என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

திங்கள், 30 டிசம்பர், 2013

103 ] பஞ்சாக்ஷரம்

2
ஸ்ரீராமஜயம்


[ 29.12.2013 ஞாயிறு 
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின்
20வது ஆராதனை. ]


 [




பஞ்சாக்ஷரம்:

நம்மிடத்தில் ஒரு விலையுயர்ந்த ரத்னம் இருந்தால் அதை காபந்தாக இரும்பு பெட்டியில் வைத்துப் பாதுகாப்போம்.

அதேபோல வேதத்தில் ஜீவரத்னமான சிவநாமத்தை ரொம்பவும் ஜாக்ரதைப்படுத்தி வைத்திருக்கிறது.

நாலு வேதங்களில் இரண்டாவது ’யஜுஸ்’. அதர்வண வேதத்தைச் சேர்க்காமல் ரிக், யஜுஸ், ஸாம வேதங்களுக்கு நடுவில் இருக்கிறது யஜுஸ்.

இந்த யஜுர் வேதம், சுக்ல யஜுர், கிருஷ்ண யஜுர் என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டாலும், ரிக், சுக்ல யஜுஸ், கிருஷ்ண யஜுஸ், ஸாமம், அதர்வனம் என்கிற ஐந்து பகுதிகளின் மத்தியில் வருவது ‘கிருஷ்ண யஜுஸ்’

இந்த கிருஷ்ண யஜுர் வேதத்தின் மத்ய பாகம் என்பது, அதன் நாலாவது காண்டம். அந்த காண்டத்தின் மத்தியில் வருவது ஐந்தாம் ப்ரச்னம். இங்கே தான் வருகிறது ஸ்ரீருத்ரம். இந்த ருத்ரத்தின் நடுநாயகமாக வருவதே பஞ்சாக்ஷரம், அதன் நடுநாயகமாக வருவதே த்வய அக்ஷரமான ‘சிவ’.

உடம்பை மெய் என்கிறோம். அதிலே இருக்கிற பரமாத்மாவை மெய்பொருள் என்கிறர்கள். ஸத்வஸ்து என்று வேதாந்தத்தில் சொல்வதை, திருவள்ளுவர் மெய்ப்பொருள் என்று கூறுகிறார். 

வேதங்களையெல்லாம் ஒரு சரீரமாக மெய்யாக வைத்துக்கொண்டால், அதில் உயிராக மெய்ப்பொருளாக இருப்பது, சிவநாமா. உயிர் என்னும் பரமாத்மா இருக்கும் ஸ்தானம் ஹ்ருதயம் என்றால், அந்த ஹ்ருதயம் சரீர மத்தியில்தான் இருக்கிறது. இதைத்தான் ஞானசம்மந்தர் பின்வருமாறு சொல்கிறார்:

”வேத நான்கினும் மெய்ப்பொருளாவது 
நாத[ன்] நாமம் நமசிவாயவே   ”

அவ்வைப்பாட்டி செய்த ‘நல்வழி’ என்னும் நூலில், ’சிவாய நம என்று சிந்தித்திருப்போர்க்[கு]  அவாயம் [அபாயம்] ஒரு நாளும் இல்லை’ என்று சொல்லியிருக்கிறார். 

சிவநாமத்தின் மஹிமையை அம்பாள் சொல்வதாக ஸ்ரீமத் பாகவதத்தில் வருகிறது. தாக்ஷாயிணி ப்ரபாவம் பற்றிச் சொல்கையில், தாக்ஷாயிணி தான் பிராணத்தியாகம் செய்யும் சந்தவேசத்தில் ‘த்வயக்ஷரம் நாம கிரா’ என்று, அதாவது பஞ்சாக்ஷரமாக எல்லாம் இல்லாது, ‘சிவ’ என்ற இரு எழுத்துக்களை உச்சரித்தாலேயே சர்வ பாபங்களையும் போக்கிவிடும், என்கிறாள்.

‘சிவ சிவ என்கிலர் தீவினையாளர்’ என்று திருமூலரும் திருமந்திரத்தில் சொல்வதும் இதைத்தான்.

oooooOooooo

[ 1 ]

மிட்னாப்பூர் சிறையிலிருந்த 
சுதந்திரப் போராட்டத் 
தியாகிகளுக்கு அருளியது

1935 அக்டோபர் 27 ஆம் தேதி அமாவசை, கல்கத்தாவுக்கு தென்மேற்கில் சுமார் அறுபது மைல் தூரத்தில் உள்ள மிட்னாபூருக்கு விஜயமானார்கள். 

அப்போது அவ்வூரில் பயங்கர இயக்கங்கள் தோன்றி வந்தன. 

மிட்னாபூர் மக்கள் எவ்வகையிலும் தங்கள் ஊருக்கும் ஸ்வாமிகளை அழைத்து வர வேண்டும் என்று தீர்மானித்தார்கள். 

ஒரு வரவேற்பு கமிட்டி நியமிக்கப்பட்டது. 


அப்போது அவ்வூரில் கடும் ஊரடங்கு உத்தரவு. இரவு ஒன்பது மணிக்கு மேல் வீதிகளில் எவரும் நடமாடக்கூடாது என்பது சர்க்கார் உத்தரவு.

ஸ்வாமிகள் அவ்வூர் சென்று மக்களை ஆசீர்வதிக்க, அழைப்பை ஏற்றுக்கொண்டார்கள். 

ஸ்வாமிகள் அவ்வூருக்கு விஜயம் செய்த அன்றைய தினம் மட்டும் ஊரடங்கு சட்டத்தின் சில ஷரத்துகளை ஜில்லா அதிகாரிகள் தளர்த்தி மக்களை மகிழ்விக்க செய்தனர். 


பல நாட்களாய் கிடைக்காத சுதந்திரம், ஒரு சுதந்திர திருநாளாகவே கொண்டாடினர், அவ்வூர் மக்கள்.

ஊரெங்கும் ஒரே தோரணம், பந்தல் மயம், புஷ்பாலங்காரம்.

1935 அக்டோபர் 27 காலை, ஸ்வாமிகள் அவ்வூர் விஜயம். 

முக்கிய வீதிகளில் பட்டண பிரவேஸ. 


பன்னிரண்டு இடங்களில் கோலாஹலமான வரவேற்பு. 


சமஸ்கிருதம் மற்றும் ஹிந்தியில் பதிலளித்து ஸ்வாமிகள் தர்மம், பக்தி பற்றி உபதேசம் செய்தார்கள். அதன் பின், பூஜை, தீர்த்த பிரஸாத விநியோகம்.

அவ்வூரிலுள்ள சிறைக்கும் செய்தி பரவியது. நாட்டின் சுதந்திரத்திற்கு தங்கள் வாழ்வையே அர்ப்பணம் செய்த தேச பக்தர்கள் பலர் அச்சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். 

அப்போது. கல்லூரி மாணவர்கள், பட்டதாரிகள், வழக்குரைஞர்கள், மருத்துவர்கள், இப்படி பற்பல தொழில் புரிவோர். அவர்கள் அனைவரும் தேச விடுதலைக்கு தங்களை ஈடுபடுத்திக்கொண்டவர்கள். அவர்களில் சிலருக்கு ஸ்வாமிகளை தரிஸிக்க வேண்டும் என்னும் பேரவா.

சிறை அதிகாரி ஓர் ஆங்கிலேயர். அவரிடம் தங்கள் எண்ணத்தை விண்ணப்பித்தனர். அவருக்கும் தெரிந்திருந்தது, மதத்தலைவர் ஒருவர் அவ்வூர் விஜயம் செய்திருந்தது. 

அக்கைதிகளின் மத உணர்ச்சியை மதித்து சில நிபந்தனைகள் பேரில், அவர்களை அவ்வதிகாரி வெளியில் சென்று வர அனுமதித்தார். 

கூட்டு கிளிகள் வெளியேறியவுடன் பறந்து விடாமால் இருக்க, அவர்களை கண்காணிக்க கையில் துப்பாக்கி ஏந்திய காவல் வீரர்கள் அவர்களை தொடர்ந்து வந்தனர். 

மாலை ஆறு மணிக்குள் சிறைக்குள் திரும்ப வேண்டும் என்பது ஒரு நிபந்தனை. எல்லா நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டு இளைஞர்களான சில காவல் கைதிகள் ஸ்வாமிகள் முகாம் வந்து சேர்ந்தனர்.

மாலை மணி ஐந்தரை, சிறிது போதுக்கு முன் தான், ஸ்வாமிகள் ஒரு தனிமையான இடத்துக்கு நித்திய பூஜை முடிந்து சற்றே ஓய்வெடுக்க சென்றிந்தார்கள். 

அச்சமயம் ஸ்வாமிகளுக்கு சிரமம் கொடுக்க மடத்தின் அதிகாரிகள் விரும்பவில்லை. ஆயினும் எதிர்பார்த்திருந்தனர். 


அதுவரை காத்திருக்கும் படி, கைதிகளிடம் காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆறுமணிக்குள் சிறை திரும்ப வேண்டும், இல்லையெனில் பிரத்யேக தண்டனை கிடைக்கும் என்று கூறி, மிகுந்த ஏமாற்றத்துடன் சிறை நோக்கி திரும்பினர்.

சில நிமிடங்களில் ஸ்வாமிகள் தாமாகவே, வெளியில் வந்தார். மடத்தின் அதிகாரி, சற்று முன் கைதிகள் தரிஸசனத்துக்கு வந்த விஷயமும், சற்று முன் தான் திரும்பினர் என்றும், சிறிது தூரம் தான் சென்றிருப்பார்கள் என்றும் தெரிவித்தார். 

ஸ்வாமிகள் உடனே அவர்களை திரும்ப அழைத்து வரும்படி ஆள் அனுப்பினார்.

அவர்கள் வந்தவுடன், ஸ்வாமிகளை வணங்கி, நாடு சுதந்திரம் அடைந்து மக்கள் யாவரும் துன்பம் நீங்கியவர்களாகி இன்பமுற வாழ வேண்டும் என ஸ்வாமிகள் அனுக்கிரகம் புரிய வேண்டும் எனவும் அதுவே அவர்கள் கோரிக்கை என்று கூறி ஸ்வாமிகளை வணங்கி விரைவில் சிறை திரும்பினர், ஸ்வாமிகளை சந்தித்து ஆசி பெற்ற மகிழ்ச்சியுடன்.

ஸ்வாமிகள் அந்த கைதிகளின் தேச பக்தியை கண்டு மிகவும் மகிழ்ச்சியுற்றார்கள்.

இப்போது சொல்லுங்கள் பக்த அன்பர்களே ...... 


நமஸ்காரங்கள் யாருக்கெல்லாம்?

ஐயனுக்கு, தன்னலம் கருதா அந்த தியாகிகளுக்கு, அந்த ஆங்கிலேயே அதிகாரிக்கு, அவ்வூர் மக்களுக்கு, இன்றும் இச்சரிதம் பரப்பி கம்பீரமாய் நிற்கும் அந்த சிறைக்கு… இல்லையா?


oooooOooooo

[ 2 ]


நீ கைங்கர்யம் பண்றது 
அந்த பரமேஸ்வரனுக்கே தான்

இன்னொரு சம்பவம். சில நாட்களுக்கு முன்னர் ஸ்ரீ கணேச சர்மா அவர்கள் சங்கரா தொலைகாட்சியில் அருளிய உரை…

மிட்னாப்பூர் பெரியவா

மிட்னாப்பூரில் ஒரு துறவி பெரியவாளை தரிஸிசித்தார். 

”மறு தரிஸனம் எப்போது?” என்று அந்த துறவி உள்ளம் உருகி கேட்ட பொழுது, ”தக்ஷண தேசத்தில் இன்னும் பதினைந்து வருஷங்கள் கழித்து வந்து என்னைப் பார் ” என்றது அந்த பரம்பொருள்.

அந்த துறவியும் ஒவ்வொரு நாளையும் எண்ணிக் கொண்டே இருந்தார்…எப்பொழுது பதினைந்து வருஷங்கள் முடியும் என்று…
அந்த நாளும் வந்தது…

விழுப்புரம் அருகில், முகாம். அன்று ஐயன் வடவாம்பலம் சென்றிருந்தார். 

இந்த துறவி வந்து ஐயனைக் காணாது தாம் தூம் என்று குதித்து, ”என்னை வரச் சொல்லிவிட்டு இங்கே இல்லை என்றால் எப்படி…நான் போகிறேன்…”  என்று குதி குதி என்று குதித்தார்.

ஐயனுக்கு பணிவிடை செய்யும் அன்பர் ஒருவர், ”நீங்கள் துறவி, சற்று காத்திருங்கள். இதோ, இப்போது வந்து விடுவார். நீங்கள் கோபம் காட்டலாமா என்று கூறி இருக்கிறார். நீங்கள் என்ன கொக்கா?” என்றும் விசனப் பட்டிருக்கிறார்.

இதற்கு இடையே, ஐயன் வெகு வேகமாக வேகு வேகு என்று வயல் வரப்புகள், கரும்புக் காடுகள் வழியாக மிக வேகமாக நடந்து வந்து முகாம் அடைந்தார்.

அந்த துறவிக்கு அத்தனை சந்தோஷம். எங்கேயோ, எப்போதோ, கொடுத்த வாக்கை காப்பாற்ற இன்று இத்தனை சிரமப்பட்டுக் கொண்டு வந்து தனக்கு தரிசனம் கொடுக்கும் மஹா பிரபுவிடம் தர்சனம் பெற்று திரும்பப் போகிறார்.

எந்த அடியார் சற்று முன் இந்த மிட்னாப்பூர் துறவியிடம் கோபம் கொண்டாரோ, அவரையே அழைத்து, ஐயன், ”நீ இவருக்கு வழியிலே ஏதாவது வயித்துக்கு வாங்கிக் கொடுத்து, சேந்தனூர் ரயிலடியிலே வண்டி ஏத்தி விட்டுடு” என்று கூறி அனுப்பி வைத்தார்.

வழியில் அந்த மிட்னாப்பூர் துறவி கேட்டார், நம் அடியாரிடம்… 


”நீ யாருக்கு கைங்கர்யம் பண்ணிண்டு இருக்கே தெரியுமா? மத்தவாளுக்கு எல்லாம் அவ்வளவு சுலபமா கிடைக்காத பாக்கியம். நீ பக்கத்தில் இருந்து கைங்கர்யம் பண்றே. நான் பதினைந்து வருஷம் கழிச்சு இந்த தர்சனதுக்கு ஏங்கி இன்னிக்கு கிடைச்சுது.

நீ கைங்கர்யம் பண்றது அந்த பரமேஸ்வரனுக்கே தான்.”

[Thanks to Mr. MAHESH - Sage of Kanchi 27.10.2013]


oooooOooooo

[ 3 ]



மஹாபெரியவாளின் தபஸ் மஹிமை



எப்போ யாத்ரா போனாலும் பெரியவா வழியிலே இருக்கிற எதாவது சின்ன கிராமத்திலே தான் தங்குவா. 



குண்டக்கல் வழி போகும்போது ஒருதடவை ’ஹகரி’ என்கிற கிராமத்திலே தங்கினா. அந்த இடதிலேருந்து ஒரு 10 கிலோ மீட்டர் தூரத்திலே தான் ஒரு சிவன் கோவில் இருந்தது. 

கோவிலை ஒட்டி ஒரு பெரிய ஆறு வறண்டு போய் இருந்தது. கரையிலே ஒரு பிரம்மாண்ட ஆல மரம். ரம்யமா இருந்த அந்த இடம் பெரியவாளுக்கு பிடிச்சுது. இங்கேயே தங்கலாம் என்று முடிவு எடுத்தா. 

அந்த ஊர் ஒரு பொட்டல் காடு. அங்கே ஆத்திலே தண்ணி இருந்த காலத்திலே கரும்பு விளைந்தது. அருகிலேயே ஒரு சர்க்கரை ஆலை இருந்தது. அந்தக் கம்பனி இழுத்து பறிச்சுண்டு இருந்தது. 

அதன் ஜெனரல் மேனேஜர் நம்மூர் ஆள். தஞ்சாவூர்காரர். பெரியவா வந்திருக்கா என்று தெரிந்ததும் மனிஷன் ஓடி வந்து நமஸ்காரம் பண்ணினார்.

“நான் வியாசபூஜா பண்ணலாம்னு நினைக்கிறன். கொஞ்ச நாள் இங்கே தங்கலாமா? ” என்று தெய்வம் அவரை கேட்டது.

ஜெனரல் மேனேஜர் ஆடி போயிட்டார். ” அபசாரம். இது நாங்கள் செஞ்ச புண்யம். கட்டளை இடுங்கோ. என்ன செய்யணுமோ ஏற்பாடு பண்றோம்” 

உடனே மூங்கில் கழிகள் தென்னை ஓலை எல்லாம் லாரி லாரியா வந்து இறங்கித்து. ஒரு ஆயிரம் பேர் கொள்ள பெரிய கொட்டகை தயார் ஆயிற்று. 

வேலை நடக்கும்போது இரவெல்லாம் பெரியவா தூங்கவே இல்லை. சிவன் கோயில் அழகும் ரம்யமான சூழ்நிலையும் மனதை கொள்ளை கொண்டாலும் வானம் பொய்த்து வருஷ கணக்கா பூமியும் ஆறும் வறண்டு கிடக்கிறதே என்று பெரியவாளின் மனம் உடைந்து போயிருந்தது.

ராத்திரி பூரா தூங்காம இருந்து மறுநாள் பெரியவா யாரோடும் பேசவில்லை. அவர் பார்வை பூரா அந்த வறண்ட ஆற்றின் மீது தான் இருந்தது. சாப்பிடவும் இல்லை. 

சாயந்திரம் திடீர் என்று எழுந்து அந்த வறண்ட ஆற்றின் நடுவே சுடும் மண்ணில் நின்றுகொண்டார். என்ன நினைத்தாரோ. ஆற்றின் கரையில் ஒரு கிலோ மீட்டர் தூரம் மண்ணில் நடந்துவிட்டு திரும்பினார்.

அருகில் இருந்தவர்களிடம் ” நான் சந்தியா ஜபம் பண்ணபோறேன். யாரவது பார்க்க வந்தா நாளைக்கு வர சொல்லுங்கோ” என்று சொல்லிவிட்டு ஜபம் தொடங்கினார். இருட்டி விட்டதால் எங்கிருந்தோ பெட்ரோமாக்ஸ் ஹரிக்கன் விளக்கெல்லாம் கொண்டு வைத்தார்கள்.

அன்று இரவு சுமார் 10 மணிக்கு சில்லென்று காற்று வீசியது. தொடர்ந்து ஒரு சில மழை துளிகள் விழுந்தது. பிறகு மெதுவாக மழை ஆரம்பித்தது. அதுவே பெரு மழையாக மாறியது.

நான் ஓடிசென்று ஒரு சைக்கிள் ரிக்க்ஷாவை தள்ளிக்கொண்டு பெரியவா கிட்ட போய் நிறுத்தி அதில் அமரச்செய்தேன். ஒரு குடை கொண்டுவந்து பெரியவாளுக்கு தலைக்கு மேல் பிடித்துகொண்டு நின்றேன். விடிகாலை 1 . 30 வரை விடாது பெய்தது. 

ஆற்றில் நீர் ஓடியது. மறுநாள் காட்டு தீ போல செய்தி பரவி ஊர் மக்கள் அனைவரும் பெரியவாளுடைய மந்திர சக்தியை வியந்து அலைமோதினர். பெரியவாளும் பேசாமல் சந்தோஷத்தோடு வியாச பூஜா பண்ணி முடித்தார்.

அந்த வறண்ட ஊருக்கு மழைக்காகவே பெரியவா அங்கு தங்க முடிவெடுத்து வியாச பூஜா ஜபம் பண்ணி தன் தபஸ் மகிமையால் அதை நிறைவேற்றினார்.

Thanks to Varagooran Narayanan and 
Mr M J Raman [Manakkal] 
for sharing this on 22.12.2013











ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.



இதன் தொடர்ச்சி
மிகச்சிறிய இடைவேளைக்குப்பின்
03.01.2014 வெள்ளிக்கிழமை வெளியாகும்.

01.01.2014 ஆங்கிலப் புத்தாண்டுக்காக
வேறொரு பதிவு வெளியாக உள்ளது
காணத்தவறாதீர்கள்.



என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

சனி, 28 டிசம்பர், 2013

102 ] ஸ்நான வகைகள் - ஐந்து.

2
ஸ்ரீராமஜயம்


 


ஸ்நானம்: ஸ்நானத்தில் ஐந்து வகைகள் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. 

இவற்றில் ஸ்நானம் என்றவுடன் நாம் தினமும் செய்கிறதான ஜலத்தில் குளிப்பது ‘வாருணம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த வாருணம் என்பதும் குளம், ஆறு போன்றவற்றில் மூழ்கி /முங்கிக் குளித்தலே. இதுவே முக்கிய ஸ்நானம். 

மற்றபடி பாத்திரம் போன்றவற்றால் நீரை எடுத்து விட்டுக்கொள்வது போன்றவை இரண்டாம் பக்ஷம்தான். இதற்கு அப்புறம் வருவதுதான் கெளணமாகக் கழுத்துவரைக் குளிப்பது, இடுப்புவரைக் குளிப்பது போன்றவை. ஆனாலும் இந்த 'கெளண' ஸ்நானங்கள் எல்லாம் ஜலத்தால் /நீரால் செய்யும் வாருணத்தில் வருவதுதான்.

இல்லங்களில் சளி அல்லது ஜுரத்தில் இருக்கும்போது  விபூதி ஸ்நானம் செய்துகொள்வார்கள் பெரியோர். இது இரண்டாம் வகை. ஆக்நேயம் என்று பெயர். அக்னி சம்பந்தமுடையது என்று பொருள். அக்னியில் பஸ்மத்தால் கிடைக்கும் பஸ்மத்தை [சாம்பலை] ஜலம் விட்டுக்குழைக்காமல் வாரிப் பூசிக்கொள்வதை 'பஸ்மோத்தூளனம்' என்று சொல்கிறோம்.

பசுக்கள் கூட்டமாகச் செல்லும்போது, அவற்றின் குளம்படி மண்ணை ரொம்பவும் புனிதமாகாச் சொல்லியிருக்கிறது. இதற்கு ’கோதூளி’ என்று பெயர். பகவான் ஸ்ரீ கிருஷ்ணனே இந்தப்பசுக்களின் தூளியை சந்தனப்பொடி தூவினார் போல தனது உடம்பில் படிந்தபடி ‘கோதூளி தூஸரிதனாக’ இருந்தானாம். இவ்வாறான ’கோதூளி’ நம்மீது படும்படியாக நின்று, அந்த மண் துகள்களை நம் உடலில் ஏற்பது மூன்றாம் வகையான ஸ்நானம். இதன் பெயர் ’வாயவ்யம்’.

இது வாயுவுடன் ஸம்பந்தமுடையதாக இருப்பதால், அதாவது காற்றினால் பறக்கும் மண் தூசி என்பதால், இதன் பெயர் வாயவ்யம்.

அபூர்வமாக சிலசமயங்களில் வெயில் அடிக்கும்போதே மழையும் பொழிகிறதல்லவா. இவ்வாறான மழை ஜலம் தேவலோகத்திலிருந்து வரும் தீர்த்ததிற்கு சமம்  என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதில் குளிப்பது ’திவ்ய ஸ்நானம்’ என்று பெயர். இதுவே நான்காம் வகை ஸ்நானம். 

புண்யாஹவாசனம், உதகசாந்தி போன்றவை செய்தபின் மந்திர ஜலத்தை புரோகிதர் நம்மீது தெளிப்பார். சந்தியா வந்தனத்தில் ‘ஆபோ ஹி ஷ்டா’ சொல்லி நீரைத் தெளித்துக்கொள்கிறோம். இவ்வாறு அபிமந்திரித்து தெளித்துக் கொள்வது ஐந்தாம் முறை. இதன் பெயர் ‘ப்ராஹ்மம்’. ’ப்ரம்ஹம்’ என்றால் வேதம், வேத மந்திரம் என்று ஒரு அர்த்தம். ஆகவே வேத மந்திரத்தால் புனிதப் படுத்தப்பட்ட தீர்த்த புரோக்ஷணத்திற்கு ‘ப்ராஹ்ம ஸ்நானம்’ என்று பெயர். 

பார்க்கப்போனால் எல்லா ஸ்நானமுமே ப்ராஹ்மம் தான். எந்தக் காரியம் ஆனாலும், அந்தக் காரியத்தை மட்டும் பண்ணாமல், அதோடு மந்திரத்தையும் சேர்த்து, ஈஸ்வர ஸ்மரணையுடப் ஈஸ்வரார்ப்பணமாகப் பண்ணுவதாகவே, அத்தனை ஆசாரங்களும் ஏற்பட்டிருக்கின்றன. 


oooooOooooo

[ 1 ]

”மஹா பெரியவாளோட அனுஷ ஜயந்தியை, வருஷம் தவறாம நடத்திண்டு வரேன். சில வருஷத்துக்கு முன்னால, ஜயந்தித் திருநாள் தருணத்துல நடந்தது இது. -  By பட்டு சாஸ்திரிகள்.


ஒரு மாலை நேரம்… அன்பர் ஒருத்தர் அயோத்தியா மண்டபத்துக்கு வந்தார். 

‘என் பேரு சுவாமிநாதன். நீங்க ஏன் மஹாபெரியவாளோட பாதுகையையும் திருவுருவப் படத்தையும் வைச்சு அனுஷ ஜயந்தி நடத்தறேள்? பஞ்சலோக விக்ரஹகம் பண்ணி, அதுக்குண்டான வழிபாடுகளைச் செஞ்சு, ஜயந்தி விழாவை நடத்தலாமே?’ன்னு என்னைக் கேட்டார்.

அதோட நிக்காம, ஒரு பையிலிருந்து ரெண்டு பித்தளை சொம்புகளை எடுத்துக் கொடுத்து, ‘மஹாபெரியவாளின் பஞ்சலோக விக்ரஹகம் செய்யறதுக்கு முயற்சி பண்ணுங்க. நிச்சயம் அது கைகூடும். மாம்பலத்துலயே அவர் கோயில்ல குடியிருந்தபடி எல்லார்க்கும் அருள்பாலிக்கப் போறார், பாருங்க’ என்று சொல்லி, ஒரு ஓரமா இருந்த நாற்காலியில் போய் உட்கார்ந்தார்.

பத்து நிமிஷம் கழிச்சுப் பார்த்தா, அங்கே அவரைக் காணோம்! மண்டபம் முழுக்கத் தேடியும் கிடைக்கலே. பக்தர்கள்கிட்ட இந்த விஷயத்தைச் சொன்னதும், பஞ்சலோகத் திருமேனி பண்றதுக்கு, எல்லாரும் ரொம்ப ஆர்வத்தோட உதவி பண்ணினார்கள்.

அப்புறம்… மஹாபெரியவாளோட திருவுருவத்தை பஞ்சலோக விக்ரஹகமா வடிக்க, சுவாமிமலைக்குப் போனோம். அங்கே… கோயிலுக்குப் பக்கத்துலயே இருக்கிற தேவ சேனாபதி ஸ்தபதியைப் பாத்தோம். மஹாபெரியவாள்மேல ரொம்ப பக்தி கொண்டவர் அவர். வயசானவர். ‘இத்தனை வயசுக்குப் பிறகும், மஹாபெரியவாளோட பஞ்சலோக விக்ரஹகம் பண்ற பாக்கியம் எனக்குக் கிடைச்சிருக்கே’ன்னு சொல்லிச் சொல்லிச் சந்தோஷப்பட்டார். 

ஒரு நல்ல நாள் பார்த்து, விக்ரஹகம் பண்ற வேலையை ஆரம்பிச்சு, பிரமாதமா தயாரிச்சு முடிச்சார் (பெரியவாள் விக்ரஹம்தான், அவர் பண்ணின கடைசி விக்ரஹகம்).

இந்த நேரத்துல, கையில பணம் குறைச்சலா இருந்துது. விக்ரஹத்தை வாங்கிண்டு வரணும்னா, சுமார் 5,000 ரூபா வரைக்கும் தேவையா இருந்துது. ‘எல்லாம் பெரியவா பார்த்துப்பா’னு தைரியமா இருந்தேன். 

திடீர்னு ஒருநாள், கடம் விநாயக்ராமோட தம்பி சுபாஷ் சந்திரனோட வீட்டுக்கு, அவரோட மாப்பிள்ளை கஞ்சிரா வித்வான் கணேஷ்குமார் அமெரிக்காலேருந்து போன் பண்ணியிருக்கார்.

‘மாம்பலத்துல மேச்சேரி பட்டு சாஸ்திரிகள்னு ஒருத்தர், காஞ்சி மஹா பெரியவாளோட பஞ்சலோக விக்ரஹத்தைச் சிரமப்பட்டுப் பண்ணியிருக்காராம். ‘அவருக்குப் பணம் கொடுத்து ஒத்தாசை பண்ணு’ன்னு அதிகாலைல, மஹா பெரியவா என் சொப்பனத்துல வந்து சொன்னார்’னு கணேஷ்குமார் சொல்லிருக்கார். 

சுபாஷ் சந்திரனோட மனைவி கீதா நேர்ல வந்து, ‘இந்த 6,000 ரூபாயை உங்க கிட்ட கொடுக்கச் சொன்னார்’னு முழு விவரமும் சொல்லிக் கொடுத்தப்ப, ஆச்சரியத்துல அசந்து போயிட்டோம் நாங்க!

பணத்துக்கு என்ன பண்றதுன்னு தவிச்ச கொஞ்ச நேரத்துலயே, 6,000 ரூபாய் கைக்கு வந்தா எப்படி இருக்கும் எனக்கு? அப்படியே உருகிப் போயிட்டேன். 

இத்தனைக்கும் எனக்குப் பணம் தேவைப்படறதுன்னு யார்கிட்டயும் நான் ஒரு வார்த்தைகூடச் சொல்லலை. 

ஆனா, எங்கேயோ அமெரிக்காவுல இருக்கிற கணேஷ் குமாரோட சொப்பனத்துல வந்து, மஹாபெரியவாளே சொல்லிருக்கார்னா, பெரியவாளோட மகிமையை என்னன்னு சொல்றது! ஆறு வருஷத்துக்கு முன்னால நடந்த சம்பவம் இது!

பணம் கைக்கு வந்ததும், வைகாசி அனுஷ ஜயந்தி நடத்தறதுக்கு முன்னேயே, ஜூன் மாசம் 3-ம் தேதி ராத்திரி, சுவாமிமலையில ஸ்ரீஸ்வாமிநாத ஸ்வாமியை கண் குளிரத் தரிசனம் பண்ணிண்டு, வடவாம்பலம் வழியா வந்து, அங்கே ஸ்ரீஆத்ம போதேந்திராள் அதிஷ்டானத்துல மஹா பெரியவாளோட பஞ்சலோக விக்ரஹகத் திருமேனியை ஒரு வாகனத்துல வெச்சு, தீபாராதனை காட்டினோம்.

பூஜையெல்லாம் முடிச்சுட்டு, வண்டியைக் கிளப்பினா… ம்ஹூம்.. வண்டி ஒரு அடிகூட நகரலை. அங்கேயே நின்னுடுத்து. டிராக்டரைக் கொண்டு வந்து இழுத்துப் பார்த்தோம்; லாரியைக் கொண்டு வந்து கட்டி இழுத்தோம்; ம்ஹூம்… வண்டி அசைவேனாங்கறது! கிட்டத்தட்ட விடியற்காலை நேரமும் வந்தாச்சு. 

அந்த நேரத்துல, விவசாயி ஒருத்தர் ரெண்டு சிநேகிதர்களோடு அங்கே வந்தார். அவர் தினமும் ஆத்ம போதேந்திராள் அதிஷ்டானத்துல பிரார்த்தனை செஞ்சுட்டுதான் கூலி வேலைக்குப் போவாராம்.

எங்ககிட்ட வந்த அந்த விவசாயி, ‘என்ன நடந்துது?’ன்னு கேட்டார். ‘ஏனோ தெரியலை; வாகனம் நகரவே இல்லை’ன்னு சொன்னோம். அப்ப, அவர் சொன்ன வார்த்தைகள், எங்களை மெய்சிலிர்க்க வெச்சுடுச்சு!

‘மஹா பெரியவாளும் அவரோட குருவும் ஆத்மார்த்தமா சம்பாஷணையில இருக்கிற நேரத்துல, நீங்க எப்படிக் குறுக்கிடலாம்? பாதிப் பேச்சுல, பெரியவாளைப் பிரிச்சு எப்படி சென்னைக்குக் கூட்டிட்டுப் போகலாம்? இப்ப… அவங்க சம்பாஷணையை நிறுத்திட்டாங்க. இப்போ வண்டியை இழுத்துப் பாருங்க, நல்லாவே நகரும்’னார். 

அதோட நிக்காம, எங்களோட அவரும் சேர்ந்து, ‘ஜய ஜய சங்கர; ஹர ஹர சங்கர‘ன்னு சொல்லிண்டே வாகனத்தை நகர்த்தறதுக்கு உதவி பண்ணினார். வண்டியும் எந்தச் சிரமமும் இல்லாம நகர்ந்தது. வழியிலேயும் எந்தவித அசௌகரியமும் இல்லாம, விக்ரஹத்தை நல்லபடியா சென்னைக்குக் கொண்டு வந்தோம்.

மஹா பெரியவா, சாதாரணமானவரா என்ன? அவர், மஹான் மாத்திரமில்லை; சாட்சாத் ஈஸ்வர அம்சம். இல்லேன்னா இதெல்லாம் நடக்குமா? இந்த பஞ்சலோக விக்ரஹகத் திருவுருவமேனியைச் செஞ்சது நாங்களா? இல்லவே இல்லை. அவரோட காரியத்தை அவரே நடத்திண்டுட்டார். 

இப்ப… பாதுகையோடு பஞ்சலோக விக்ரஹகமும் தரிசனத்துக்கு இருக்கு. அடுத்து, பெரியவாளுக்குக் கோயில் கட்டுற வேலைதான் பாக்கி. மஹா பெரியவாளுக்கு கோயில்ங்கறது, பக்தர்களோட கோரிக்கைதான். இதையும் அவரே நடத்திக் கொடுத்துடுவார், பாருங்கோ!

ஒண்ணு மட்டும் சத்தியம்! ‘இன்னது நடக்கணும்’னு நாம சங்கல்பம் பண்ணிண்டாப் போதும்; அவரே நடத்தி வெச்சுடுவார். 

அவரோட அன்பாலதான் எல்லாமே இயங்கறது; மஹா பெரியவா, கருணாமூர்த்தியாச்சே!” என்று நெகிழ்ச்சியுடன் சொல்லி, பஞ்சலோக விக்ரஹகத் திருமேனியாகக் காட்சி தரும் காஞ்சி மஹானைப் பார்த்த பட்டு சாஸ்திரிகள், அப்படியே வணங்கித் தொழுதார்.

[Thanks to Sage of Kanchi 9.7.2013]

oooooOooooo

[ 2 ]

குல்பர்க்காவில் நடந்தது
குல்பர்காவில் பெரியவா முகாம். அன்று மௌன வ்ரதம். ஒரு "டொக்கு" அறைக்குள் பெரியவா உட்கார்ந்து கொண்டிருக்க, ஜன்னலுக்கு வெளியே தீக்ஷதர் ஒருவர் "திருவீழிமிழலை" என்னும் திவ்ய க்ஷேத்ர மஹாத்மியம் படித்துக் கொண்டிருக்க, பெரியவா அதை ஸ்வாரஸ்யமாக கேட்டுக் கொண்டிருந்தார். 
அன்று கொஞ்ச நேரம் கழித்து பெரியவா தன் மௌன வ்ரதத்தை முடித்துக் கொண்டு அந்த தீக்ஷதரை "க்ஷேமமா இரு" என்று ஆசீர்வாதம் பண்ணினார். 
தீக்ஷதர் மெதுவாக பெரியவாளிடம் வந்து, "பொண்ணுக்கு கல்யாணம் நல்ல இடத்தில் குதிரணும். பெரியவாதான் அனுக்ரஹம் பண்ணணும்" என்று விண்ணப்பித்தார்.

"காலேல பாப்போம்" ஒரே வார்த்தையில் அந்த தீக்ஷதரின் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு, மீதி வேலைகளை கவனிக்கச் சென்றுவிட்டார். 
தீக்ஷதருக்கோ ஏக கவலை! கல்யாணப் பேச்சை எடுத்ததும், ஏன் பெரியவா இப்படி சொன்னார்? என்று உள்ளே குடைந்து கொண்டிருந்தது. 
மறுநாள் காலை எட்டு மணி. தீக்ஷதரை பெரியவா அழைப்பதாக பாரிஷதர் வந்து சொன்னதும், ஓடிப்போய் நமஸ்காரம் பண்ணினார். 
”ஒண்ணும் கவலைப்படவேணாம். ஒம்பொண்ணுக்கு நல்ல எடத்ல கல்யாணம் நடந்து, க்ஷேமமா இருப்பா" என்று ஆசிர்வதித்துவிட்டு, குங்குமப் ப்ரஸாதம் குடுத்து அனுப்பினார்.


அதோடு பாரிஷதரிடம் " இவன் வெளில எங்கியும் சாப்ட மாட்டான். அதுனால, பொரில தயிரைக் கலந்து சாப்டக் குடு" என்று அன்பான உத்தரவும் இட்டார். 
அவர் சொல்வதை எத்தனை கஷ்டம் வந்தாலும் நாம் கடைப் பிடிக்க முயற்சி எடுத்தால் கூட போறும். பெரியவாளே அதற்கான பந்தோபஸ்த்தை பண்ணிவிடுவார். 
ஊருக்கு வந்தபின் தீக்ஷதருக்கு ஒரு பயங்கரமான, அதிர்ச்சியான விஷயம் காத்திருந்தது! 
ஆம். நேற்று இரவு பெரியவாளிடம் எந்தப் பெண்ணின் கல்யாணத்துக்காக விண்ணப்பம் செய்தபோது "காலேல பாப்போம்" என்று பெரியவா சொன்னாளோ, அதே நேரம். அதாவது ராத்ரி எட்டு மணிக்கு, அந்த பெண்ணின் ப்ராணனுக்கே ஆபத்து வந்து, ரொம்ப அவஸ்தை பட்டு பிழைக்கப் போராடியிருக்கிறாள். 
அங்கிருந்தே பெரியவா அவளை ரக்ஷித்திருக்கிறார். காலை பெரியவா தீக்ஷதரை அழைத்தபோது அவள் ஆச்சர்யமான வகையில் பரிபூர்ணமாக குணமடைந்திருந்தா.



நன்றி: அமிர்த வாஹினி 13.12.2013


oooooOooooo

[ 3 ]





"வெறும் சப்தத்திற்கும், 


வேத சப்தத்திற்கும்


 உள்ள மதிப்பு"







நத்தத்தில் காஞ்சி பரமாசார்யாள் ஒரு சமயம் 

இருந்தபோது நடந்த சம்பவம். 



பெரியவாள் தங்கியிருந்த இடத்தில் ஒரு வேதபாராயண 

கோஷ்டி வேதத்தில் ஒரு அனுவாகம் 

கூறிக்கொண்டிருந்தார்கள்.


அந்த இடத்திற்கு 

ஒர் ச்ரத்தையில்லாத பிராம்மணன் வந்திருந்தான். 



அவனுக்கு வேதம் தெரியாது. ’


”என்னவோ அர்த்தமில்லாமல் முணுமுணுக்கிறதே


இந்த கோஷ்டி. 



இதனால் உலகத்திற்கு என்ன ப்ரயோஜனம்? ஏழை 

எளியவர்களுக்கு ஏதாவது திட்டமிட்டு செலவழித்தாலும் 

புண்யமாவது கிடைக்குமே” என்று கூறினானாம். 


இது எப்படியோ பெரியவாள் காதுகளையும் எட்டிவிட்டது.

நமக்கும் பெரியவாளுக்கும் அதுதான் வித்யாசம். 



வால்மீகி மகரிஷி தனது ராமாயணத்தில் ராமரைப்பற்றிக் 

கூறும்போது, "நூறு குற்றங்கள் செய்தாலும் கொஞ்சம் 

கூட ஞாபகம் கொள்ள மாட்டார். ஏதாவது ஒரு நல்ல 

காரியம் செய்தாலும் அதைக்கொண்டே பூரண திருப்தி 

அடைந்து விடுவார்" என்று வர்ணித்திருப்பதை நடந்து 

காட்டியவர் நமது காஞ்சி பரமாச்சார்யாள்.



அன்று மாலை பூஜாகாலத்திற்குப் பிறகு பெரியவாள் 

அருள்வாக்கு கூற அமர்ந்தார். காலையில் கம்ப்ளெய்ன்ட் 

செய்த ஆசாமியும் அங்கு, மாலை, கூட்டத்தில் 

அமர்ந்திருப்பதைக் கண்டார். 


அவனருகில் சென்று மடத்து 

சமையல்காரனைக் கூப்பிட்டார். 


”இந்த ப்ராம்மணனுக்குப் 

பகல் சாப்பாடு நன்றாக இல்லையாம். 

ராத்திரி கொஞ்சம் 

ஸ்பெஷலாக கவனித்துக்கொள்" என்று கூறினார். 


அந்த சமையல்காரன் இந்த ப்ராம்மணனைப் பார்த்து 

முணுமுணுத்துக் கொண்டே போனான். இந்த 

பிராம்மணனுக்கு படுகோபம் வந்து விட்டது. 


"ஸ்வாமி! 

பார்த்தேளா! என்னமோ முணுமுணுத்துக் கொண்டே 

போகிறானே பார்த்தேளா?" என்றான் அந்த பிராம்மணன்.


நம் நடமாடும் தெய்வம் புன்முறுவலுடன் கேட்கிறார். 



"அவன் என்ன முணுமுணுத்தான் என்று தெரியுமா?" 

என்று. 


"அது காதில் விழவில்லை. ஆனால் 


முணுமுணுத்ததுகாதில் நன்றாக விழுந்தது" என்றான் 

அந்தப் பிராம்மணன். 



"அவன் என்ன சொன்னான் என்று புரியாத 

முணுமுணுப்புக்கு, அது என்ன வார்த்தை, யாரைப்பற்றி 

என்று தெரியாமல் இருக்கும்போது, அந்த முணுமுணுப்பு 

சப்தம் உன்னிடம் ஒரு ரியாக்ஷன் ஏற்படுத்துமானால், 

வழிவழியாக பரம்பரையாக வந்த வேத முணுமுணுப்பு, 

அந்த அட்மாஸ்ஃபியரில் எத்தகைய உயர்ந்த ரியாக்ஷன் 

ஏற்படுத்தும் என்பது உனக்குக் காலையில் ஞாபகமில்லை 

போலிருக்கு" என்று சொன்னார்.

வெறும் சப்தத்திற்கு, வேத சப்தத்திற்கு உள்ள மதிப்பை, 

ஆசார்யாள் சொல்லுகிற மாதிரி யார் நமக்கு மனதில் 

பதியும்படி சொல்லமுடியப்போகிறது!

அந்த ப்ராம்மணன் வேத அத்யயனகோஷ்டியை 

இகழ்ந்தற்கு ஆசார்யாள் அஸூயைப்படவில்லை. ஸ்ரீ 

மடத்தில் தனது சன்னிதானம் இருக்கும் இடத்தில், 

காலையில் காலை வைத்துவிட்ட அந்த ஒரு 

புண்ணியத்திற்காக (कृतेनैकेन तुष्यति) அவன் வேத 

கோஷ்டியை இகழ்ந்த பாபத்தை மறந்துவிட்டு, ஒரு 

சிறிதும் கோபமோ, வெறுப்போ கொள்ளாமல், 

அவனுக்கும், அவனை வ்யாஜமாக, லோகத்தினருக்கும் 

ஞானம் அனுக்ரஹம் பண்ணுவது இருக்கிறதே, 


அதுதான் "தெய்வீகம்" என்பதற்கு லக்ஷணம்.



அந்த பரமாசார்யாளின் பாததூளி பாக்யம் எத்துணை 

உயர்ந்ததாக இருக்கும் என்று கூறவும் வேண்டுமோ?



[Thanks to Amritha Vahini 23.12.2013]




ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.



இதன் தொடர்ச்சி
நாளை மறுநாள் வெளியாகும்.



என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்