்குரிய
http://manammanamviisum.blogspot.in
திருமதி ஜெயந்தி ரமணி அவர்களே!
தொடருங்கள்!!


[வேறு யாரேனும் பதிவர்கள் தங்களின் 
வீடு கட்டிய அல்லது வீடு வாங்கிய அனுபவத்தை 
எழுத விரும்பினாலும், இதையே 
 என் அழைப்பாக ஏற்றுக்கொண்டு  
எழுதினால் மிக்க மகிழ்ச்சிய்டைவேன்.]

அன்புடன் 
கோபு