என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

புதன், 27 ஏப்ரல், 2011

சுடிதார் வாங்கப்போறேன் [பகுதி 3 of 3] இறுதிப்பகுதி



முன்கதை முடிந்த இடம்:

திடீரென்று ஒரு சுடிதாரைச் சுட்டிக் காட்டி, அதை அந்த அலமாரியிலிருந்து எடுக்கச் சொன்னேன்.

நான் கேட்ட அதே கரும் பச்சைக்கலர்;  முன் பகுதியில் மட்டும் அருமையான கண்ணைப் பறிக்கும் வேலைப்பாடுகள்;  தங்கக் கலரில் ஜரிகை, ஜிம்கி, எம்ப்ராய்டரி என அனைத்தும் அருமையாக இருந்தன.

இருந்தும் எனக்கொரு பெரிய குறை.  இரண்டு பக்கமும் கை ஏதும் இல்லாமல் இது முண்டா பனியன் போலல்லவா உள்ளது! என்ற வருத்தம் ஏற்பட்டது.   


=================================
தொடர்ச்சி .................................பகுதி-3  


”இதே கலர்  இதே டிசைனில் கை வைத்ததாக வேண்டும்” என்றேன்.

என்னை ஒரு மாதிரியாகப் பார்த்து அவர்களுக்குள் ஒரு நமட்டுச் சிரிப்பு சிரிப்பது போலத் தோன்றியது. மல்லாக்காக இருந்த அந்தச் சுடிதாரை குப்புறப்படுக்கப்போட்டாள் அந்த விற்பனைப்பெண்.  கைகள் இரண்டும், சுடிதாரின் பின்புறம் முதுகுப்புறமாக பின் போட்டு ஒட்டப்பட்டிருந்ததை என்னிடம் சுட்டிக் காட்டினாள்.

அச்சச்சோ! அந்தக்கைகளுக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி வெட்டி பின்புறமாக ஒட்டி வைத்துள்ளீர்கள்?  ஒருவித அனுதாபத்துடன் வினவினேன் அப்பாவியாக நான்.  

“கைகளைத்தனியே இப்படித்தான் இங்கே வைத்திருப்பார்கள் சார்; அவைகளைத் தனியே வைத்து அவரவர் விருப்பப்படி தைத்துக்கொள்ள வேண்டும்; ஒரு சிலர் கைகள் ஏதும் வேண்டாம், அப்படியே காத்தாட இருக்கட்டும் என்பார்கள்; அதனால் தான் அவற்றைத் தைக்காமல் தனியாக இப்படி வைத்திருக்கிறார்கள்” என்றாள்.

இந்த விளக்கத்தைக்கேட்ட நான் ஒரு வழியாக நிம்மதி அடைந்தேன். அப்படித்தனியே தொங்கிய கைகளும், தோள்பட்டையையொட்டி தைக்கப்பட வேண்டிய இடத்தில் கும்மென்று எக்ஸ்ட்ரா துணிகொடுத்து பஃப் வைத்ததாகவும், கீழே அழகிய கண்ணைக்கவரும் தங்கக்கலரில் பார்டர் கொடுத்கப்பட்டதாகவும், கரும்பச்சை நிறத்தில் ஜம்மென்று இருந்தது எனக்கு மகிழ்ச்சியளித்தது.  

என் முகம் வெளிப்படுத்திய திருப்தியை உணர்ர்ந்த அந்த விற்பனைப்பெண் , ”விலை ரூபாய் 2400 மட்டுமே, அதிலும் 10% தள்ளுபடி உண்டு, சார்”  என்றாள். 

“இதற்கு மேட்சாக இதே கலரில் கால் குழாயும் (பேண்ட்டும் ) அங்கவஸ்திரமும் ( துப்பட்டாவும் ) தருவீர்கள் அல்லவா?” என்றேன்.

மறுபடியும் ஒரு மாதிரியாக என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே அவள், “அதே கலரில் வராது சார், யூனிஃபார்ம் மாதிரி போட மாட்டார்கள்” என்றாள்.

“இதற்கு ஜோடி இது தான்” என்று ஒரு வித அழுகமாங்காய் [அழுகலான மாவடு] கலர் போன்ற பழுப்புக் கலரில், ஆனால் மிகவும் நயமான கொசுவலை போன்ற துணியில் துப்பட்டாவும், கால் குழாயும் எடுத்துக் காட்டினாள். உள்புறம் துணி கொடுத்து, டபுள் ஸ்டிச்சிங் செய்து தொளதொள என்று இருந்தது அந்தக் கால்க்குழாய் (பேண்ட்).   


எனக்கு மட்டும் அதே கரும்பச்சைக் கலரில் மேட்ச்சாக இல்லாமல் மங்கிய கலரில் உள்ளதே என்று ஒரு பெரும் குறை மனதுக்குள் இருந்தது. 

சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் நான் இருந்த போது, அவற்றைப் பேக் செய்து கொண்டே, “ஒன்று போதுமா சார், வேறு ஏதாவது பார்க்கிறீங்களா” என்றாள்.

கால் குழாயும் துப்பட்டாவும் வேறு கலரில் இருப்பதோடு மட்டுமின்றி, போட்டுகொண்டால் “அலிபாபாவும் நாற்பது திருடர்களும்” படத்தில் வரும் பானுமதியின் பைஜாமா போல தொளதொளப்பாக இருக்குமோ என்ற விசாரத்துடன், பணம் ரூ. 2160 மட்டும் செலுத்தி விட்டு, பார்ஸலை வாங்கிக் கொண்டு கடையிலிருந்து புறப்பட்டேன். 


அந்த பரபரப்பான பஜாரில், வழிநெடுகிலும் பல இளம் வயதுப் பெண்கள் சுடிதாருடன் தென்பட்டனர். நான் அந்தத் தெருவின் ஒரு ஓரமாக நின்றபடி, வாழ்க்கையில் முதன் முதலாக, அந்த இளம் வயது பெண்களை உச்சி முதல் உள்ளங்கால் வரை உற்று நோட்டமிடலானேன். அவர்களைப்பார்த்துக்கொண்டே என் மனதினுள் சுடிதார்கள் பற்றிய கருத்துக்கணிப்பு நடத்தலானேன்.

அவர்களில் பாதிப் பேர் முக்கால் சைஸாக தொடை வரையிலும், மீதிப்பேர் முழுவதும் மறைப்பது போல முழங்காலுக்குக்கீழ் சற்றே இறக்கமாக (ஃபுல் ஸ்லீவ்ஸ்) சட்டையும் அணிந்திருந்தனர். 

அவர்களில் முக்கால் வாசிப்பேர் சுடிதார் ஒரு கலரிலும், துப்பட்டாவும், கால் குழாயும்வேறு கலரிலும் அணிந்திருந்தனர்.

மீதி கால்வாசிப் பேர்கள், எல்லாம் ஒரே கலரில் மேட்ச் ஆக அணிந்திருந்தனர்.  

இந்த டீன் ஏஜ் பெண்களையெல்லாம் விதவிதமான சைஸ்களிலும், கலர்களிலும், இன்று மட்டும் லுக் விட்ட எனக்கு மீண்டும் மனதில் ஓர் சஞ்சலம் ஏற்பட்டுவிட்டது.  

தவறாக நினைத்து விடாதீர்கள்.  நான் வாங்கி வந்துள்ள சுடிதார் செட்டில், சுடிதார் ஒருகலரும், கால்க்குழாய் வேறு கலருமாக இருப்பதாலும், அதுவும் ஆஃப் ஸ்லீவ்ஸுடன் தொடைவரையுள்ள மாடலாக இருப்பதாலும், அது இன்றைய நவ நாகரீகப் பெண்கள்  உபயோகிக்கக் கூடிய பேஷன் தானா, என்பது தான் என் சஞ்சலமும், சந்தேகமும்.   

இதுபோல சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேல் சுடிதார் அணிந்த பல பெண்களை, பலவடிவங்களிலும், பல்வேறு ஆடைகளுடனும் கண்குளிர தரிஸித்து வந்த நான், இனிமேல் சுடிதார் அணிந்த எந்தப் பெண்ணையும் பார்த்து மனதைச் சஞ்சலப் படுத்திக் கொள்ளக் கூடாது என்ற முடிவுடன், மலைவாசல் பிள்ளையாரை வேண்டிக்கொண்டு, ஒரு ஆட்டோவைப் பிடித்து என் வீடு நோக்கிப் புறப்பட்டேன். 

ஆட்டோவில் வரும்போதும் ஆயிரம் எண்ணங்கள் அலைமோதின.  பெரிய பையன்கள் கல்யாணத்திற்கு ஒரே நாளில் நூற்றுக்கணக்கான புடவைகள், பல்வேறு கலர்கள், டிசைன்கள், விலைகள் என அள்ளி வந்து உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் அளித்து மகிழ்வித்த அனுபவம் எனக்கு உண்டு.   இன்று முதன்முதலாக ஒரு சுடிதார் எடுக்கப்போய் அதிலும் பல புதிய அனுபவங்களையும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டதிலும் ஒரு மகிழ்ச்சியே ஏற்பட்டது என்றாலும், மனதில் ஏதோ ஒரு சின்ன விசாரம் இருந்து வந்தது.

புடவையில் கூட எனக்கு என்று ஒருசில தனி அபிப்ராயங்கள் உண்டு. அதாவது ஒருசில புடவைகள் ஒருசிலர் கட்டிக்கொண்டால் மட்டுமே மிக அழகாக இருப்பதுபோல எனக்குத் தோன்றும். அதுபோல ஒருசிலர் எந்த ஒரு புடவை கட்டிக்கொண்டாலும் நல்ல அழகாகவே தென்படுகிறார்களே என்றும் நினைத்துக்கொள்வதுண்டு.   ஒருசில புடவைகள் புடவைக்கடை வாசலில் உள்ள பொம்மைக்கு கட்டினால் மட்டுமே ஆடாமல், அசங்காமல், கசங்காமல் வெகு அழகாக இருப்பதுபோல அவ்வப்போது நினைத்துக்கொள்வேன்.    

இவ்வாறான பல நினைவுகளுடன் வந்த என்னை, ஆட்டோக்காரர் என் வீட்டு வாசலில் அடித்த சடர்ன் ப்ரேக், நிகழ்காலத்திற்கு மீட்டு வந்தது. ஆட்டோக்காரருக்கு பணம் கொடுத்து, நன்றி சொல்லிவிட்டு, நான் என் வீட்டை அடைந்தேன்.    

வழக்கம்போலவே, எங்கே போனீர்கள், என்ன வாங்கி வந்தீர்கள் என எதுவும் கேட்காவிட்டாலும், நானே சுடிதாரைப்பிரித்து என் மனைவியிடம் நீட்டினேன்.  வாங்கிப்பார்த்தவள், அதிசயமாக ஒரு சின்ன புன்னகை புரிந்தாள். 

“நீ ஒருமுறை இந்தச்சுடிதாரை அணிந்து பார்த்து, சைஸ் ஓரளவுக்கு அவளுக்கு சரியாக இருக்குமா என்று சொல்கிறாயா?” என்று கேட்டு என்னுடைய வெகுநாள் ஆவலை, மெதுவாக வெளிப்படுத்தலானேன்.

“எல்லாம் அந்தப்பொண்ணுக்கு சரியாகத்தான் இருக்கும்; பேசாமல் கசங்காமல் கொள்ளாமல், அப்படியே அந்த அட்டைப்பெட்டியில் போட்டு பத்திரமாக வையுங்கோ” என்று சொல்லிவிட்டு, ஓடிக்கொண்டிருந்த கிரைண்டரில் கையைவிட்டு, இட்லிமாவை தன் விரல்களால் எடுத்து பதம்பார்க்க ஆரம்பித்து விட்டாள்.

அடிக்கடி ஏற்பட்டு வரும் மின் தடை இப்போது ஏற்படாமல், அந்த கிரைண்டர் தொடர்ந்து ஓடியதில் எனக்கு சற்றே எரிச்சல் ஏற்பட்டது.

சுடிதார் அணிந்த நிலையில் என்னவளை மொபைல் போன் கேமரா மூலம் ஒரு படமாவது எடுத்து, தினமும் ஒருமுறை பார்த்து மகிழலாம் என்ற என் நினைப்பு வொர்க்-அவுட் ஆகாமல் நான் மூட்-அவுட் ஆகியும், வழக்கம்போல் என் மனதை நானே சமாதானம் செய்துகொண்டு உடனே இயல்பு நிலைக்குத்திரும்பி விட்டேன்.

ஒரு வழியாக வெற்றிலை பாக்கு, பழங்கள், புஷ்பங்கள்,  சாக்லேட்டுகள், மற்றும் ஸ்வீட் பாக்கெட்களுடன், நான் வெகு கஷ்டப்பட்டு வாங்கி வந்திருந்த சுடிதாரை, என் மனைவி கையால் என் வருங்கால மருமகளுக்கு வழங்க  ஏற்பாடு செய்தேன் நான்.   அந்தப் பெண்ணிடம், அவற்றைச் சந்தோஷமாகக் கொடுத்தாள் என் மனைவி.  

கலரோ, டிசைனோ, சைஸோ  சரியில்லாவிட்டால் உடனே 2 நாட்களுக்குள் கடையில் கொடுத்து விட்டு வேறு ஒன்று மாற்றி வந்து விடலாம் என்றோம் அந்தப் பெண்ணிடம். ஆனால் அவள் இதுவே நன்றாக இருப்பதாகச் சொல்லி மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டாள். பெண் பார்க்கும் படலம் முடிந்து நிச்சயதார்த்தம் நடைபெற நாள் குறித்துள்ள இடைக்காலத்தில்,  அவள் இன்று இருக்கும்  நிலைமையில் வேறு என்னதான், எங்களிடம், தைர்யமாகச் சொல்லிவிட முடியும் என்று என் மனதினுள் நினைத்துக் கொண்டேன்.

தனியாகத் தொங்கிக்கொண்டிருந்த கைகள் இரண்டையும் அழகாகத் தைத்து, அதை அப்படியே அணிந்து கொண்டு வருங்கால மாமியாரிடம் காட்டிவிட்டு, ”தனது ஸ்நேகிதிகள் எல்லோருமே இந்த டிரஸ் ரொம்பவும் சூப்பராக இருப்பதாகச் சொல்லிப் பாராட்டினார்கள்” என்றும் கூறி, நன்றி கலந்த நாணத்துடன், பிறந்த நாள் அன்று எங்களை நமஸ்கரித்துச் சென்றாள், அந்தப் பெண்.

அவள் புறப்பட்டுச் சென்ற அடுத்த நிமிடம் என் மூன்றாவது மகனிடமிருந்து எனக்குத் தொலைபேசியில் ஒரு அழைப்பு.

“நீ வாங்கிக் கொடுத்துள்ள சுடிதார் அவளுக்கு மிகவும் நன்றாக இருக்குப்பா. சூப்பர் செலக்‌ஷன், ரொம்பவும் தாங்ஸ்ப்பா” என்றான்.   

திருச்சியிலிருந்து 400 கிலோமீட்டர் தள்ளியிருக்கும் இவன் எப்படி அதற்குள் இந்த சுடிதாரைப் பார்த்தான்? என்று எனக்குள் ஒரே வியப்பு.  அவனிடமே  நான் இதைப்பற்றி அப்பாவித்தனமாகக் கேட்டு விட்டேன்.

“மெயிலை ஓபன் செய்து பார் தெரியும்” என்றான்.  டிஜிடல் கேமராவில் போட்டோ எடுத்து, இண்டெர்நெட் மூலம் அவனுக்கு அனுப்பி விட்டுத் தான் எங்களைப் பார்க்க வந்திருக்கிறாள் எங்கள் வருங்கால மருமகள். 

எது எப்படியோ, நாம் வாங்கி வந்தது நன்றாக இருப்பதாக, வாழ்க்கையில் முதன் முறையாக ஒரு அங்கீகாரம் கிடைக்கப் பெற்றதில், என் மனம் மகிழ்ச்சிக் கடலில் நீச்சலடித்துக் கொண்டிருந்தது. 

-o-o-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-o-o-





[ இந்தச்சிறுகதை 25.02.2009   தேதியிட்ட ”தேவி ”
 தமிழ் வார இதழில் சற்றே சுருக்கப்பட்டு வெளியிடப்பட்டது ]

சனி, 23 ஏப்ரல், 2011

சுடிதார் வாங்கப்போறேன் [பகுதி 2 of 3]



முன்பகுதி முடிந்த இடம்:

கல்லூரிப் படிப்பை சமீபத்தில் முடித்த இளம் வயது பெண் தானே, நல்ல சுடிதார் ஒன்று வாங்கிக் கொடுப்போம்.  பிறகு வயதானால் எவ்வளவோ புடவைகள் கட்டிக் கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்குமே என்று நினைத்து ரெடிமேட் சுடிதார்கள் விற்கும் பிரபல ஜவுளிக்கடைக்குள், நான் இப்போது நுழைகிறேன்.

=============================

தொடர்ச்சி........................பகுதி-2

நான் உள்ளே நுழைந்த அது, திருச்சியிலேயே மிகப்பெரிய ஜவுளிக் கடல். கண்ணைக்கவரும் ரெடிமேட் ஆடைகள். பகலா இரவா என பிரமிக்க வைக்கும் மின் விளக்குகள் ஜொலிக்கின்றன.  

முழுவதும் குளுகுளு வென்று ஜில்லிட்டுப்போக வைக்கும் ஏ.ஸி க் கட்டடம். கடையின் உள்ளே நுழையும் போதே வருவோர் தலையில் [ஏற்கனவே உள்ள ஒரு சில முடிகளையும் பறக்கச் செய்யும் புயலென] ஜில் காற்று வேகமாக அடிக்கும்படி ஒரு சிறப்பு ஏற்பாடு.  வேறு கடைகளுக்குப் போய் விடாமல் இங்கேயே வாங்கி விட வேண்டும் என்று ப்ரைன் வாஷ் செய்யவதற்காகவே இது போல வைத்திருப்பார்களோ என்னவோ!

எங்கு பார்த்தாலும் ஜவுளி வாங்க வந்துள்ள மக்கள் கூட்டம்.  அவர்களின் ரசனைக்குத் தீனி போட தயாராக இருந்த விற்பனைப் பெண்கள்.

வாங்க ஸார்! என்ன வேணும்” நுழைவாயிலில் மட்டும் நின்ற ஒரே ஒரு ஆண் மகனின் கேள்வி.

“சுடிதார் வேண்டும்”   நான்.

”நேரே உள்ளே போய் இடது பக்கம் திரும்புங்கள்”

நேரே உள்ளே போனேன்.  இடது பக்கம் திரும்பினேன்.  திரும்பிய இடமெல்லாம் ஒரே சுடிதார் மயம்.  ஆயிரக்கணக்கான சுடிதார்கள். எங்களை வாங்குபவர் வரமாட்டார்களா என்ற ஏக்கத்துடன் ஹாங்கரில் தொங்கிக் கொண்டிருந்தன.

எதைப் பார்ப்பது, எதை வாங்குவது, ஓராயிரம் குழப்பங்கள் எனக்கு. ஒரு சில விற்பனைப் பெண்கள் என்னை நெருங்கினர்.  

யாருக்கு சுடிதார்? ....  எவ்வளவு வயது? ..... உயரமா?  குள்ளமா? நிதானமா?  ...... குண்டா இருப்பங்களா?, ஒல்லியா இருப்பாங்களா? மீடியமா இருப்பாங்களா? ....... ஃபுல் ஸ்லீவ்ஸா, முக்கால் சைஸா? ...... என்ன விலையில் பார்க்கிறீர்கள்? வரிசையாகக் கேள்விக்கணைகளைத் தொடுத்து, என்னை பிரமிக்கச் செய்தனர்.  முன்னப்பின்னே நான் சுடிதார் வாங்கியிருந்தால் தானே, எனக்கு அவர்கள் என்ன கேட்கிறார்கள் என்ற விபரம் புரியும்!

தொங்க விட்டுள்ளவற்றில் ஒரு சிலவற்றை சற்றே இழுத்துப் பார்த்தேன். தடவிப் பார்த்தேன்.  யாரோ ஒரு வயதுப்பெண்ணைத் தொட்டுவிட்டது போல எனக்கு மிகவும் கூச்சமாக வேறு இருந்தது.  

இவ்வாறு ஒருவித சங்கடத்துடன் இருந்த என்னை நெருங்கிய அந்தப்பெண் விற்பனை யாளர் “இங்குள்ளதெல்லாம் விலை நானூறு முதல் எழுநூறு வரை, சார்” என்றாள். எதுவும் எடுப்பாகவும், கவர்ச்சியாகவும், ஸ்பெஷலாகவும் தெரியவில்லை எனக்கு. 

“இவைகளை விட விலை அதிகமாக ஏதும் உள்ளனவா?” இக்கட்டான சூழலிலிருந்து விலக எண்ணி கேள்வி எழுப்பினேன்.  விலை ஜாஸ்தியான சுடிதார்கள் அடுக்கப்பட்டுள்ள பிரிவுக்கு என்னைப் பிரியாவிடை கொடுத்தனுப்பினர்.  

ஏற்கனவே நான் பார்த்த பிரிவில் அங்கு தொங்கிய சுடிதார்கள் எல்லாமே அன்ரிஸர்வ்டு ரெயில் பயணிகள் போல, எனக்குக்காட்சியளித்தன.

இந்தப்புதிய பிரிவில் உள்ள சுடிதார்கள், அழகாக தூங்கும் வசதியுடன் பயணிக்கும் ”ஃபர்ஸ்ட் கிளாஸ் ஏ.ஸி” பயணிகள் போல, சுகமாக வசதியாக, [பரிதாபமாகத் தொங்கும் நிலை ஏதுமில்லாமல்] ஜோராகக் காட்சியளித்தன. 

அவையாவும் பளபளப்பான கண்ணாடிக்கவர்களில் அடுக்கி மடித்து அழகிய டிசைன்கள் மற்றும் கலர்களில் வைக்கப்பட்டிருந்தன.  அங்கிருந்த இளம் விற்பனைப் பெண்களின் அடுக்கடுக்கான வழக்கமான கேள்விகள் ஆரம்பமாகி விட்டன.

ஏதோ ஒரு சுடிதாரை கையில் எடுத்துப் பார்த்தேன். விலை ஆயிரத்து நானூறு என்று போடப்பட்டிருந்தது.

எவ்வளவு வயது பெண்ணுக்கு சுடிதார் பார்க்கிறீர்கள்?” என்றாள் ஒருத்தி. 

“22 வயது” என்றேன்.

”நல்ல உயரமானவங்களா சார் ?” என்றாள்.

“ஓரளவு உயரம் தான்;  உங்கள் உயரம் இருக்கும்” என்றேன்.

“எல்லாமே ஃப்ரீ சைஸ் தான்;  யாரு வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம்” என்றாள்.

“நல்ல கலரா இருப்பாங்களா?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டாள் 

“சிவப்பாக நல்ல கலராகவே இருப்பாள்” என்றேன்.

உயரம், உடல்வாகு, வயது முதலியன சொல்லிவிட அவ்விடம் மாதிரிக்கு விற்பனைப் பெண்கள் பலர் இருந்தனர்.  நிறத்தையோ அழகையோ வர்ணிக்கவும், ஒப்பிடவும் அங்கு யாரும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. 

அது போல நல்ல நிறமாகவும், ஓரளவு நல்ல அழகாகவும் இருந்தால் அவர்கள் அவ்விடம் விற்பனையாளராகவே இன்னும் வேலை பார்த்துக் கொண்டிருப்பார்களா என்ன!  அல்லது அதுபோன்றவர்களை நிம்மதியாக வேலை செய்யத்தான் நம்ம ஆட்கள் விட்டு விடுவார்களா என்ன!  என்று என் மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்.

ஒரு வேளை அது போல யாரும் பேரழகிகள் இருந்து, சுடிதார் பார்க்க வந்தபோது, யாராவது அவர்களையும் சேர்த்து செலெக்ட் செய்து போய் இருப்பார்களோ என்னவோ;  என்றும் நினைத்துக்கொண்டேன்.  

நூற்றுக்கணக்கான சுடிதார்கள், பல வண்ணங்களில். பல டிசைன்களில் காட்டியும் எனக்கு முழுத் திருப்தியாகவில்லை.  நான் விரும்பும் கலர் மற்றும் நான் எதிர்பார்க்கும் டிசைன், என் டேஸ்ட் முதலியவை பிரத்யேகமானது.   மிகவும் வித்யாசமான ரஸனை உள்ளவன் அல்லவோ நான்.

“2000 ரூபாய்க்கு மேல், நல்ல அருமையான கரும் பச்சைக்கலரில், நல்ல வேலைப்பாடுகளுடன் இருந்தால் காட்டுங்களேன்” என்றேன் முடிவாக. .

பட்டு ரோஜாக் கலரில் ஒன்று காட்டப்பட்டது.  கையில் வாங்கித் தொட்டுப் பார்த்த எனக்கு ஓரளவு மனதுக்குப் பிடித்த டிசைனாக இருப்பினும், வரப் போகிற மருமகளுக்கு முதன் முதலாக எடுத்துக் கொடுப்பது, சிவப்பு (டேஞ்சர்) நிறமாக இருக்க வேண்டுமா என்ற சிறிய குழப்பம் என்னுள் ஓடியது. 

“அருமையான கலர் மற்றும் டிசைன் ஸார்” போட்டுப் பார்த்தால் சூப்பராக இருக்கும் அவங்க சிகப்பு உடம்புக்கு” என்றாள். 

ஏற்கனவே நான் தொட்டுப் பார்த்த லைட் சந்தனக்கலர் சுடிதாருக்கும் இதே போலத் தான் சொன்னாள், இவள்.   அவளுக்கென்ன! ஏதோ ஒன்றை விற்பனை செய்து, பில் போட்டு பணம் கட்ட என்னை அனுப்பி வைக்கணும் சீக்கிரமாக.

டேபிள் டாப் மீது வரிசையாகக் குவிக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான சுடிதார்களை, கிளி ஜோஸ்யம் பார்ப்பவரிடம் இருக்கும் கிளி ஒவ்வொரு அட்டையாக எடுத்து நகர்த்துவது போல நகர்த்திக்கொண்டிருந்தேனே தவிர, எதிலும் மனம் லயிக்காமல், அங்கிருந்த ராக்குகளில் அடுக்கப்பட்டிருந்த பல சுடிதார்களையும் வரிசையாக நோட்டமிடலானேன்.  

திடீரென்று ஒரு சுடிதாரைச் சுட்டிக் காட்டி, அதை அந்த அலமாரியிலிருந்து எடுக்கச் சொன்னேன்.

நான் கேட்ட அதே கரும் பச்சைக்கலர்;  வெல்வெட் போன்ற நல்ல பளபளப்பும் வழுவழுப்பும். முன் பகுதியில் மட்டும் அருமையான கண்ணைப் பறிக்கும் வேலைப்பாடுகள்;  தங்கக் கலரில் ஜரிகை, ஜிம்கி, எம்ப்ராய்டரி என அனைத்தும் அருமையாக இருந்தன.

இருந்தும் எனக்கொரு பெரிய குறை.  இரண்டு பக்கமும் கை ஏதும் இல்லாமல் இது முண்டா பனியன் போலல்லவா உள்ளது! என்ற வருத்தம் ஏற்பட்டது.   



தொடரும் 





[ இந்தக்கதையின் இறுதிப்பகுதி 27-04-2011 புதன்கிழமை வெளியிடப்படும் ]




செவ்வாய், 19 ஏப்ரல், 2011

சுடிதார் வாங்கப்போறேன் [பகுதி 1 of 3]


வெகு நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் ஜவுளிக்கடைக்குப் போக வேண்டிய நிர்பந்தம்.  ஒவ்வொரு தடவை போய் ஜவுளிகள் வாங்கி வந்ததும் இனி அந்தப் பக்கம் போகவே கூடாது என்று சபதம் செய்து கொள்வேன்.

ஊரில் இல்லாத அதிசயமாக என் மனைவிக்கு மட்டும் கடை வீதிக்கு வருவதோ, கடை கடையாக ஏறுவதோ, மணிக்கணக்காக கும்பலில் நின்று புடவை செலெக்ட் செய்வதிலோ துளியும் விருப்பம் கிடையாது.  நான் பார்த்து ஏதாவது அவளுக்கு எடுத்துக் கொடுத்தால் தான் உண்டு.

எனக்குப் பிடித்த கலர், டிசைன் முதலியவற்றில் புடவையும், மேட்ச் ப்ளவுஸ் பிட்டும் ஆசையாக எடுத்து வந்து விடுவேன்.  வீட்டுக்கு வந்ததும், அதை மனைவியிடம் காட்டி அவளை அசத்த வேண்டும் என்றும் ஆசைப்படுவேன்.  அவள் அநேகமாக ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பாள்.  எழுப்பினால் கோபம் வரும்.   அல்லது டி.வி. சீரியலில் மூழ்கி இருப்பாள்.  இடையில் குறுக்கிட்டாலும் பிரச்சனை வரும்.  டி.வி. சீரியல்கள் முடிந்து அவள் வருவதற்குள் பெரும்பாலும் நான் தூங்கி விடுவேன். நள்ளிரவில் இருவரும் விழித்துக் கொண்டால், நான் வாங்கி வந்த புடவையை காட்ட எண்ணுவது உண்டு.  அதிலும் ஒரு சிறிய பிரச்சனை உண்டு. 

அவளாகவே எங்கே போனீர்கள், என்ன வாங்கிண்டு வந்தீர்கள் என்று ஆசையாகக் கேட்க மாட்டாளா என்று நினைப்பேன்.

கல்யாணம் ஆகி மூணு மாமாங்கத்திற்கு மேல் ஆகி விட்டது. அந்த நாள் முதல் இந்த நாள் வரை அது போல எதுவும் கேட்டதே கிடையாதே; இன்று மட்டும் புதிதாகக் கேட்டு விடப் போகிறாளா என்ன, என்று என்னை நானே சமாதானம் செய்து கொண்டு, புடவை வாங்கி வந்த விஷயத்தை மெதுவாக எடுத்துரைப்பேன்.  ”இப்போ எதுக்குப் புடவை?  வீட்டில் தான் நிறைய புடவைகள் பிரித்துக் கட்டிக் கொள்ளாமல் புதிதாக இருக்கின்றனவே!” என்பாள்.

எதற்கும் ஆசைப் படமாட்டாள்.  அவஸ்தை கொடுக்க மாட்டாள்.  ஒரு விதத்தில் நான் அதிர்ஷ்டசாலி என்று தான் சொல்ல வேண்டும். ”இன்னும் நாலு நாட்களில் நமக்கு திருமண நாள் வருகிறதே, அதற்காகத்தான்” என்பேன்.  அதைக் காதில் வாங்கிக் கொண்டாளோ என்னவோ மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்து விட்டதாக அறிந்து கொள்வேன். 

சமயத்தில் வாங்கி வந்த புடவையை அவள் பார்த்து விடும் வாய்ப்பு ஏற்பட்டால் ”நன்றாக இருக்கிறது.  எனக்கு ரொம்பவும் பிடித்துள்ளது” என்று ஒரு முறையேனும் வாய்தவறியும் சொல்லி விடாமல் சர்வ ஜாக்கிரதையாக இருந்து விடுவாள்.

மின் விளக்கு வெளிச்சத்திலும், சூரிய வெளிச்சத்திலும் பல முறை பார்த்து விட்டு அதை ஒரு ஓரமாக அலட்சியமாக வைத்து விட்டு, ”எந்தக் கடையில் வாங்கினீர்கள், என்ன விலை என்பதைத் தெரிந்து கொண்டு, பில் இருக்கிறதா, அது பத்திரமாக இருக்கட்டும்.  தேவைப்பட்டால் இதைக் கொடுத்து விட்டு வேறு புடவை மாற்றி வாங்கி வந்து விடலாம்” என்பாள்.

“திரும்பத் திரும்ப இந்தப் பச்சையும் நீலமும் தான் அமைகிறது”  என்றும் சொல்வதுண்டு. ”கண்ணைப் பறிப்பது போல, உடம்பு பூராவும் பளபளவென்று ஜரிகையுடன் உள்ளதே, இதெல்லாம் சிறுசுகள் கட்டிக் கொள்ளலாம்.  நான் கட்டிக் கொண்டால் நன்றாக இருக்காது.  குடுகுடுன்னு போய் எதையாவது வாங்கி வந்து விடுகிறீர்கள்.  பரவாயில்லை.  யாராவது சொந்தக்கார சிறுவயசுப் பெண்கள் நம் வீட்டுக்கு வந்தால், வெற்றிலை பாக்கு மஞ்சள் குங்குமத்துடன் கொடுத்து விட்டால் போச்சு” என்பாள்.

அது போல யாராவது வரும் போது இதைப் பற்றிய ஞாபகமே சுத்தமாக வராது என்பது தனி விஷயம்.

உள்ளூரில் உள்ள தன் சமவயதுள்ள மூத்த சம்பந்தி அம்மாள் வரும் போது மட்டும், அந்தப் புடவையை ஞாபகமாக எடுத்துக் காட்டி அபிப்ராயம் கேட்பதுண்டு.

மிகவும் நாகரீகமான மற்றும் விவரமான அந்த அம்மாள் திருவாய் மலர்ந்தருளி என்ன சொல்கிறார்களோ அதைப் பொறுத்தே புடவையை கட்டிக் கொள்வதோ, யாருக்காவது வஸ்த்ர தானமாக கொடுத்து விடுவதோ அல்லது கடைக்குப்போய் அவர்களை விட்டே மாற்றிக் கொண்டு வரச் சொல்வதோ நிகழும்.  இதெல்லாம் அவ்வப்போது நடந்து வந்த பழைய கதைகள்.

சமீபத்தில் ஒரு நாள் நான் வாங்கிக்கொடுத்தப் புதுப் புடவையொன்றை சம்பந்தியம்மாள் தந்த ஒப்புதல் மற்றும் சிவாரிசின் அடிப்படையில் என் மனைவி கட்டிக்கொள்ள நேர்ந்தது.   


அது சமயம், எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்து மிகவும் சுவாதீனமாகப் பழகும் பெண் ஒருத்தி, “மாமி, வாவ்.....  இந்தப்புடவை உங்களுக்கு சூப்பராக இருக்கு, திடீரென்று ஒரு பத்து வயசுக்குறைஞ்சாபோல இருக்கிறீங்க, நல்ல கலர், நல்ல டிசைன், லைட் வெயிட்டாக, ஷைனிங் ஆக இருக்கு. பார்டரும், தலைப்பும் படு ஜோர் மாமி; எங்கே வாங்கினேள்? நம்ம ஊரா - வெளியூரா? எந்தக்கடையில் வாங்கினேள்? யார் செலெக்‌ஷன்? என்ன விலை ?” என ஆச்சர்யமாகப் பல கேள்விகளைக் கேட்கலானாள்.

அவளின் எந்தக்கேள்விகளுக்குமே பதில் அளிக்க முடியாத என் மனைவி, “எனக்கு ஒன்றுமே தெரியாதும்மா; எல்லாம் எங்காத்து மாமாவைக் கேட்டால் தான் தெரியும். அவர் தான் வாங்கிவந்தார்” என்று சொல்லி நழுவப்பார்த்தாள் .  


வந்தவள் சும்மா இல்லாமல், ”அதானே பார்த்தேன், சும்மா சொல்லக்கூடாது மாமி, உங்காத்து மாமா கற்பனையும், ரசனையும் அலாதியானது, நீங்க ரொம்பக்கொடுத்து வச்சவங்க; அடிக்கடி அவர் பெயர் பத்திரிகைகளில் வருகிறது என்றால் சும்மாவா பின்னே?


அடுத்த முறை நான் புடவை எடுக்கப்போகும் போது, என் ஸ்கூட்டர் பின்னாடி உங்காத்து மாமாவை உட்கார வைத்துக்கொண்டு கடைக்குக்கூட்டிப்போய்,அவரைவிட்டே செலெக்ட் செய்யச்சொல்லி,  அவர் எது எடுத்துத்தருகிறாரோ அதைத்தான் வாங்கிக்கட்டிக்கப் போகிறேன் ” என்று உசிப்பி விட்டாள்.

என்னவளுக்கு கண்ணில் நீர் வராத குறை தான்.  விட்டால் அந்தப்பெண் என் கைகளைப்பிடித்து குலுக்கி பாராட்டவும் செய்வாள் என்பது எனக்கும் என் மனைவிக்கும் நன்றாகவே தெரியும். அந்தளவு மிகவும் சோஷியல் டைப் அந்தப்பெண். 


என்னவள் என்னைப்பார்த்து ”நீர் எதற்கு இன்னும் இங்கு நிற்கிறீர் என்பதுபோல ஒரு முறை முறைத்துவிட்டு, கையில் கிடுக்கியுடன் சமையல் அறைக்குள் புகுந்தாள். நானும் வெளியில் எங்கோ புறப்படுவதுபோல கிளம்பி விட்டேன்.   பிறகு முழுசா மூன்று நாட்களுக்கு என்னுடன் பேசவே இல்லையே. அவ்வளவு ஒரு பொஸஸிவ்நெஸ், அவளுக்கு என் மேல்.  


அன்பையும், பாசத்தையும், பிரியத்தையும் நேருக்குநேர் அவ்வப்போது பகிர்ந்து கொள்ள மாட்டாளே தவிர, இதுபோல வேறு யாராவது உசிப்பிவிட்டால் போச்சு! “நம்மாளு, நமக்கு மட்டும் தான்; இவள் யாரு குறுக்கே” என்று கொதித்தெழுந்து விடும் சுபாவம் கொண்டவள். 


சரி ....... சரி, பழம்கதையெல்லாம் இப்போது எதற்கு. இன்றைய புதுக்கதைக்குப் போவோம்.

இன்று அடியேன் ஜவுளிக்கடைக்குச் செல்வது அடியோடு வேறு ஒரு முக்கியமான விஷயமாக.   ஒரு பெண்ணுக்கு சுடிதார் எடுப்பதற்காக.

எங்களுக்கு மூன்று மகன்கள் மட்டுமே.  முதல் இருவருக்கும் திருமணம் ஆகி வெளி நாட்டிலும், வெளியூரிலும் உள்ளனர்.  மூன்றாவது மகனுக்கும் வெளியூரில் தான் வேலை.  அவனுக்குத் திருமணம் செய்துவைக்க நாங்கள் இருக்கும் உள்ளூரிலேயே பெண் பார்த்து பிடித்துப் போய், நிச்சயதார்த்த தேதி முதலியன பற்றிய பேச்சு வார்த்தைகளும் வெற்றிகரமாக முடிந்துள்ளது.

இந்தப் பெண் பார்க்கும் படலத்திற்கும் நிச்சயதார்த்த தினத்திற்கும் இடைவெளி சற்று அதிகம் உள்ளது.   இந்த இடைவெளியில் அந்தப் பெண்ணுக்கு பிறந்த நாள் வருகிறது.

அந்தப் பெண்ணின் பிறந்த நாளுக்கு, வருங்கால மாமனார் மாமியார் என்ற முறையில் ஏதாவது நினைவுப் பரிசுகள் தர வேண்டும் என்ற ஆவலில் இன்று மீண்டும் என்னுடைய ஜவுளிக்கடை பிரவேசம்.

கல்லூரிப் படிப்பை சமீபத்தில் முடித்த இளம் வயது பெண் தானே, நல்ல சுடிதார் ஒன்று வாங்கிக் கொடுப்போம்.  பிறகு வயதானால் எவ்வளவோ புடவைகள் கட்டிக் கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்குமே என்று நினைத்து ரெடிமேட் சுடிதார்கள் விற்கும் பிரபல ஜவுளிக்கடைக்குள், நான் இப்போது நுழைகிறேன்.

தொடரும் 


[ இந்தக்கதையின் அடுத்த பகுதி வரும் சனி க்கிழமை 23-04-2011 அன்று வெளியாகும் ]

ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

இ னி ய செ ய் தி - 6

அன்புள்ள வலைப்பூ நண்பர்களுக்கு,


========================================================================


24.04.2011 தேதியிட்ட “கல்கி” வார இதழின் 
பக்கம் எண் : 83 இல் வெளியாகியுள்ள அறிவிப்பு




”வித்யாசத்தில் இருக்குது வெற்றி” தொடரின் ஒவ்வொரு இதழிலும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஆர்வத்துடன் தொடர்ந்து பங்கேற்ற எண்ணற்ற வாசகர்களுக்கு நன்றி.  

பிரசுரிக்கப்பட்டவற்றில் அதிக எண்ணிக்கையில் வித்யாசமான விடைகளை அளித்தவர்களாக கீழ்க்கண்ட வாசகர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

அவர்களுக்கு புத்தகப்பரிசு அனுப்பி வைக்கப்படுகிறது. வாழ்த்துக்கள்..... !


1) வை. கோபாலகிருஷ்ணன், திருச்சி

2) சிதம்பரம் என். ராமசந்திரன், நாமக்கல்

3) ஆர்.ஜி. பிரேமா, நெல்லை 


========================================================================

”கல்கி” தமிழ் வார இதழில் கடந்த 12 வாரங்களாக ”வித்யாசத்தில் இருக்குது வெற்றி” என்னும் மிகவும் சுவாரஸ்யமான தொடர் கட்டுரை ஜி.எஸ்.எஸ் என்பவரால் தொடர்ந்து எழுதப்பட்டு வந்தது.  

அந்தத்தொடர் கட்டுரைக்கு இடையில் ஒரு குறிப்பிட்ட சம்பவமும் அதற்கான ஒரு கேள்வியும் ஒவ்வொரு வாரமும் கேட்கப்பட்டு வந்தன. அந்தக்கேள்விக்கான விடையை மாத்திமாத்தி யோசித்து வித்யாசமான பதில்களாக அதிகபட்சம் எவ்வளவு தரமுடியுமோ அவ்வளவு தரவேண்டும் என்பதே வாசகர்களுக்கான போட்டியாகும். 

தொடர்ந்து 12 வாரங்களும் நானும் கலந்து கொண்டு, ஒவ்வொரு வாரமும் அதிகபட்சம் விடைகள், மிகவும் வித்யாசமான முறையில் கொடுத்திருந்தேன். 

என் பெயர் இதுவரை ஏழு முறைகள் தேர்வானவர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்தது என்ற விபரம், கீழ்க்கண்ட “கல்கி” இதழ்களில் அவ்வப்போது அறிவிக்கப்பட்டிருந்தன.

1) 30.01.2011 கல்கி இதழ் பக்கம் எண் 85
2) 27.02.2011 கல்கி இதழ் பக்கம் எண் 54 
3) 13.03.2011 கல்கி இதழ் பக்கம் எண் 87
4) 27.03.2011 கல்கி இதழ் பக்கம் எண் 70
5) 03.04.2011 கல்கி இதழ் பக்கம் எண் 69
6) 24.04.2011 கல்கி இதழ் பக்கம் எண் 82
7) 24.04.2011 கல்கி இதழ் பக்கம் எண் 83 

இன்று வெளியான 24.04.2011 கல்கி இதழில் ஒட்டுமொத்தமாக 12 வாரங்களாக நடைபெறும் இந்தத்தொடர்ப்போட்டியில் வெற்றிபெற்றவர்கள் பெயர்கள், இறுதிப்பட்டியலாக அறிவிக்கப்பட்டுள்ளன. 

அந்த ஒட்டுமொத்த வெற்றியாளர்களின் பெயர்களுக்கான இறுதிப்பட்டியல் வெளியீட்டு அறிவிப்பில்,  என் பெயர் முதலிடம் வகிக்கிறது என்பதைத் தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.



கல்கி அட்டைப்படம் மேலே.

வெற்றி அறிவிப்பு கீழே. 



அளிக்கப்பட்டப் பரிசுப்புத்தகங்கள்
 மேலேயும் கீழேயும்
ஆக இரண்டு.




என்றும் உங்கள் அன்புள்ள
வை. கோபாலகிருஷ்ணன்

புதன், 13 ஏப்ரல், 2011

அ ஞ் ச லை - 6 [ இறுதிப்பகுதி ] பகுதி 6 of 6


முன்பகுதி முடிந்த இடம்:

”இது யார் குழைந்தைங்க?” ஒருவித ஏக்கத்துடனும், மிகுந்த படபடப்புடனும் கேட்டாள், மல்லிகா.
--------------------------------

“தெரியாது மல்லிகா .... ஆனால் இது இன்றுமுதல் நம் குழந்தை தான். அநாதைக் குழந்தைகள் காப்பகத்திற்குப்போய் தத்து எடுத்து வந்துவிட்டேன்.  

அன்றொரு நாள் நீயும் நானும் அங்கு போய் பதிவு செய்துவிட்டு வந்தபோது, இதுபோல நமக்குப்பிடித்தமான குழந்தை ஏதும் அங்கு இல்லாததால், ஏமாற்றத்துடன் திரும்பி வந்து விட்டோமே, ஞாபகம் இருக்கிறதா?  

இந்தக்குழந்தை சமீபத்தில் தான் அங்கு வந்து சேர்ந்துள்ளது. தாமதம் செய்தால் இதையும் வேறு யாராவது எடுத்துக்கிட்டு போயிடுவாங்க. அதனால் தான் அவசரமாக இதைக்கூட்டி வந்து விட்டேன். வரும் வழியில் அதற்கு வேண்டிய எல்லாப்பொருட்களையும் ஆசை ஆசையா வாங்கி வந்துவிட்டேன்.

தயவுசெய்து நீயும் இனிமேல் இதை நம் குழந்தையாகவே ஏற்றுக்கொள்ளணும். இவன் வந்தவேளை, நமக்கே கூட, வேறு ஒரு குழந்தை பிறக்கும் பாக்கியம் ஏற்படலாம்”  என்றார், சிவகுரு.

தன் டிஜிட்டல் காமராவையும், வீடியோ காமராவையும் கொண்டு, மல்லிகாவுடன் குழந்தையையும் சேர்த்து, பலவித போஸ்களில் படம் பிடித்து பதிவு செய்தார் சிவகுரு.

குழந்தையின் கன்னத்தில் ஏற்படும் குழிவிழும் சிரிப்பு மல்லிகாவின் மனதை மிகவும் மயக்கத்தான் செய்தது. அவளின் அன்றைய மகிழ்ச்சிக்கு ஓர் எல்லையே இல்லாமல் இருந்தது.

சிவகுரு வாங்கி வந்திருந்த மிகப்பெரிய ஆனால் வெயிட் இல்லாத பந்தை எடுத்து மல்லிகா அந்தக்குழந்தையுடன் ஆசை தீர கைகளாலும், கால்களாலும், தட்டி, அடித்து, உதைத்து, வாசல்புற பெரிய ஹாலில் ஓடி ஆடி மகிழ்ச்சியுடன் விளையாட ஆரம்பித்தாள். அந்தக்குழந்தையும் கடகடவென்று சிரித்தபடியே அவளுக்கு ஈடு கொடுத்து விளையாடி அவளை மிகவும் மகிழ்வித்தது.

சமீபகாலத்தில் இவ்வளவு ஒரு சந்தோஷமான முகத்துடன் தன் மனைவியைக் கண்டிராத சிவகுரு, தன் இல்வாழ்க்கையில் வஸந்தமான ஒரு அத்தியாயம் இந்தக்குழந்தையின் வருகையினால் தொடங்கியுள்ளது என்பதை தெள்ளத்தெளிவாகவே உணர்ந்து மகிழ்ந்தார்.  

தான் வாங்கி வந்துள்ள மற்ற விளையாட்டு சாமான்களை ஒவ்வொன்றாகப் பிரித்து மற்றொரு அறையின் தரையில் கடை பரப்பிக்கொண்டிருந்தார், சிவகுரு.



.........
...................
.............................
........................................



சற்று நேரம் கழித்து அங்கு வந்து வாசல் கதவோரம் நின்ற அஞ்சலை, மிகவும் மெதுவாக காலிங் பெல்லை அழுத்த, மல்லிகாவே கதவைத்திறந்தாள். மறுநாள் முதல் பழையபடி வீட்டு வேலைகள் செய்ய வந்து விடுவதாகச் சொன்னாள், மல்லிகாவிடம் அஞ்சலை. 

இதைக்கேட்ட மல்லிகாவுக்கு காதில் தேன் பாய்வது போலத்தோன்றியது.

”கண்டிப்பாக வந்துடு அஞ்சலை. எங்களின் இந்த ராஜாப்பயலை நீ தான் இனிமேல் பொறுப்பாகப் பார்த்துக்கொள்ளணும்” என்று சொல்லி குழந்தையை அஞ்சலைக்கு அறிமுகம் செய்ய ஆரம்பித்தாள் மல்லிகா.

அந்தப்பணக்காரக் குழந்தையை முதன்முதலாக மிகவும் அதிசயமாகப்பார்த்த அஞ்சலையிடம், அந்தக்குழந்தை ஒரே ஓட்டமாக ஓடி வந்து கட்டிப்பிடித்துக் கொண்டது. 

இதைப்பார்த்துச் சிரித்த மல்லிகா அதன் வேற்றுமுகம் தெரியாத மழலைச்செயலைத் தனக்குள் எண்ணி வியந்து கொண்டாள்.  

“பாரு, அஞ்சலை, இவனை நீ இப்போதான் முதன்முதலாகப் பார்க்கிறாய்; அதற்குள் ரொம்ப நாட்கள் உன்னிடம் பழகியவன் போல ஓடி வந்து உன்னைக்கட்டிக்கொள்கிறான். கொஞ்சம் கூட வேற்றுமுகம் தெரியாத குழந்தையாக இருக்கிறான். யாரைப்பார்த்தாலும் உடனே சிரித்துக்கொண்டே அவர்களிடம் போய் விடுகிறான்” என்று அந்தக்குழந்தயைப்பற்றி அஞ்சலையிடம் சொல்லி பூரித்துப்போனாள், மல்லிகா. 

”ஆமாம்மா, கள்ளங்கபடமில்லாமல், சூதுவாது தெரியாதவனாகத்தான் இருப்பான் போலிருக்கு இந்தக்குழந்தை” என்று சொல்லி ஒருவாறு சமாளிப்பதற்குள் ஏதோ ஒரு குற்ற உணர்ச்சியில் தவித்தாள், அஞ்சலை. 

முள் போன்ற ஏதோ ஒன்று தன் தொண்டையில் மாட்டி துப்பவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் அவஸ்தை அளிப்பது போல உணர்ந்தாள் அஞ்சலை.

சிவகுரு ஐயாவுக்கு, தான் செய்துகொடுத்த சத்தியம், அது தனக்குப்பிறந்த,  தன் குழந்தையேதான், என்ற உண்மையை மல்லிகாவிடம் கூற வந்த அஞ்சலையைத் தடுத்து நிறுத்திவிட்டது.

அங்கு சிவகுருவால் தரையில் பரப்பி வைக்கப்பட்டிருந்த விளையாட்டு சாமான்களின் மேல் அந்தக் குழந்தையின் கவனம் ஈடுபடும் நேரமாகப்பார்த்து, மல்லிகாவிடம் விடைபெற்று, தன் குடிசையை அடைந்தாள் அஞ்சலை.

அந்த லாட்ஜ் ரூமைக்காலிசெய்து விட்டு தன்னை தன் குடிசை வாசலில் காரில் இறக்கி விட்டுச்செல்லும் முன், தன்னிடம் சிவகுரு ஐயா அளித்த மூன்று லட்சம் ரூபாய்க்கான செக் (காசோலை) போடப்பட்ட கவரைத் தேடி எடுத்தாள்.  

அதை உற்று நோக்கி, 3 லட்சங்கள் என்றால் அது எப்படியிருக்கும்? அதில் 3 என்ற நம்பருக்குப்பிறகு எவ்வளவு பூஜ்யங்கள் போடப்பட்டிருக்கும் என்று அறிய விரும்பினாள். 

தன் இன்றைய இல்வாழ்க்கைப்போன்று தோன்றிய அந்த பூஜ்யங்களையே திரும்பத்திரும்ப எண்ணிப் பார்த்துக்கொண்டிருந்தாள், அஞ்சலை.

இன்னும் ஒரு வாரத்திற்குள் போட்டோ படங்கள் எடுத்து, பான் நம்பருக்கு அப்ளை செய்து, பேங்குக்குக்கூட்டிப்போய் ஃபிக்ஸட் டெபாஸிட் ஆக இந்தத்தொகையை போட்டுத்தருவதாகவும், அதுவரை இந்த செக் பத்திரமாக இருக்கட்டும் என்று சொல்லிப்போயிருந்தார், சிவகுரு.  

ஒரு வயது கூட பூர்த்தியாகாத தன் மகனால் தனக்கு மாதாமாதம் சுளையாக ரூ. 2500 க்குக்குறையாமல், இந்த டெபாஸிட் தொகை மூலம், நிரந்தர வருமானமாகக் கிடைக்கும் என்று சிவகுரு ஐயா சொன்னதை எண்ணி ஒருபுறம் மகிழ்ச்சியடைந்தாள்.

தினமும் தன் குழந்தையைப்போய்,  தான் பார்க்க முடியும், அவனுடன் பழக முடியும், அவனுடனேயே இருந்து அவனைப்பராமரிக்கவும், கொஞ்சவும்கூட முடியும், அதற்கெல்லாம் தனியாக மாத ஊதியமும் பெற முடியும் என்றாலும், தன் குழந்தை என்ற உரிமை கொண்டாடமட்டும் முடியாது என்பதை நினைக்கையில் அவள் மனம் மிகவும் வருந்தியது. 

அதைவிட அந்த மல்லிகா அம்மாவிடம் இந்த உண்மையை மறைப்பது, அவள் மனதுக்கு மிகவும் சங்கடமான சமாசாரமாகவே இருந்தது. 

ஆனாலும்,தான் இன்று இருக்கும் நிலைமையில் ஒன்றைப்பெற வேண்டுமானால் மற்றொன்றை இழக்கத்தான் வேண்டும்; வேறு வழியில்லை என்று தன்னைத்தானே சமாதானப் படுத்திக்கொண்டு, தன் மனதைக் கல்லாக்கிக்கொண்டு, படுத்துத்தூங்கப்போனாள்.

..............
......................
................................

தனிமையில் தவித்த அவளுக்கு, நேற்றுவரை தன்னுடன் இருந்த, தன் குழந்தை இப்போது தன்னுடன் இல்லாததாலும், அந்தக்குழந்தையின் பிரிவு தாங்கமுடியாத வேதனை அளித்ததாலும், அன்று இரவு முழுவதும் தூக்கமின்றித் தவிக்கலானாள்.

இருள் அகலுமா? கோழி கூவுமா? பொழுது விடியுமா? எனக்கண்ணீருடன் காத்திருந்தாள், பாவம் ........................ அந்த அஞ்சலை.



-o-o-o-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-o-o-o-





இந்தச்சிறுகதை லண்டனிலிருந்து வெளிவரும் “புதினம்” தமிழ் இதழின் பத்தாம் ஆண்டு நிறைவு விழாவினையொட்டி,  2006 ஆம் ஆண்டு, நடத்தப்பட்ட ‘உலகளாவிய சிறுகதைப்போட்டியில்’ ஆறுதல் பரிசுக்குத்தேர்வாகி, புதினம் வெளியீடான “பரிசு பெற்ற ‘புதினம்’ சிறுகதைகள்” என்ற நூலின் பக்கம் எண்கள் 126 முதல் 134 வரை அச்சிடப்பட்டு,  வெளியானது என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.  

இந்த  “பரிசு பெற்ற ‘புதினம்’ சிறுகதைகள்” என்ற நூல், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நூலகங்களிலும் இடம்பெற்றிருப்பதாக, ஒருசில வெளியூர் வாசகர்களின் பாராட்டுக்கடிதங்கள் மூலம் அறிந்து கொண்டேன்.   

என்றும் அன்புடன் தங்கள்,
வை. கோபாலகிருஷ்ணன்